Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

பெயர்ச்சொல் – வினைச்சொல் – எச்சம்

$
0
0

imagesஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 13

‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். இப்போது நாம் பார்க்கவிருக்கும் உதாரணத்தில் ஒருவர், ஆறு பேரிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார், அதுவும் ஆறுவிதமான பெயர்கள்:

* பொன்னன்
* மதுரைக்காரன்
* கார்த்திகையான்
* முட்டைக்கண்ணன்
* நல்லவன்
* கவிஞன்

இதுபோன்ற வேடிக்கையான செல்லப் பெயர்கள் எல்லாருக்கும் உண்டு. அப்படி ஒரு கற்பனை செய்துகொண்டு இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் எப்படி வந்திருக்கும் என யோசிப்போம்:

1. பொன்னன் : பொன் + அன் : தங்கத்தை உடையவன்
2. மதுரை சொந்த ஊர், அதனால் மதுரைக்காரன்
3. கார்த்திகை மாதம் பிறந்தவன், அதனால் கார்த்திகையான்
4. பெரிய முட்டைக் கண்களைக் கொண்டவன், அதனால் முட்டைக்கண்ணன்
5. எல்லாரிடமும் நன்கு பழகுகிறவன், அதனால் நல்லவன்
6. கவிதை எழுதுகிறவன், அதனால் கவிஞன்

மேற்கண்ட பட்டியலைக் கவனித்துப் பார்த்தால் இந்த ஆறு பெயர்களும் வெவ்வேறு காரணங்களால் வந்திருப்பவை என்பது புரியும். என்ன காரணங்கள்?

1. பொன்னன் : பொன் / தங்கம் என்கிற பொருளால் வந்த பெயர். ஆகவே இது பொருள் பெயர்ப் பகுபதம்
2. மதுரையான் : மதுரை என்ற இடத்தால் வந்த பெயர். ஆகவே இது இடப் பெயர்ப் பகுபதம்
3. கார்த்திகையான் : ஒரு குறிப்பிட்ட காலத்தால் வந்த பெயர். ஆகவே இது காலப் பெயர்ப் பகுபதம்
4. முட்டைக்கண்ணன் : ஓர் உறுப்பு / சினையால் வந்த பெயர். ஆகவே இது சினைப் பெயர்ப் பகுபதம், அல்லது உறுப்புப் பெயர்ப் பகுபதம்
5. நல்லவன் : ஒரு குணத்தால் வந்த பெயர். ஆகவே இது குணப் பெயர்ப் பகுபதம்
6. கவிஞன் : ஒரு செயல் அல்லது தொழிலால் வந்த பெயர். ஆகவே இது தொழில் பெயர்ப் பகுபதம்

ஆக, பெயர்ப் பகுபதத்தில் மொத்தம் ஆறு வகைகள். இவற்றைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைத் தருகிறேன். இவை ஒவ்வொன்றும் மேற்சொன்ன ஆறில் எந்த வகை என்று யோசியுங்கள்:

பணக்காரன், ராக்கோழி, திருடன், தொப்பையன், நாட்டுப்புறத்தான், உத்தமன்

அடுத்து, வினைப் பகுபதம். இதில் இரண்டு வகைகள்:

1. முற்று
2. எச்சம்

இங்கே ‘வினை’ என்பது ஒரு செயலைக் குறிக்கிறது. அது முற்றுப்பெற்றுவிட்டதா அல்லது மீதமிருக்கிறதா என்பதைப் பொறுத்து அதனை முற்று அல்லது எச்சம் என்று அழைக்கிறோம்.

உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் நடத்தல் என்ற வினை (செயல்) முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இது ”முற்று”.

அடுத்து, கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னும் இரு சொற்கள், ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை. இவற்றுக்கும் ‘நடந்தான்’க்கும் என்ன வித்தியாசம்?

’நடந்த’, ‘நடந்து’ என்பவையும் நடத்தல் என்ற வினையைக் குறிப்பதுதான். ஆனால், அந்தச் செயல் இங்கே முற்றுப்பெறவில்லை. இவற்றைத் தொடர்ந்து இன்னொரு சொல் வரவேண்டும். இதுபோல:

* நடந்த ராமன்
* நடந்த நாடகம்
* நடந்து முடித்தான்

ஆக, ‘நடந்தான்’ என்பது முற்று, ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை எச்சம், விஷயம் முற்றுப்பெறாமல் இன்னும் ஏதோ எஞ்சியுள்ளதால் அந்தப் பெயர்.

எச்சத்தில் இரண்டு வகை உண்டு:

* பெயரெச்சம்
* வினையெச்சம்

இவற்றைப் புரிந்துகொள்வது மிக எளிது. எச்சத்துக்குப் பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்தால் அது பெயரெச்சம், வினைச்சொல் வந்தால் அது பெயரெச்சம்.

உதாரணமாக:

* ‘நடந்த ராமன்’ என்பதில் ‘நடந்த’க்குப் பின்னால் ‘ராமன்’ என்ற பெயர்ச்சொல் வருகிறது, ஆகவே, அது பெயரெச்சம்.

* ‘நடந்து முடித்தான்’ என்பதில் ‘நடந்து’க்குப் பின்னால் ’முடித்தான்’ என்ற வினைச்சொல் வருகிறது. ஆகவே, அது வினையெச்சம்.

இந்த “முற்று”வில் ஒரு சிறப்பு வகை, அதன் பெயர் தெரிநிலை வினைமுற்று.

‘தெரிநிலை’ என்றால், நிலைமை (status) தெரிகிறது என்று அர்த்தம், அதாவது ஒரு சொல் அங்கே என்ன நடக்கிறது என்கிற நிலைமையைத் தெரிவிக்கிறது.

உதாரணமாக, ‘ராஜேஷ் மசால் தோசை சாப்பிட்டான்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அலசுவோம்.

* இங்கே ராஜேஷ் என்பது பெயர்ச்சொல்
* மசால் தோசை என்பதும் பெயர்ச்சொல்
* சாப்பிட்டான் என்பது வினைச்சொல், இதோடு அந்தச் செயல் முற்றுப்பெறுவதால், வினை முற்று
* வெறும் வினைமுற்று அல்ல, தெரிநிலை வினைமுற்று

‘தெரிநிலை’ என்று சொல்லும் அளவுக்கு, இந்தச் சிறிய சொல் அப்படி என்ன விஷயங்களைத் தெரிவிக்கிறது? இதற்கான நன்னூல் சூத்திரம்:

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.

ஆக, இதிலிருந்து நாம் ஆறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்?

* செய்பவன் : யார் செய்தார்கள்? (ராஜேஷ்)
* கருவி : எதைக் கொண்டு செய்தார்கள்? (கை அல்லது ஸ்பூன்)
* நிலம் : எங்கே செய்தார்கள்? (ராஜேஷின் வீட்டில், அல்லது ஹோட்டலில்)
* செயல் : என்ன செய்தார்கள்? (சாப்பிட்டார்கள்)
* காலம் : எப்போது செய்தார்கள்? (ஏற்கெனவே சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்)
* செய்பொருள் : எதைச் செய்தார்கள்? அதாவது, எதைச் சாப்பிட்டார்கள்? (மசால் தோசை)

இப்படி ஒரு தெரிநிலை வினை முற்றை வைத்துக்கொண்டு ஆறு விதமான விஷயங்களைப்பற்றிப் பேசலாம், கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஒரு பயிற்சியாக, “கண்ணன் வெண்ணெய் தின்றான்” என்ற வாக்கியத்தில் இதே ஆறு கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.

அடுத்து, வினையாலணையும் பெயர். இதனை வினை + ஆல் + அணையும் + பெயர் என்று பிரிக்கவேண்டும். அதாவது, ஒரு செயலைச் செய்பவருக்கு அதுவே பெயராக வருவது.

உதாரணமாக, வந்தவர், சென்றவர், பாடியவர், சிரித்தவர், நடந்தவர், நடக்கிறவர், நடக்கப்போகிறவர்… இந்தச் சொற்கள் அனைத்திலும், ஒரு செயல் வருகிறது, அதுவே அந்தச் செயலைச் செய்தவருக்குப் பெயராகிவிடுகிறது. ஆகவே, இவை வினையாலணையும் பெயர்கள்.

இப்போது ஒரு வாக்கிய உதாரணத்தைப் பார்ப்போம்: ‘மேடையில் பாடியவன் நன்றாகப் பாடினான்’.

இங்கே பாடியவன், பாடினான் என்று இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டுக்கும் வேர்ச்சொல் ‘பாடுதல்’ என்ற வினைதான், ஆனால், இவற்றில் எது வினைமுற்று? எது வினையாலணையும் பெயர்?

வினைமுற்று, வினையாலணையும் பெயருக்கு நாம் பார்த்த விளக்கங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பதில் கண்டுபிடிப்பது சுலபம்:

* வினைமுற்று என்றால், அத்துடன் அந்தச் செயல் நிறைவு பெறவேண்டும், ‘பாடியவன்’ என்று சொன்னால் அந்தச் செயலோ, அந்த வாக்கியமோ நிறைவு பெறுவதில்லை, ஆகவே, அது வினைமுற்றாக இருக்கமுடியாது. ‘பாடினான்’தான் வினைமுற்று

* வினையாலணையும் பெயர் என்றால், ஒரு செயலைச் செய்தவருக்கு அதுவே பெயராகவேண்டும், பாடியதால் (வினை) அவர் பாடியவன் (பெயர்). ஆகவே இது வினையாலணையும் பெயர்.

கொஞ்சம் பொறுங்கள். மேலே ஒருவரைக் ‘கவிஞர்’ என்று சொன்னோம், அதற்குத் தொழில் பெயர்ப் பகுபதம் என்று பெயர் சூட்டினோம். ஆனால் இங்கே ‘பாடியவன்’ என்று சொல்லி அதை வினையாலணையும் பெயர் என்கிறோம். இரண்டும் ஒரேமாதிரிதானே இருக்கிறது?

ம்ஹூம், இல்லை. சில முக்கியமான வித்தியாசங்கள் உண்டு:

வித்தியாசம் 1: வினையாலணையும் பெயர் காலம் காட்டும், தொழில் பெயர் காலம் காட்டாது

வித்தியாசம் 2: தொழில் பெயர் படர்க்கையில்மட்டுமே வரும், வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிலும் வரும்

உதாரணமாக, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு முதல் வித்தியாசத்தைமட்டும் பேசுவோம்: பாடகர் & பாடியவர்.

* ‘பாடகர்’ என்று சொல்லும்போது, அவர் முன்பு பாடினாரா, இப்போது பாடுகிறாரா, இனிமேல்தான் பாடப்போகிறாரா என்பது தெரியவில்லை. காலம் காட்டவில்லை. ஆகவே, அது தொழில் பெயர்

* ஆனால் ‘பாடியவன்’ என்று சொல்லும்போது, அவர் ஏற்கெனவே பாடிவிட்டார் (கடந்த காலம்) என்பது தெரிகிறது. காலம் காட்டுகிறது. ஆகவே, அது வினையாலணையும் பெயர்

அடுத்து, இரண்டாவது வித்தியாசத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளைப்பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் இவற்றை First Person, Second Person, Third Person என்று சொல்வார்கள்.

* பேசுபவர் தன்னைப்பற்றியோ ஒரு குழுவாகத் தங்களைப்பற்றியோ சொல்வது தன்மை (நான், எனது, என்னுடைய, எனக்கு, எங்களுக்கு).

* பேசுபவர் முன்னிலையில், அதாவது, தனக்கு முன்பாக நிற்கிற ஒருவரைப்பற்றியோ, அல்லது ஒரு குழுவைப் பற்றியோ சொல்வது முன்னிலை (நீ, உனது, உன்னுடைய, உனக்கும் உங்களுக்கு)
* இவர்கள் பேசும் இடத்திலேயே இல்லாத ஒருவரைப்பற்றிப் பேசினால், அது படர்க்கை (அவன், அவள், அவனுடைய, அவளுடைய, அவனுக்கு, அவளுக்கு)

இந்தப் பின்னணியில் யோசிக்கும்போது, தொழில் பெயர் எப்போதும் படர்க்கையில்மட்டுமே வரும், அதாவது, நீங்களோ நானோ அல்லாத ஒரு மூன்றாம் மனிதரைப்பற்றிமட்டுமே அது பேசும். உதாரணமாக, பாடகர், கவிஞர், இயக்குநர், தையல்காரர், நடனக்கலைஞர்… இப்படி.

ஆனால் வினையாலணையும் பெயர் அப்படியில்லை. அது தன்மையிலும் வரும், முன்னிலையிலும் வரும், படர்க்கையிலும் வரும். இதோ இப்படி:

* பாடினேன் (பாடிய நான், தன்மை)
* பாடினாய் (பாடிய நீ, முன்னிலை)
* பாடியவன் (பாடிய இன்னொருவன், படர்க்கை)

கொஞ்சம் பொறுங்கள். ‘பாடினேன்’ என்றால் பாடிய செயல் முற்றுப்பெற்றுவிடுகிறதே. அது வினை முற்றுதானே, வினையாலணையும் பெயர் அல்லவே.

”பாடினேன்” என்ற சொல் வினை முற்றாகவும் வரும் (நான் சிறப்பாகப் பாடினேன்), அது வினையாலணையும் பெயராகவும் வரும் (சிறப்பாகப் பாடினேன் ஆதலால் நான் பரிசு பெற்றேன்).

இதை வைத்து ஒரு பிரமாதமான கதைகூட உண்டு.

கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் தேடி ஒரு வீட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருந்தது.

அந்த மணியைப் பார்த்த கண்ணனுக்குச் சந்தேகம். ‘ஏ மணியே, நான் இந்த வெண்ணெயை எடுக்கும்போது நீ சத்தம் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடமாட்டாயே?’ என்று கேட்டான்.

‘அடியேன்’ என்றது மணி.

இதைக் கேட்ட கண்ணன் சந்தோஷமாக மேலே ஏறி வெண்ணெயை எடுத்தான். சாப்பிட ஆரம்பித்தான்.

உடனே, அந்த மணி பலமாக ஒலித்தது. கண்ணன் கோபமாக, ‘மணியே, அடிக்கமாட்டேன் என்று என்னிடம் சொன்னாயே’ என்றான் அந்தா மணியிடம்.

‘இல்லை கண்ணா’ என்றது அந்த மணி, ‘நான் அடியேன் என்றுதான் சொன்னேன், அதை நீ அடிக்கமாட்டேன் என்று புரிந்துகொண்டால் அதற்கு நானா பொறுப்பு?’

‘அடியேன் என்றால் அடிக்கமாட்டேன் என்றுதானே அர்த்தம்?’

’ம்ஹூம்’ என்று குறும்பாகச் சிரித்தது அந்த மணி, ‘நான் சொன்னதன் அர்த்தம், நான் உனக்கு அடியவன், என்னுடைய தெய்வம் நீ சாப்பிடும்போது நான் அதைப் பார்த்து மகிழ்ச்சியாகச் சத்தம் போடுகிறேன்!’

இங்கே ‘அடியேன்’ என்பது ஒரு சொல். அதைக் கண்ணன் எப்படிப் புரிந்துகொண்டான்?

”அடியேன்”, அதாவது அடிக்கமாட்டேன். வினை முற்று.

ஆனால் அந்த மணி, அதே ‘அடியேன்’ என்ற சொல்லை எப்படிச் சொன்னது?

“அடியேன்”, அதாவது அடிபணிந்து நிற்கிற நான், வினையாலணையும் பெயர்!

கதை சரி, “அடியேன்” என்பது உண்மையிலேயே வினையாலணையும் பெயர்தானா? அல்லது, தொழில் பெயரா? நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்ட இந்த இரண்டு விஷயங்களை வைத்துப் பரிசோதித்துப்பாருங்கள்:

* வினையாலணையும் பெயர் காலம் காட்டவேண்டும், தொழில் பெயர் காலம் காட்டாது, “அடியேன்” என்பதில் காலம் தெரிகிறதா?

* வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்று மூன்றிலும் வரவேண்டும், ஆனால் தொழில் பெயர் படர்க்கையில்மட்டும் வரும், “அடியேன்” என்பது தன்மையா, முன்னிலையா, படர்க்கையா?

ஒருவேளை “அடியேன்” என்பது வினையாலணையும் பெயர் என்றால், அதற்குச் சமமான தொழில் பெயர் என்ன? ஒருவேளை அது தொழில் பெயர் என்றால், அதற்குச் சமமான வினையாலணையும் பெயர் என்ன?

இதைப்பற்றி யோசித்துவையுங்கள். அடுத்த அத்தியாயத்தில் பகுபதத்தைப் பகுத்துப் படிப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* பெயர்ச்சொல் வகைகள் (பொருள், இடம், காலம், சினை / உறுப்பு, குணம், தொழில்)
* வினைச்சொல் வகைகள் (முற்று, எச்சம்)
* எச்சத்தின் வகைகள் (பெயர், வினை)
* தெரிநிலை வினை முற்று
* வினையாலணையும் பெயர்
* வினையாலணையும் பெயர், தொழில் பெயர் வித்தியாசம்
* தன்மை, முன்னிலை, படர்க்கை

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!