Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

காம்ரேடுகள் கவனத்துக்கு

$
0
0

1390376470டெல்லியில் 2013 அக்டோபர் 30 அன்று சிபிஐ (எம்) கட்சி நடத்திய மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்டன. ‘மதவாதத்திலிருந்து நாட்டைக் காப்பது மட்டுமே இந்தக் கூட்டத்தின் நோக்கம்’ என்று இக்கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார்.

மதவாதம் என்று இந்தக் கட்சியினர் குறிப்பிடுவதெல்லாம் பா.ஜ.க. வின் அரசியலையும், நாடாளுமன்ற அதிகாரத்துக்கு வருவதற்காக அக்கட்சி நடத்தும் தேர்தல் போட்டியையும், பிரதம மந்திரி பதவி மீதான மோகத்தில் மோடி மேற்கொண்டு வரும் பிரசாரத்தையும்தானே தவிர, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் உண்மையான மதவாத உணர்வுகளையல்ல.

அவரவர் மதம் போதிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், மதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதும் பொதுவாக அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வழக்கமாகும்.  ஆனால், ஒரு சாரார் தங்களின் மத நம்பிக்கைகளைப் பொதுவில் வைத்து, மக்கள்மீது திணிக்கும் போதுதான் மதவாதம் தலைதூக்குகிறது.  இந்த மதவாதம் வெறும் கருத்தாக்கத்தோடு நிற்காமல், மதவெறியாக மாறி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது.  மனித உயிர்களைக் காவு வாங்குகிறது.  மக்களின் உடைமைகளைச் சூறையாடுகிறது.  மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கான சமூகச் சூழலையே அழித்துவிடுகிறது.

சகல மதங்களையும் கடைப்பிடிக்கும் சர்வ சமயவாதத்தையே இந்திய ஆட்சியாளர்கள் சமயச்சார்பின்மை என்று அழைக்கிறார்கள்.  அதையே சிபிஐ (எம்) கட்சியும் ஏற்றுக் கொள்கிறது.  இப்படிப் பலப்படித்தான சமயச்சார்பின்மை கண்ணோட்டம் கொண்டிருப்பதால்தான் இக்கட்சியினரால் சாதி-சமய, இனவாத, பிராந்தியவாதக் கட்சிகளோடு எளிதில் ஐக்கியமாகிவிட முடிகிறது.  இதன் விளைவாகவே இவர்கள் தேசியவாத காங்கிரஸ், அஇஅதிமுக (தற்போது தாற்காலிகமாக முறிந்திருக்கிறது – அதுவும் பெரிய கொள்கைக்காக உள்ளே சென்று, அந்த கொள்கை ஏற்கப்படவில்லை என வெளியே வரவில்லை – 2 சீட் கூட கிடையாது என்பதற்காக வெளியேற்றப்பட்டது), ஜார்கண்ட் விகாஸ் பரிஷ‌த், அசாம் கன பரிஷ‌த், போன்ற பிரிவினைவாதக் கட்சிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

அதோடு தாற்காலிகமாக எந்தெந்த கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றனவேஅவையனைத்தையும் மதவாதத்துக்கு எதிரான கட்சிகளென்று இவர்களாகவே மதிப்பிட்டு பறைசாற்றிக் கொள்கிறார்கள்.  இவர்களின் இந்த மேடையில் பங்கேற்ற தலைவர்கள் யாவருமே ஏதாவது ஒரு தருணத்தில், தங்களின் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டு, தேர்தலில் ஜெயித்து அவரவர் மாநிலங்களில் ஆட்சி அமைத்துக் கொண்டவர்கள்தாம்.

அதிமுக தற்போது பாஜக கூட்டணியில் இல்லை.  அதற்காக இவர் மதவாதத்துக்கு எதிரானவர் என்றாகிவிடுவாரா?  அயோத்திக்கு பூஜிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியவர்கள் அதிமுகவினர்.  குஜராத்தில் மோடி ஆட்சியமைத்தவுடன் விமானத்தில் சென்று அகமகிழ்ந்து வாழ்த்தியவர் செல்வி ஜெயலலிதா.  தமிழகத்தில் ஆட்சியமைந்ததும் மோடியை அழைத்து கெளரவித்தவர் இவர்.

மேற்படி மதவாத எதிர்ப்பு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரையில், ‘கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் மதவாதம் அதன் ஆபத்தான கரங்களைப் பரப்பி வருகிறது.  இதனால் மத மோதல்களும், மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் தமது அரசியலில் தலைதூக்கியுள்ளன’ என்று செல்வி ஜெயலலிதா கூறுகிறார்.  ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக நமது அரசியலில் தலைதூக்கியுள்ள மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் எவையெனக் குறிப்பிட மறந்துவிட்டார், இல்லையில்லை குறிப்பிடாமல் மறைத்துவிட்டார்.

இவர் மறைத்திருக்கலாம், ஆனால் இதன்மூலம் தனது உடன்பிறவா சகோதரரான மோடியையும், அவரது மதவெறி அரசியலையும் செல்வி.ஜெயலலிதா மறைத்துப் பாதுகாப்பதோடு, தனது இந்துத்துவ மத ஆதரவு நிலைப்பாட்டுக்கு மதச்சார்பின்மை முக்காடு போடுகிறார் என்ற உண்மை மார்க்சிஸ்ட் மேதாவிகளான பிரகாஷ் காரத், ராமகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுக்கு எட்டாமல் போனதுதான் விந்தை.

மூன்றாவது அணி கலகலத்துப் போய், தனது பிரதம மந்திரி கனவு நனவாகாது என்றால், இன்று மதச்சார்பின்மை அணியிலிருக்கும் அதிமுக மதவாத பாஜகவுடன் கைகோர்க்கும் என்ற தர்க்க நியாயம் கூட இவர்களின் பொது அறிவுக்கு எட்டாமல் போனது விந்தையிலும் விந்தை.

மேலும் மதவாதம் எனும்போது பாஜகவை மட்டும் குறிவைத்துத் தாக்குவதும், மதவாதத்துக்கு ஆதரவான பிற அரசியல் சக்திகளை அடையாளங்காண மறுப்பதும் இக்கட்சி தொடர்ந்து கடைப்பிடித்துவரும் வஞ்சகச் செயலாகும்.  1984ம் வருடம் காங்கிரஸ் ஆட்சியின்போது பம்பாயில் கூலி உயர்வுக்காகப் போராடிய மில் தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.  அதை இந்து முஸ்லீம் கலவரத்தின் விளைவு என சித்தரித்தது காங்கிரஸ்.  பாபர் மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ் ஆக இருக்கலாம், ஆனால் காங்கிரஸின் ஆசியுடன், இந்திய ராணுவம் துணை நிற்கத்தான் மசூதி இடிக்கப்பட்டது.  காங்கிரஸின் ஊழலைச் சுட்டிக்காட்டும் இவர்கள் இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக காங்கிரஸ் அனுமதிக்கிற நர வேட்டையைக் கண்டு கொள்வதில்லை.

கூட்டணியிலிருந்து விலகிவிட்டாலும் இன்னும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலேயே கருணாநிதியை இந்த மதவாத எதிர்ப்புக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை என திரு ராமகிருஷ்ணன் கூறினார்.  உண்மையில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் அரசியல் ரீதியான நுழைவுக்கு ஜெயலலிதா காரணமாக இருந்தாலும், அதன் மதவாத அரசியலை தமிழ் மண்ணில் வேறூன்றச் செய்தவர் கருணாநிதிதான்.  1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்து அது ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு உதவியவர் இவர்.  தன்னைப் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருபவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி 1992 ல் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக நின்றவர். குஜராத் கலவரம் பற்றி பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அது ஒரு மாநிலத்தின் பிரச்னை என்று பதில் கூறினார்.

இவ்வளவு ஏன்? பாபர் மசூதி இடிப்புக்கு முன்னோட்டமாக அத்வானி ஒரு மோட்டார் யாத்திரையை நடத்தினார். வழியெங்கும் வன்முறைகள் நிகழ்ந்தன.  ஆனால் மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு அத்வானியை கைது செய்யவில்லை.  மாறாக பிகாரில் நுழையும்போது லாலு பிரசாத் அவரைக் கைது செய்தார்.  இந்துக்கள் ஓட்டுகளை இழந்துவிடுவோம் என்று  ஜோதிபாசு அமைதியாக இருந்துவிட்டார்.

சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ இரண்டும் முழுமையாக முதலாளித்துவக் கட்சிகளாக அவதாரமெடுத்து பல வருடங்கள் கடந்து விட்டன. சிபிஐ (எம்) கட்சி தன்னை நாடாளுமன்ற கட்சியென்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.  அதற்கு பின்பாட்டுப்பாடும் சிபிஐ அம்மாவுக்குக் குழலுதும் அமைப்பாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.

சிபிஐ க்கு சொந்தமான அச்சகத்தில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக நோட்டீஸ் அடிப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டால் தனது உயர்ந்தபட்ச மார்க்சிய மெய்ஞானத்தைக் கொண்டு கொள்கை வேறு வியாபாரம் வேறு என்று புத்தம் புதிய பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்துகிறார் தா.பாண்டியன். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் சிபிஐ (எம்) கட்சி சென்னை நகரில் கட்டியிருக்கும் 3 மாடி அலுவலகத் திறப்பு விழாவுக்கு தமிழக பாஜக தலைவர்களையும் அழைத்து விருந்தோம்பல் செய்தது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளைக் கொண்டு வர வேண்டுமென்பதற்கு எதிராக ஊழல் மற்றும் ரத்தக்கறை படிந்து கிடக்கும் அத்தனை முதலாளித்துவக கட்சிகளுடனும் சேர்ந்து ஊளையிட்டு, தங்களின் ஊழல் ஆதரவு நிலைப்பாட்டை இந்தக் காம்ரேடுகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எப்படியாவது நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தங்கள் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜகவின் வெற்றிக்குத் தோள் கொடுத்த, அவர்களுடைய தயவால் பதவி அனுபவித்த பல்வேறு கட்சிகளுடன் இந்தத் தோழர்கள் தேர்தல் உறவு கொள்கின்றனர்.

செல்வி ஜெயலலிதாவைப் பிரதமராக்குவது குறித்துப் பரிசீலிப்போம் என்கிறார் சிபிஐ (எம்) கட்சியின் ராமகிருஷ்ணன்.  இவருக்கு ஒருபடி மேலே சென்று மோடியைவிடத் திறமையானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்கிறார் தா.பா (நன்றி ஜூ வி 25/09/13).  இதன்மூலம் 90 வருடங்களாகத் தங்கள் கட்சி செயல்பட்டு வந்தாலும் இந்தியப் பிரதமராகும் தகுதிபடைத்த எவரும் தங்கள் கட்சியில் இல்லை என்பதையே இவர்கள் பிரகடனப் படுத்துகிறார்கள்.

உச்சரிப்பது மார்க்சியம் என்றாலும், நடைமுறையில் காவி நிறத்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் இணைப்புப் பாலமிடும் சமரசப் பணியையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் இன்னும் பல நகைச்சுவை காட்சிகளை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!