Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

புலே : அடித்தட்டு மக்களின் குரல்

$
0
0

Contribution of Jyotirao Phule on Higher Educationபுரட்சி / அத்தியாயம் 17

பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம் 1996ம் ஆண்டு புது டெல்லியில் ஒரு தொலைக்காட்சி நிருபரை ஒருமுறை அடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து கன்ஷிராமின் கட்சியினர் வேறு சில மீடியா ஆள்கள்மீது தாக்குதல் தொடுத்தனர். இந்தச் செய்தி பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்தது. இங்கு கவனிக்கவேண்டிய விஷயம், எதனால் கன்ஷிராம் கோபமுற்றார் என்பதை யாராலும் தெரிந்துகொள்ளமுடியவில்லை.  கென்னத் ஜே கூப்பர் என்னும் வாஷிங்டன் போஸ்ட் டெல்லி நிருபருக்கு இது அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. கன்ஷிராம் தரப்பு குறித்து ஏன் பத்திரிகைகளில் எந்தச் செய்தியும் காணப்படவில்லை? அவர் செய்தது தவறே என்றாலும் அவர் தரப்பு என்றொன்று இருந்தாகவேண்டும் அல்லவா?

அவர் இறுதியாக வந்தடைந்த முடிவு இதுதான். தலித் தரப்பு நியாயம் என்பது இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவருவதே இல்லை. நமக்குக் கிடைப்பதெல்லாம் அவர்களுடைய எதிர் தரப்பினரின் நியாயங்கள் மட்டுமே. இன்னொன்றையும் கூப்பர் கண்டுபிடித்தார். தலித் மக்களின் குரலைப் பதிவு செய்ய மீடியா உலகிலேயே தலித் வகுப்பினர் யாரும் இல்லை.

தலித் மக்களின் வேதனைகளும் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டுமானால் அவர்கள் கல்வி கற்றாகவேண்டும் என்று புலே அன்றே சொன்னதன் காரணம் இதுதான். உங்கள் குரல் கேட்கப்படவேண்டுமானால் நீங்கள் வலிமையானவராக இருக்கவேண்டும். அடிமைகளின் குரல் கேட்கப்படமாட்டாது. எனவே, வலிமையற்று கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதலில் கல்வியறிவு பெற்றாகவேண்டும். அவர்கள் கல்வி கற்கமுடியாமல் போனது ஏன் என்னும் காரணத்தை ஆராயப் புகும்போது மதத்தின் கோர முகத்தை புலே தரிசித்தார். இந்து மதத்தின்மீதும் பிராமணர்கள்மீதும் போர் தொடுக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடியல் கிடைக்காது என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.

புலேவின் சமூகப் பார்வையைச் சுருக்கமாக இப்படி விவரிக்கலாம். இந்தியாவின் இயற்கை வளமும் செழுமையும் மேற்குலக நாடுகளை ஈர்த்ததைப் போலவே ஆரியர்களையும் ஒருகாலத்தில் ஈர்த்திருக்கிறது. இங்கே படையெடுத்து வந்த ஆரியர்கள் பூர்வ குடிகளான மக்களை ராட்சஷர்கள் என்று அழைத்து போரிட்டு வென்றனர். அமெரிக்க இந்தியர்கள்மீது மேற்கத்திய உலகம் செலுத்திய ஒடுக்குமுறைக்குச் சற்றும் குறைந்ததல்ல பூர்வகுடிகள்மீது ஆரியர்கள் செலுத்திய ஒடுக்குமுறை. மக்களைத் தன் பிடியில் வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் விசித்திரமான புராணங்களையும் சாதிமுறையையும் அக்கிரமமான சட்டத்திட்டங்களையும் வகுத்தனர். சாதியப் படிநிலையில் தங்களை உயர்ந்த இடத்திலும் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழும் வைத்துக்கொண்டனர். அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை நிறத்தின் அடிப்படையில் பிரித்து வைத்ததைப் போல் இங்குள்ள மக்களைச் சாதியின் பெயரால் பிரித்துவைத்தனர். ஏமாற்று வேலைகள்மூலமும் மத மயக்கங்கள்மூலமும் இங்குள்ள மக்கள் வென்றெடுக்கப்பட்டனர்.

சூத்திரர்களையும் ஆதிசூத்திரர்களையும் (தலித்) சித்தாந்தரீதியில் ஒன்றுபடுத்தும் பணியில் புலே ஈடுபட்டு வந்தார் என்கிறார் கெயில் ஓம்வெட். இன்று புலேவை அதிகம் பின்பற்றுபவர்கள் தலித் பிரிவினர்தான் என்றாலும் தான் வாழ்ந்த காலத்தில் புலே பகுஜன் சமாஜ் என்று இன்று அழைக்கப்படும் மத்திய மற்றும் கிழ்மட்ட சூத்திரர்களின் பிரதிநியாக, அவர்களுக்காகக் குரல் கொடுப்பவராக அறியப்பட்டிருந்தார். இன்று ஓ.பி.சி. பிரிவில் இடம்பெறும் மாலி என்னும் சாதியைச் சேர்ந்தவர் புலே.

புலே தனது சித்தாந்தத்தை அப்போது பிரபலமாகவும் வலிமையாகவும் இருந்த ஆரிய இன ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்டார். வேதங்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒருவித ஆன்மிகத் தொடர்பை ஏற்படுத்துகின்றன என்று ஐரோப்பியர்கள் (ஓரியண்டலிஸ்ட்ஸ்) அப்போது சொல்லிவந்தனர். பால கங்காதர திலகர் போன்றோர் இந்த வாதத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலை வகிப்பதாக வியாக்கியானம் செய்து வந்தனர். ஹெகலின் இயக்கவியலை மார்க்ஸ் தலைகீழாகத் திருப்பிப்போட்டதைப் போல் புலே இந்த வாதத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப்போட்டார் என்கிறார் கெயில் ஓம்வெட்.

பிராமணர்கள் ஆதிக்கச் சக்திகளான இந்தோ ஐரோப்பியர்கள் வழிவந்தவர்கள் என்றார் புலே. அவர்கள் எந்தவகையிலும் சமூகத்தில் பிறரைவிட உயர்ந்தவர்களில்லை. மாறாக, ஒருவித சமத்துவ நிலை நிலவி வந்த சமூகத்துக்குள் ஊடுருவி, வன்முறை மற்றும் ஏமாற்றுத் தந்திரங்களைப் பயன்படுத்தியும் புராணங்களை அறிமுகப்படுத்தியும் ஒருசாராரை அடிமைப்படுத்தியவர்கள். அவர்களுடைய இதிகாசங்கள் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தின. எனவே பிராமணர்களின் ஆதிக்கத்தை உடைத்தாகவேண்டும் என்றார் புலே.

கருத்து யுத்தத்தோடு நின்றுவிடாமல் ஒரு வலிமையான மக்கள் இயக்கத்தையும் புலே வளர்த்தெடுத்தார். உயர் சாதியினரின் மேலாதிக்கம் எங்கு நிலைபெற்றிருந்தோ அங்கு தன் பிரசாரத்தை எடுத்துச்சென்றார் புலே. இதிகாசங்களிலும் புராணங்களிலும் தங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துகிடந்த அடித்தட்டு மக்களிடம் நேரடியாக உரையாடிய புலே, அவர்களுடைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய அதே இதிகாசங்களையும் புராணங்களையும் பயன்படுத்திக்கொண்டார். உதாரணத்துக்கு, விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்களை இந்தியா ஒவ்வொரு கட்டமாக அடிமைப்படுத்தப்பட்டதோடு ஒப்பிட்டார் புலே. இதிகாசங்கள் வெறுத்தொதுக்கிய ராட்சஷர்களை, கதாநாயகர்களாக ஆக்கினார்.

மகாபலி என்று அழைக்கப்பட்ட பலி ராஜா அவர்களில் முக்கியமானவர். இவர் மகாராஷ்டிராவின் மன்னர். சாதிகள் அற்ற, ஏற்றத்தாழ்வுகள் அற்ற, நியாயமான ஆட்சியை இவர் மக்களுக்கு வழங்கிவந்தார். கந்தோபா, ஜோதிபா, நைக்பா போன்ற புகழ்பெற்ற கடவுள்களை பலி ராஜா தனது அமைச்சர்களாக நியமித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட வாமனன் (விஷ்ணு) பலி ராஜாவிடம் சென்று மூன்றடி நிலம் கோரினார். பலி ராஜா ஒப்புக்கொண்டார். வாமனன் முதல் இரு அடிகளை வானத்துக்கும் பூமிக்குமாக அகலமாக எடுத்து வைத்துவிட மூன்றாவது அடியை வைக்க இடமில்லாமல் போனது.  பலி ராஜா தன் தலையை தாழ்த்திக்கொள்ள அங்கே கால் வைத்து அழுத்தி அவரை இல்லாது ஆக்கினார் வாமனன்.

ஆரியர்கள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்பதையும் நல்லட்சியைக் குலைக்க அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட இந்தப் புராணக் கதையை புலே பயன்படுத்திக்கொண்டார். புலே எதிர்பார்த்தபடியே அவருடைய இந்தத் தந்திரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலி ராஜா மகாராஷ்டிராவின் கலாசார அடையாளமாக மாறிப்போனார். புலேயின் மறுவாசிப்பும் அவர் அளித்த புதிய விளக்கங்களும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைகளை ஓரளவுக்கு மாற்றியமைத்தன. வேதக் கடவுள்களையும் பார்ப்பன பண்டிதர்களையும் நீக்கிவிட்டு வழிபாட்டு முறையையும் திருவிழாவையும் மக்கள் நடத்தத் தொடங்கினார்கள் என்று குறிப்பிடுகிறார் கெயில் ஓம்வெட். சாதியத்துக்கு எதிரான, புராணங்களுக்கு எதிரான, மேலாதிக்கத்துக்கு எதிரான புலேவின் மாற்றுக் கதையாடல்கள் பெற்ற வெற்றி இது.

ஆரியர்களைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாமீது படையெடுத்து வந்தனர் என்றபோதும் அவர்களைக் காட்டிலும் ஆரியர்களின் தாக்கமே இங்கு அதிகம் என்றார் புலே. அரசு அதிகாரம், மதம் இரண்டையும் பயன்படுத்தி ஆரியர்கள் மக்களை அடிமைப்படுத்தினர். குறிப்பாக விவசாயிகள் பெரும் சுரண்டலுக்கு ஆளாயினர். காலனிய ஆட்சியின்போதும் பிராமணர்களின் ஆதிக்கம் குறையவில்லை. வரி விதிப்பு, நிலப் பறிமுதல் என்று ஒடுக்குமுறை தொடர்ந்தது.

புலே முன்வைத்த ஆரியப் படையெடுப்பு கருத்தாக்கத்தை இன்றைய தேதியில் ஒரு வரலாற்று உண்மையாகக் கொள்ளமுடியாது என்றபோதும் பல விஷயங்களில் அவரை ஒரு நவீனவாதியாக அடையாளம் காணமுடியும். முதலாவதாக, விவசாயிகளின் ஏழைமையையும் அவர்கள் சுரண்டலுக்கு ஆளான விதத்தையும் புலே தத்ரூபமாக விவரித்தார். நிலம் உபயோகப்படுத்தப்பட்ட முறையையும் பஞ்சங்களையும் அவர் ஊன்றி கவனித்தார். காட்டுவளங்களின் உபயோகம் குறித்து இன்றை சூழலியலாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகளை அன்றே பதிவு செய்தார். கலாசார ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் இரண்டையும் அவர் ஆராய்ந்தார். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சிந்தனைகளையும் பிரதிகளையும் மதிப்பீடுகளையும் விரிவாக ஆராய்ந்தார். சமூக நீதி என்பது அடித்தட்டு மக்கள் உள்பட அனைவருக்கும் சமமானது என்று முழங்கினார்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளுக்கு சுலபத்தில் அடிமையாகும் தாழ்த்தப்பட்ட மக்களை விமரிசிக்க தயங்கியதில்லை புலே. ‘பார்ப்பனரின் (புனித) நூல்களில் அடங்கியுள்ள விஷயத்தை நேரடியாக சரி பார்க்காமலேயே, வாய்மொழியாக அவர்கள் பரப்பிவிடும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் அமைந்த சாதிப்பாகுபாடு என்னும் கேவலமான பேச்சை நீங்கள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்? இது சூத்திரர்களின் தரப்பில் இருக்கும் சுத்த பைத்தியக்காரத்தனம் ஆகும்.’

இன்னோரிடத்தில் புலே எழுதுகிறார்.  ‘சூழ்ச்சிக்கார ஆரிய பார்ப்பனர்கள் சாதாரண மக்களிடமிருந்து தம் (புனித) வேதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் அறியாமையில் இருக்கும் சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் வேதங்கள் மீது அநியாய மதிப்பும் மரியாதையும் காட்டி வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் தம் வேதங்களை வெளிப்படைக்குக் கொண்டு வந்தால் மராத்தியில் (மக்கள் மொழியில்) அவற்றை மொழிபெயர்த்து, கிறிஸ்தவர்கள் தம் பைபிளை பரப்புவது போல், பொதுமக்களுக்கு பெரிய அளவில் கிடைக்கச் செய்தால்; கழைக்கூத்தாடி (சமூகத்து) பெண்கள்கூட சூழ்ச்சிக்கார ஆரிய பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேதங்களையும் எள்ளி நகையாட தயங்க மாட்டார்கள் என நான் துணிந்து சொல்லுவேன்.’

தாழ்த்தப்பட்ட மக்களின் துயர வாழ்வைக் கண்டு மனம் கலங்குகிறார் புலே. ‘தம் துயரக் கதையை தம் நண்பர்களிடம் விவரிக்கையில் உண்மையாகவே சூத்திரர்களின் மனசு விட்டுப் போகும். (அவர்களின் இதயங்கள் பிளந்துபோகும்). நான் பிறந்த நாள் நாசமாகப் போக! பிறந்த போதே நான் செத்திருந்தால் அது எவ்வளவோ நல்லதாக இருந்திருக்கும். நமது வீட்டுப் பெண்கள் படும் பாட்டை பார்க்க சகிக்கவில்லை என அவர்கள் நிச்சயம் சொல்வார்கள். ஒரு ஆடவன் தன் உடம்பில் ஏற்படும் கடுமையான வேதனையையும் தீரத்துடன் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் தனக்கு வேண்டிய, நெருங்கிய உறவினர்களுக்கு நேரும் துயரத்தை தாங்கிக்கொள்வது மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதான்.

தன் உறவினரின் பரிதாப நிலையைக் கண்டு வேதனையாலும் அவலத்தாலும் அவர் பீடிக்கப்படுகிறார். ஆனால் இப்படிப்பட்ட இடர்ப்பாட்டில் இருந்து மீள உள்ளபடியே ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையிலேயே ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் உணவு எவ்வளவு சத்துக்குறைவும் சுவையற்றும் உள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளமுடியும்.’

ஒரு பிரிவினரின் இந்த ஏழைமைக்கும் மற்றொரு சிறு பிரிவினரின் செழுமைக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினார் புலே. தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களின் கையறு நிலையையும் அறியாமையையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்று சுட்டிக்காட்டுகிறார். பிரிட்டிஷார் ஒரு நடுநிலையான விசாரணையை நடத்தினால் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனமும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளும் ஒரே சமயத்தில் முழுமையாக தெரியவரும் என்றார் புலே. ‘அன்றாட பிரச்னைகளிலும் நிர்வாக யந்திரத்திலும் பொது மக்களை பார்ப்பனர்கள் சுரண்டும் வழிமுறை பற்றி அரசாங்கம் இன்னமும் அறியவில்லை. இந்த அவசரப் பணியில் அரசாங்கம் அக்கறையுடன் கவனம் செலுத்தி பார்ப்பனர்களின் சதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ள மன ரீதி அடிமைத்தனத்தில் இருந்து பொது மக்களை விடுவிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’

தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைவதைத் தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஏற்பாடே சாதியம். ‘ஒரு புத்திசாலி பத்து அறியா மக்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். அந்தப் பத்து பேரும் ஒன்றுபட்டால் புத்திசாலியை வெல்லலாம்.’ இதை நன்கு புரிந்துகொண்ட பார்ப்பனர்கள், ‘சாதியம் என்ற நாசகார கட்டுக்கதையை’ உருவாக்கினார்கள்.

புராணங்களின் கட்டுக்கதைகளை மறுவாசிப்பு செய்யும்போது புலே ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகிறார். ‘பிரம்மனின் மனைவி சாவித்திரி. அவள் இருக்கும்போது எதற்காக பிரம்மன் தன் வாயில் குழந்தையை வளரவிடுகிறான்?’ இரணிய கசிபு கதையும் அவரிடம் இருந்து தப்பவில்லை. ‘இரணிய கசிபை மறைவிலிருந்து கோழைத்தனமாகக் கொலை செய்த நரசிம்மனை காப்பாற்றத்தான், அவன் தூணிலிருந்து தோன்றினான் என்றெல்லாம் கதை அளந்தார்களோ? உண்மையான சமயக் கோட்பாடுகளைத் தன் மகன் பிரகலாதனின் பிஞ்சுமனதில் ஊட்ட முயன்ற இரணிய மன்னனைக் கொலை செய்தது ஆதி நாராயணனின் அவதாரமே என்பது எவ்வளவு கேவலமான பொய்! ஒரு மகனுக்குத் தந்தை ஆற்றவேண்டிய கடமையைத்தானே இரணியகசிபு செய்தார்?’  நியாயப்படி பார்த்தால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்து அல்லவா வைத்திருக்கவேண்டும் அந்த நரசிம்மன்? ‘இன்றைக்குப் பல அமெரிக்க ஐரோப்பிய மத போதகர்கள் பல இந்திய இளைஞரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அப்படி மதம் மாறியோரின் அப்பாவை படுகொலை செய்யும் கீழ்த்தரத்துக்குத் தம்மை இறக்கிக்கொள்ளவில்லை.’

இன்னொரு சந்தர்பத்தில், பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே.

பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,

பார்ப்பனர்களின் மூலமாக வெளிக்குக் காட்டப்படும் உங்கள் புகழ்பெற்ற மந்திர உச்சாடனங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைத்துப் போகச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.

அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகார்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களை (இனத்தை) தெருவுக்கு இழுத்துப் போட்டு அவர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு
தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

(அடுத்த பகுதி : புலே : கல்வி சிந்தனைகள்)

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!