Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

பாஞ்சாலங்குறிச்சி : அறியப்படாத பலவீனங்கள்

$
0
0

veerapandiya_kattapomman_tamil_king_statue_tamil_naduகட்டபொம்மன் பற்றிய கதைப்பாடல் மற்றும் கட்டபொம்மன் பற்றிய திரைப்படங்கள் கட்டபொம்மனை ஒரு வீர, தீரப் பேரரசனாகக் காட்டுகின்றன. ஆனால், ஆவணங்கள் வேறுவிதமாக அவரைக் காட்சிப்படுத்துகின்றன.

கட்டபொம்மனின் முன்னோர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்கவையாக இல்லை. கட்டபொம்மனின் நிர்வாக முறைமை போற்றத்தக்கதல்ல. நீங்கள் இதுநாள் வரை கட்டபொம்மன் மீது கொண்ட வியப்பும் ஒருவிதத்தில் மாயையும் பின்வருபவற்றை வாசிக்கும்போது உங்களிடமிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவரது பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு இந்திய விடுதலைக்கு கணிசமான அளவில் உதவியது என்பது உண்மையே. ஆனால், கொண்டாடும் அளவுக்கு இல்லை.

பாஞ்சாலங்குறிச்சி – ஒரு பின்னோட்டம்

மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பின்னர் அவர்களுக்கு வரி கொடுத்தும் படைவீரர்களைத்  திரட்டிவழங்கியும் வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு ராஜாக்களாக மாறினர். இந்நிலையில் ஆர்க்காட்டு நவாபு வெறும் பொம்மை மன்னராக கர்நாடகத்தில் வசித்து வந்தார். நாட்டின் முழு நிர்வாகமும் பிரிட்டிஷாரின் கைகளில் இருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியினர் ஆர்க்காட்டு நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி திருநெல்வேலிச் சீமையின் வரி பெறும் உரிமையைத் தம் வசம் மாற்றிக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் கழித்து நவாபு அவ்வுரிமையை கி.பி. 1785ஆம் ஆண்டு தன்னுடையதாக்கிக்கொண்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1790ஆம் ஆண்டு பிரிட்டிஷார் அவ்வுரிமையை நவாபிடமிருந்து பறித்துக்கொண்டனர்.

இக்காலக்கட்டத்தில் திருநெல்வேலிச் சீமையின் பாளையப்பட்டுகள் இரண்டாகப் பிளவுபட்டன. கிழக்குப் பகுதியில் தெலுங்கர்களின் கை ஓங்கியிருந்தது. இப்பகுதியிலுள்ள பாளையப்பட்டுகளுக்குப் பாஞ்சாலங்குறிச்சி தலைமையிடமாக இருந்தது.

பஞ்சாயத்துக்காரர்கள்

பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாளையப்பட்டுக்களைக் கம்பளத்து நாயக்கர்கள் ஆண்டனர். கம்பளத்தை விரித்து அதன்மீது அமர்ந்து நீதி வழங்கியதால் இந்த இனத்தவர்கள் இப்பெயரினைப் பெற்றனர். இக் கம்பளத்து நாயக்கமார்களுக்குப் போடி நாயக்கனூர், பேரையூர், சாப்டூர், தேவாரம், தொட்ட நாயக்கனூர், செக்க நாயக்கனூர், ஆயக்குடி, கண்டம நாயக்கனூர், அம்மைய நாயக்கனூர், இடையக்கோட்டை செங்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பதினெரு பாளையங்கள் உரிமையுடையனவாக இருந்தன.

வீரபாண்டியபுரம்

இன்றைய ஒட்டபிடாரம் அக்காலத்தில் அழகிய வீரபாண்டியபுரம் என்ற பெயரில் இருந்த்து. அங்கு ஆட்சிபுரிந்து வந்த நாயக்க வம்ச மன்னர் ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர்  இனத்தைச் சார்ந்தவர். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின்னர் தமிழில் கட்டபொம்மன் என்றாயிற்று.

பொல்லாப்பாண்டியன்

கி.பி. 1744ஆம் ஆண்டு நாயக்க பரம்பரையின் இறுதி வாரிசு விஷம் குடித்து மாண்டபின்னர் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக இரண்டாம் கட்டபொம்மு தன்னை சின்ன நவாபு என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினார்.  இவருக்குப் பொல்லாப்பாண்டியன் என்ற பெயரும் உண்டு.

கி.பி. 1755ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி கர்னல் ஹெரோன் பாஞ்சாலங்குறிச்சியின் மேல் போர்தொடுத்தார். அவருடன் இணைந்து நவாபின் முழுஅதிகாரம்பெற்ற படைத்தளபதி யூசுப்கானும் வந்தான். போரைத் தவிர்ப்பதற்காகப் பொல்லாப்பாண்டியன் ஆர்க்காட்டு நவாபுக்கு வரிசெலுத்து ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி பஞ்சத்தில் இருப்பதால் தவணைமுறையில் வரிசெலுத்துவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால், அவர் வரியினை முழுமையாகச் செலுத்தும் வரை பொல்லாப்பாண்டியனின் சில முக்கியமான ஆட்களை பிணைக்கைதிகளாக யூசுப்கான் அழைத்துச் சென்றுவிட்டான்.

இந்நிலையில் பூலித்தேவன் பாளையக்காரர்களைத் திரட்டி வரிகொடா இயக்கத்தை நடத்தினார். அதில் பொல்லாப்பாண்டியன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், யூசுப்கானுடன் இணைந்து பூலித்தேவனுக்கு எதிராகப் போர்புரிந்தார். 21.03.1756 இல் நடைபெற்ற இப்போரில் பூலித்தேவன் தோற்றார்.

பின்னர் திருநெல்வேலிச் சீமையின் வரிபெறும் உரிமையை 11லட்சரூபாய்க்குக் குத்தகையாக அழகப்ப முதலியாருக்குக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியது. வரி பெறுதலில் குழப்பம் நிலவியது. வரிபெறும்பொறுப்பிலிருந்து நவாபு மபூஸ்கான் என்பவரை நீக்கினார். அவர் திருவிதாங்கூர் மன்னனின் உதவியுடன் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களின் மீது போர்தொடுத்தார். அப்போரில் பொல்லாப்பாண்டியன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் போரிட்டார். இதற்காக அவருக்குச் சில கிராமங்களை பிரிட்டிஷார் பரிசளித்தனர். ஆனாலும், இவர் தரவேண்டிய வரிப்பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்ட பின்னரே பிணைக்கைதிகளாக அழைத்துச் சென்றவர்களை யூசுப்கான்  விடுவித்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு

கி.பி. 1760ஆம் ஆண்டு பொல்லாப்பாண்டியன் இறந்தான். இவருக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சியின் தலைமையை ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு ஏற்றார்.

கி.பி. 1766ஆம் பிரெஞ்சுப்படை டிலாந்த் என்பவரின் தலைமையில் பூலித்தேவர் மற்றும் அவருக்கு வேண்டிய பாளையங்களின் மீது போர்தொடுத்தது. அந்நிலையில் பூலித்தேவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவின் உதவியைக் கோரினார். ஆனால், ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மறுத்துவிட்டார். தந்தை செய்த அதே தவறினைத் தானும் செய்தார். பூலித்தேவர் இப்போரிலும் தோற்றார்.

யூசுப்கான், நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராகச் செயல்படத் தொடங்கியதால் 15.10.1764ஆம் நாள் கொலை செய்யப்பட்டார். கூட்டணிகள் மாறின. காலம் கடந்தது.

பிரிட்டிஷ்காரன் வேண்டாம் டச்சுக்காரன் போதும்

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கர்னல் கோம்பெல் முன்னறிவிப்பின்றி கொல்லம் கொண்டான் கோட்டையை முற்றுகையிட்டார். மூன்று நாள் முயன்று கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. கோபம் கொண்ட கர்னல் கோம்பெல் சேத்தூர், சிவகிரி ஆகிய பாளையங்களைத் தாக்கினார். அங்கும் மக்களோ, செல்வமோ, ஆயுதங்களோ இல்லை. அவருக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு தன் கோட்டையை விட்டுத் தப்பியோடினார். பின்னர் டச்சுக்காரர்களின் உதவியுடன் தன் கோட்டைக்குத் திரும்பி, கோட்டையைப் பலப்படுத்தினார். இவர்களின் செயல்பாடுகள் குறித்து லார்டு இர்வின் பிரபு தன் தலைமையிடத்துக்குக் கடிதம் எழுதினார்.

கி.பி. 1783ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் தலைமையில் ஒரு பெரும் படை புறப்பட்டு வந்தார். புல்லர்டனின் ஆட்கள் 08.08.1783ஆம் நாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவைச் சந்தித்தனர். திறைப்பணத்தைத் செலுத்தக்கோரினர். தமக்கு டச்சுக்காரர்கள் துணைபுரிவதால் துணிவுடன் திறை செலுத்த மறுத்தார்.

ஒருநாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு நாயக்கன் சொக்கம்பட்டி என்ற பாளையத்தின் மீது போர் தொடுக்கச்சென்றார். அச் சூழலைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தார். கைப்பற்றினார். அங்கு 40,000 டச்சு வராகன்களும் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வெடி மருந்துகளும்  புல்லர்டனுக்குக் கிடைத்தன.

இதனை அறிந்த ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு பாளையங்கோட்டை வழியாகச் சென்று சிவகிரி பாளைத்தில் ஒளிந்துகொண்டார். அங்குச் சென்ற புல்லர்டன் கோட்டையை முற்றுகையிட்டார். பின்னர் 1,500 டச்சு வராகன் கொடுத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீட்டுக்கொள்ளுமாறு தூது அனுப்பினார். அதற்கு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு  ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் திரும்பப் பெற்றார்.

யார் இந்த நவாப்?

தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் 1698ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் நவாப் ஆகப் பதவி வகித்தனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினர் நவாப் பட்டத்திற்கு வந்தனர்.

கி.பி.1750ஆம் ஆண்டில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தாசாகிப்பிற்கும், வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி பிரிட்டிஷ்காரர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். கர்நாடகப் போர் மூண்டது. முகமது அலி வென்றார். தன் வெற்றிக்குத் துணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு நன்றிக் கடன்பட்டார் முகமது அலி. இந்த நன்றிக்கடன் நாளடைவில் முகமது அலியின் பேராசையால் பணக்கடனாகியது.

பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது முகமது அலியின் கனவு. எனவே, பாளையக்காரர்களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் சிக்கல்கள் தொடங்கி, எல்லா விவகாரங்களுக்கும் பிரிட்டிஷ் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். காலப்போக்கில் பிரிட்டிஷ் படைச்செலவுக்கு அடைக்கவேண்டிய கடன் தொகை மிகுந்தது.  ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக முகமது அலி பிரிட்டிஷாருக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினார்.

கி.பி. 1785ஆண்டுக்கும் கி.பி. 1790ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திருநெல்வேலிச் சீமையின் வரிவசூல் செய்யும் உரிமையை நவாப் தாமே எடுத்துக்கொண்டார். கி.பி. 1790ஆண்டுக்கும் கி.பி. 1795ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷார் நவாபின் உரிமைகளைப் பறித்துக்கொண்டனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை சீர்கொடத்தொடங்கியது. இந்நிலையில்  ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மாண்டார்.

கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னர்

ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.

இவர்களுக்கு 03.01.1760ஆம் நாள் பிறந்த மகனே வீரபாண்டியன் அல்லது கருத்தையா எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனுக்கு குமாரசுவாமி என்ற சிவத்தையா, துரைசிங்கம் என்ற ஊமைத்துரை ஆகிய தம்பியர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னரான வீரபண்டிய நான்காம் கட்டபொம்மு 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

மக்கள் விரோத அரசு

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்தார். அதற்கு நிதியாக மக்களிடம் 84 சதவிகித மகசூலைப் பெற்றார். மக்களின் உடைமைகளையும் பணத்தையும் பறித்தார். இவரது கொள்ளைகள் குறித்து கி.பி.1818ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியார் எழுதிய ‘திருநெல்வேலியின் அரசியல்’ என்ற நூல் விரிவாக விளக்கியுள்ளது. இவரின் ஆட்சி மக்கள் விரோ அரசாட்சியாகவே இருந்துள்ளது.

பாளையத்து எல்லையை நிர்ணயித்த ஆங்கிலேயர்கள் அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டயபுரத்துக்கு வழங்கியதாலும், ஆற்காடு நவாப்பிடம் ஒப்பந்தம் செய்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆதிக்கம் செலுத்தியதாலும் கட்டப்பொம்மன் பிரிட்டிஷார் மீது கடுப்பில் இருந்தார்.

இந்நிலையில், கி.பி. 1797ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டனர். கட்டபொம்மன் மறுத்தார். கி.பி.1797ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டார். அப்போரில் கட்டபொம்மன் வென்றார்.

வா ராஜா வா

கி.பி. 1797ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் பாளையக்காரர்கள் கலகம் செய்தனர். அதனை அடக்க பிரிட்டிஷ் அரசு டபிள்யு. எல். ஜாக்ஸன் என்பவரை திருநெல்வேலி கலெக்டராக நியமித்து, அனுப்பி வைத்தது.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணைபிறப்பித்தார். அவரைச் சந்திப்பதற்காக கட்டபொம்மன் தன்னுடன் சிறிய படையுடன் பல மைல்கள் பயணித்தார். டபிள்யு. எல். ஜாக்ஸனைச் சந்திக்க இயலவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸன் கட்டபொம்முவைச் சொக்கம்பட்டி, தேற்றூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேறையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி ஆகிய ஊர்களுக்கு அலைக்கழித்தார். அவரை இராமநாதபுரம் வரவழைத்துச் சிறைப்பிடிக்க டபிள்யு. எல். ஜாக்ஸன் திட்டமிட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு 05.09.1798ஆம் நாள் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி, கைலப்பில் முடிந்தது. பிரிட்டிஷ் படைத்தலைவன் கிளார்க் இறந்தார்.  கட்டபொம்முவையும் அவரின் சிறு படையினரையும் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிவர வெள்ளைத்தேவன் அல்லது பாதர் (பகதூர்) வெள்ளை என்பவர் உதவினார். ஆனால், பாஞ்சாலங்குறிச்சியின் செயலர் சுப்பிரமணிய பிள்ளை பிரிட்டிஷாரால் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸனின் இச்செயல்பாடு பிரிட்டிஷ் அரசுக்குப் பிடிக்கவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸனை நீக்கியது. அவருக்குப் பதிலாக லூஷிங்டன் என்பவரை நியமித்தது. சுப்பிரமணிய பிள்ளை விடுவிக்கப்பட்டார். கட்டபொம்முவின் போக்கு  லூஷிங்டனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டது.

கெட்ட நேரம்

இந்நிலையில் மேஜர் பானர்மன் தலைமையில் பெரும்படை கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியின் மீது மோதியது. ஆனால், அப்போது திருச்செந்தூர் விசாக விழாவை முன்னிட்டு கட்டபொம்முவின் சகோதரர்கள் பாதிப் படையுடன் திருச்செந்தூர் சென்றிருந்தனர். சுப்பிரமணிய பிள்ளை ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்தார். கட்டபொம்முவுடன் வீரபத்திரபிள்ளையும் கணக்கன் பொன்னைப் பிள்ளையும் மீதிப் படையினரும் இருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ் படைக்கு லெப்டினண்டு டல்லஸே தலைமைதாங்கினார். காலின்ஸ், ஓரெய்லி, புரூஸ், டக்ளஸ் டார் மிக்ஸ், பிளேக் பிரெய்ன் ஆகிய பிரிட்டிஷ் தளபதிகளும் உடனிருந்தனர்.

கோட்டைவிட்டனர்

05.09.1799 ஆம் நாள் அதாவது டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு நிகழ்ந்த ஓராண்டு கழித்து பிரிட்டிஷ் பிரங்கிகளால் பாஞ்சாலங்குறிச்சி பாதி தகர்க்கப்பட்டது.  இரண்டுநாட்கள் கழித்து 12 பவுண்டு திறனுள்ள பீரங்கிகளால் தாக்கினர். மண்கோட்டை தகர்ந்தது. ஆனால், அங்கிருந்து கட்டபொம்மனும் அவனுடைய ஆட்களும் தப்பிவிட்டனர். கோட்டை தாக்கப்படும் தகவல் அறிந்த சுப்பிரமணியபிள்ளையும் கட்டபொம்மன் தம்பியரும் வேறு வழியாக வந்து கட்டபொம்மனுடன் இணைந்துகொண்டனர்.

மேஜர் பானர்மனின் விரர்களும் எட்டயபுரப்பாளையக்காரரும் கட்டபொம்மனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கோலார் பட்டிக்கோட்டையில் கட்டபொம்மன் இருப்பதை அறிந்த பிரிட்டிஷார் அங்குசென்றனர். கட்டபொம்மன் அவர்களுடன் போரிட்டபடியே தன்னுடைய முதன்மையான ஆறு நபர்களுடன் தப்பிவிட்டார். கட்டபொம்மனின் 34 வீரர்களும் சுப்பிரமணியபிள்ளையும்  பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுப்பிரமணியபிள்ளை தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கட்டபொம்மனுக்குத் துணையாக இருந்த நாகலாபுரம், கோலார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களுள் காடல்குடி பாளையக்காரர் மட்டும் தப்பியோடினார். மற்றவர்கள் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தனர்.

மருமகனா? பணமா? 

சரணடைந்தோரில் சுந்தரபாண்டிய நாயக்கரை மட்டும் மன்னிக்காமல் அவரின் தலையைத் துணித்தனர். சுப்பிரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷ் படைத்தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளைத்தேவனை பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் அவரைக் காட்டிக்கொடுப்பவருக்கு 1000 வெள்ளி பரிசு என்று அறிவித்தனர். இந்தியப் பணத்தில் ரூபாய் 5,000.00 மதிப்புடையது. வெள்ளைத்தேவனின் மாமன் அப்பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு தன் மருமகனான வெள்ளைத்தேவனைக் காட்டிக்கொடுத்தான். ஆற்றூரில் தானாபதி பிள்ளை குடும்பத்தைச் சிறை பிடித்து சென்னைக்குக் கொண்டு சென்றனர்.

இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகள்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரலிங்கம். இவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தன் ஒற்றர் படைக்கு அவரைத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷாருக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்குப் பல பிரிட்டிஷ் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க பிரிட்டிஷார் கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். பிரிட்டிஷ் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பிரிட்டிஷ் படை குவிந்திருந்தது.

08.09.1799ஆம் நாள் சுந்தரலிங்கம் தன் முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமிட்டு பிரிட்டிஷாரின் வெடிமருந்து கிடங்குப் பகுதிச் சென்றார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலியின் பாணியினைக் கையாண்டு சுதந்திரப் போரின் இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகளாகப் பெயரெடுத்தனர்.

சூழ்ச்சி விருந்து

கட்டபொம்மன் காட்டில் ஒளிந்திருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், தன் தளபதி முத்துவைர அம்பலக்காரன் வழியாக அவரை விருந்துக்கு அழைத்து, அடைக்கலம் அளிப்பதுபோல் நாடகமாடி அவரை 01.10.1799ஆம் நாள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.

கட்டபொம்மனைக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரை 16.10.1799ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள பழைய கயத்தாறு கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு புளியமரத்தில் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் தம்பி சிவத்தையாவும் ஊமைத்துரையும் சிறைபிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

கோட்டைகள்தான் எதிரிகள்

பின்னர் ஆழ்ந்து சிந்தித்த பிரிட்டிஷ் மேஸர் பானர்மன் கோட்டைகள் இருப்பதனால்தானே இவர்கள் நம்மை வந்துபார் என்கிறார்கள்? கோட்டைகளை அழித்துவிட்டால் என்ன? என்று முடிவெடுத்தனர். தென் தமிழகத்தில் இருந்த பாளையக்காரர்களைப் பத்துநாட்கள் தம்முடன் வைத்துக்கொண்டு அவர்களின் ஆணையின்பேரில் 42 கோட்டைகளை பீரங்கிகளின் உதவியால் தரைமட்டமாக்கினர். அவரகளின் படைக்களங்களைப் பறிமுதல்செய்தான். கோட்டைகளைக் கட்டுவதும் படைக்களம் வைத்திருப்பதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானது என்று அறிவித்தார்.

சிறைக் கலவரம்

அச்சிறையில் 02.02.1801ஆம் நாள் கலகம் விளைவித்து தப்பிய ஊமைத்துரையும் அவரது வீரர்களும் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையை வலுப்படுத்தத் திட்டமிட்டனர். கண்டிக்குப் போவதாகக் கடிதம் மூலம் பிரிட்டிஷாருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அங்குத் தொழிலாளிகளோடு தொழிலாளியாக நின்று ஆறு நாட்களில் கோட்டையைச் சீரமைத்தார். ஆளத்தொடங்கினர்.

இதனை அறிந்த பிரிட்டிஷார் மேஜர் மெக்காலே பெரும்படைகொண்டு பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்கினர். முடியவில்லை. மீண்டும் அவரது தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801ஆம் நாள் முதல் 24.05.1801ஆம் நாள் வரை முற்றுகையிட்டது.

ஊமைத்துரையுடன் போரிட்ட  ‘பேக்கார்ட்‘ என்ற அதிகாரி போர் கைதியாக மாட்டிக்கொண்டார். அவர் மனைவி உயிர்பிச்சை கேட்க அவரை ஊமைத்துரை விடுவித்தார்.

பின்னர், திருச்சியிலிருந்து வந்த பிரிட்டிஷ் படையினர் 3,000பேர் சேர்ந்து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மலபாரிலிருந்தும் திருச்சியிலிருந்தும் துணைப் படைகள் வந்துசேர்ந்தன. அவற்றிற்கு கலோனப் அக்னியூ என்பவர் தலைமை தாங்கினார். கோட்டை தகர்க்கப்பட்டது.

ஜேம்ஸ் வெல்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி எழுதிய ‘போர் நினைவுகள்‘ என்ற நூலில் “முருக பக்தர்கள் வேடமிட்டு ஊமைத்துரையும் செவத்தையாவும் மீட்கப்பட்டபோது சுமார் ஒரு மைல் தூரத்தில் தான் நிராயுதபாணியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் மதுவிருந்தில் களித்திருந்தனர். ஊமைத்துரையும் உடன்வந்த 200க்கு மேற்பட்ட வீரர்களும் அதைக் கவனித்திருந்தால் இன்று வரலாறே மாறியிருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஊமைத்துரை தப்பியோடி, மருது பாண்டியரிடம் தஞ்சமடைந்தார். அவருக்கு அடைக்களம் கொடுத்ததற்காக பிரிட்டிஷார் மருதுபாண்டியரின் காளையார் கோயிலை 01.10.1801ஆம் ஆண்டு கைப்பற்றி, மருது பாண்டியர்களைத் திருப்பத்தூர் கோட்டைக்கு அருகில் தூக்கிலிட்டனர்.

ஊமைத்துரையைக் கைதுசெய்து, பாஞ்சாலங்குறிச்சியின் புதிய கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்ட பீரங்கிகளை வைத்திருந்த பீரங்கிமேட்டில் தூக்குமேடை அமைத்து அங்கேயே தூக்கிலிட்டனர்.

வரலாற்றிலிருந்து அழி

30 ஏக்கர் பரப்பளவுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையும் கட்டபொம்மனின் தர்பார் மண்டபம், மருந்துப்பட்டறை, பீரங்கிமேடு, அந்தப்புரம், யானைகட்டிய மண்டபங்கள் ஆகியன அனைத்தும் முழுவதுமாக மண்ணோடு மண்ணாக்கப்பட்டு அந்நிலத்தில் உழுது ஆமணக்கு பயிரிடப்பட்டது. அப்போரில் உயிர்நீத்த 42 பிரிட்டிஷ் வீரர்களுக்குக் கல்லறை அமைக்கப்பட்டது.

பாஞ்சாலக்குறிச்சிப் பாளையம் எட்டயபுரம், மணியாச்சி முதலிய பாளையங்களிடையே பங்கிடப்பட்டது. திருநெல்வேலி கெஜெட்டிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் நீக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களிலும் அப்பெயர் கவனமாக நீக்கப்பட்டது.

 (இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்).

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!