பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 38
மாயர்களின் எழுத்து சித்திர எழுத்து என்ற வகையைச் சேரும். அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறையை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ் அகர வரிசை எப்படி வருகிறது? அ, ஆ, இ, ஈ, எ, ஏ என்று. மாயர்கள் மொழியில் இவை எழுத்துக்களாக இருக்காது. படங்களாக இருக்கும்.
இப்படி மாயன் மொழியில் சுமார் 800 குறியீடுகள் இருந்தன. எழுதக் கற்றுக் கொள்வது கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே நடக்கிற காரியம் என்று கருதப்பட்டது. எல்லா மாயர்களும் எழுதக் கற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே மன்னர் அதற்குஅனுமதிப்பார்.
கல்வெட்டுகளிலும், மான் தோல், மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றிலும் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி, தம் கருத்துக்களை மாயர்கள் வெளிப்படுத்தினார்கள்.
மாயன் இலக்கியம்
ஸ்பெயின் நாடு பெரும்பாலான பழங்கால மாயர் கதைகளைக் கொண்ட புத்தகங்களை அழித்தது. வழிவழியாக வரும் வாய்வழிக் கதைகளை இப்படி அழிக்க முடியாதே? அத்தகைய பல சுவையான கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முயலும் ஓநாயும் என்கிற ஒரு கதையைப் பார்ப்போம்.
காட்டில் ஒரு முயல் வசித்தது. ஒரு நாள் ஓநாய் அதைத் துரத்தியது. முயல் மிகுந்த புத்திசாலி. தன்னை ஓநாய் பிடித்துவிடும், அப்படிப் பிடித்தால், தன்னைக் கொன்று தின்றுவிடும் என்று அதற்குத் தெரியும். பலமும் வேகமும் கொண்ட ஓநாயோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்பதும் முயலுக்குத் தெரியும்.
என்ன தந்திரம் பண்ணலாம் என்று முயல் யோசித்தது. வழியில் ஒரு பாறையின் பக்கம் போனது. அந்தப் பாறையை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றது.
“முயலாரே, நீங்கள் ஏன் திடீரென நின்றுவிட்டீர்கள்? ஓட முடியவில்லையா? நான் உங்களைச் சாப்பிடப் போகிறேன் என்ற பயத்தால் ஓட முடியவில்லையா?” என்றது ஓநாய்.
“ஓநாய் மாமா, நீங்கள் என்னைச் சாப்பிடுவதுபற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை. நீங்கள்தான் வலியே இல்லாமல் என்னைக் கொன்று விடுவீர்களே? உங்களை நினைத்துத்தான் நான் கவலைப்படுகிறேன்.”
“உளறாதே. என்னைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?”
“என்னைக் கொன்ற உடனேயே, என்னைச் சுவைத்துச் சாப்பிடுவதற்கு முன்னால், நீங்கள் பரிதாபமாகச் செத்துப் போகப் போகிறீர்கள்.”
”என்னைக் கொல்லும் தைரியம் இந்தக் காட்டில் யாருக்கு இருக்கிறது? சிங்கமா, யானையா, புலியா?”
“இவர்களும் உங்களோடு சேர்ந்து சாகப் போகிறார்கள்.”
“முயலாரே, பயத்தில் உமக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.
நாங்கள் ஏன் செத்துப் போகப் போகிறோம்?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் வானம் இடிந்து இந்தக் காட்டில் விழப் போகிறது.
இந்தப் பாறையின் அடியில் நின்றால் மட்டுமே நாம் தப்புவோம்.”
“எனக்கும் இடம் கொடும் முயலாரே.”
“ஒநாய் மாமா, உங்களுக்கு இல்லாத இடமா? இந்தப் பாறையிலிருந்து நான் விலகி வந்தால், அது உருண்டு கீழே என் மேல் விழுந்து என்னை நசுக்கிவிடும். நீர் ஒரு நிமிடம் பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். அதற்குள் நான் ஓடிப் போய் ஒரு மரக் குச்சி கொண்டு வருகிறேன். அதை தாங்கலாகக் கொடுத்து, பாறையை நேராக நிறுத்துவோம். அப்புறம் வானம் கீழே விழும்போது, நாம் இரண்டு பேரும் பாறையின் கீழ் பத்திரமாக இருக்கலாம். அப்புறம் நீங்கள் என்னைச் சாப்பிடலாம்.”
ஓநாய் பாறையைப் பிடித்துக் கொண்டது. முயல் ஓடிப் போயிற்று. நேரம் பறந்தது. முயல் வரவில்லை.
“முயலாரே, முயலாரே, என் கை வலிக்கிறது. சீக்கிரம் வாரும். நான் நகர்ந்தால், பாறை என் மேல் விழுந்து என்னைச் சட்டினி ஆக்கிவிடும்.”
முயல் அங்கே இருந்தால்தானே, ஒநாயின் சப்தம் அதன் காதில் விழும்?
தன்னைக் கொல்ல வந்த ஓநாயை, முயல் தன் தந்திரத்தால் வென்ற கதை இது. இந்தக் கதையில் முயல் புத்திசாலியாக, ஹீரோவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாயர்களின் பெரும்பாலான கதைகளில் புத்திசாலி முயல்தான் ஹீரோ. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
முயலைக் கெட்ட குணமுள்ளதாக, வில்லனாகக் காட்டும் சில கதைகளும் உள்ளன.
உதாரணத்துக்கு இதோ ஒன்று.
முயலுக்குக் கொம்பு உண்டா? கிடையாது. மானுக்குக் கொம்பு உண்டா? உண்டு. ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முயலுக்குக் கொம்புகள் இருந்தன, மானுக்குக் கொம்புகள் கிடையாது. எப்படி வந்தது இந்த மாற்றம்? சொல்கிறது மாயர்களின் கதை.
முயல் காட்டில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு அழகான கொம்புகள் இருந்தன. இந்தக் கொம்புகள் வித்தியாசமானவை. தொப்பியைப் போல் இவற்றைக் கழற்றலாம், மறுபடியும் மாட்டிக் கொள்ளலாம். தன் கொம்புகளைப் பற்றி முயலுக்கு மிகுந்த கர்வம் உண்டு.
வழியில் ஒரு மான் வந்தது. முயலின் கொம்பை மான் மிகவும் ரசித்தது.
“முயலாரே, உங்கள் தொப்பி ரொம்ப அழகாக இருக்கிறது. நான் அதைக் கொஞ்ச நேரம் போட்டுக் கொண்டு பார்க்கலாமா?”
“தாராளமாக. ஆனால் ரொம்ப நேரம் நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. என்னிடம் சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.”
மான் முயலிடமிருந்து கொம்பை வாங்கியது, தலையில் போட்டுக்கொண்டது,வேகமாக ஓடிப் போனது. திரும்பி வரவில்லை.
என்ன செய்யலம் என்று முயல் யோசித்தது. மக்களுக்குக் குறை என்றால் மன்னனிடம்தானே முறையிடவேண்டும்? கடவுளுக்குச் சமமான அரசர்தானே ஏழை எளியோரைக் காப்பாற்றுவார்கள்?
முயல் மன்னரிடம் போனது.
“அரசரே, என் கொம்பை மான் என்னிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டது. நீங்கள்தான் என் கொம்பை எனக்குத் திரும்பி வாங்கிக் கொடுக்க வேண்டும்.”
“சரி, உன் புகார் உண்மையானதாக இருந்தால் உனக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பது என் வேலை.”
“மன்னா, எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்.”
“என்ன அது? சொல்.”
“அரசரே, நான் உருவத்தில் சிறியவனாகச் இருப்பதால்தான் மான் போன்ற மிருகங்கள் என்னை ஏமாற்றுகின்றன. எனக்கு நீங்கள் கடவுளிடம் சொல்லிப் பெரிய உருவம் வாங்கித் தர வேண்டும்.”
“நீ நேர்மையாக நடந்தால் இவை அத்தனையும் உனக்குக் கட்டாயமாகக் கிடைக்கும். நான் உனக்கு ஒரு பரிட்சை வைக்கப்போகிறேன். அதில் நீ ஜெயித்தால் கொம்பும் பெரிய உருவமும் உனக்குக் கிடைக்கும்.”
“சொல்லுங்கள் மகராஜா.”
“நீ நான்கு மிருகங்களின் தோலை முதலில் எனக்குக் கொண்டு வா.”
முயல் வீட்டுக்குப் போனது. வெகு நேரம் ஆலோசித்தது. ஒரு திட்டத்தை முடிவு செய்தது. முயலுக்கு நன்றாகக் கிடார் வாசிக்கத் தெரியும். கிடாரையும் ஒரு பெரிய தடியையும் கைகளில் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் புறப்பட்டது.
கிட்டாரில் இனிய இசை எழுந்தது. ஒரு பெரிய பாம்பு எதிரே வந்தது.
“முயலாரே, முயலாரே, நீங்கள் இனிமையாக கிட்டார் வாசிக்கிறீர்கள். உங்கள் பாட்டுக்கு ஆட நான் ஆசைப்படுகிறேன்.”.
“ரொம்ப சந்தோஷம் பாம்பு அண்ணா. இதோ உங்களுக்காக ஒரு பாட்டு.”
பாம்பு தன்னை மறந்து ஆடியது. பாட்டில் லயித்திருந்த பாம்பின் தலையில் முயல் தன் தடியால் அடித்தது. பாம்பு இறந்தவுடன் அதன் தோலை முயல் எடுத்துக்கொண்டது.
அடுத்தது, சிங்கம், முதலை ஆகியவை முயலின் கொலைகாரத் திட்டத்துக்குப் பலியானார்கள்.
அடுத்ததாக முயல் பெரிய குரங்குக் கூட்டத்தைப் பார்த்தது. “இவர்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டினால் நிறையத் தோல்கள் தேறும்.”
குரங்குகள் புத்திசாலிகள். வெறும் பாட்டால் அவர்களை ஏமாற்ற முடியாது. எனவே முயல் நிறைய வாழைப் பழங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு குரங்குகள் அருகே வந்தது.
“முயல் மாமா, முயல் மாமா, எங்களுக்குப் பழம் தாருங்கள்” என்று குரங்குகள் கெஞ்சின.
“காட்டில் இருக்கும் குளத்துக்குப் பக்கத்தில் மீன் பிடிக்கும் வலை இருக்கிறது. அதைக் கொண்டு வாருங்கள். எல்லாப் பழங்களையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.”
குரங்குகள் ஓடிப் போய் வலையைக் கொண்டு வந்தன. முயல் எல்லாப் பழங்களையும் அவர்களிடம் கொடுத்தது.
குரங்குகள் வாழைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்கின. அந்த ஆனந்த மயக்கத்தில் தம்மையே மறந்தன. முயல் வலை வீசியது. அத்தனை குரங்குகளும் வலைக்குள் மாட்டிக் கொண்டன. இப்போது முயல் எல்லாக் குரங்குகளையும் கொன்று தோலை எடுத்துககொண்டது.
அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டோம், திருட்டுப் போன கொம்பு திரும்பக் கிடைக்கும். யானை போலப் பெரிய உருவத்தோடு உலா வரலாம் என முயல் மனத்தில் ஆயிரம் ஆசைக் கனவுகள்.
“ராஜா, நீங்கள் ஆணையிட்டபடி மிருகங்களின் தோல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
மன்னர் பார்த்தார்.
“முயலாரே, இத்தனை மிருகத் தோல்களை எப்படிச் சேர்த்தீர்கள்?”
முயல் தன் வீர சாகசங்களை விவரித்தது.
மன்னர் கோபப்பட்டார்.
“நீ நல்லவனாக இருந்தால், காட்டில் இறந்து கிடக்கும் மிருகங்களின் தோல்களைச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பாய். உன் சுயநலத்துக்காக, மற்ற மிருகங்களைக் கொன்ற நீ மகா அயோக்கியன். கொம்பும் பெரிய உருவமும் இருந்தால் நீ இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வாயோ? உனக்கு இனிக் கொம்பு கிடையவே கிடையாது. அது மானுக்குத்தான். உன் உருவமும் சிறியதாகவே இருக்கும்.”
அத்துடன் முயலின் காதையும் மன்னர் பிடித்து இழுத்தார். முயலின் காதுகள் நீண்டுபோயின.
அதனால்தான் இன்றும் முயல்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. கொம்புகள் இல்லை. சக உயிர்களைக் கொன்றால் மன்னிப்பே கிடையாது, அரசரின் முடிவுதான் இறுதி முடிவு என்ற கருத்துகளை அழகாக வெளிப்படுத்துகிறது இந்தக் கதை.
மாயர்களின் பழங்காலக் கதைகள் இந்தியப் பஞ்சதந்திரக் கதைகள் போல் முயல், நரி, ஓநாய் போன்ற மிருகங்களை மையமாகக் கொண்ட நீதி போதனைக் கதைகள்.
0