Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

அழகு

$
0
0

சங்க காலம் / தேடல் - 12

யாருக்காக?

15_madurai1நலமும் வளமும் அழகிலிருந்துதான் தொடங்குகின்றன. அழகு ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகின்றது. அது இயற்கையழகாகவோ செயற்கையழகாகவோ இருக்கலாம். ஆனால், அழகு முதன்மைத்தேவைதான். யாருக்காக ஒருவர் அழகாக இருக்கவேண்டும் என்ற வினாவுக்கான உண்மையான விடை, “அவரவர்களுக்கான அழகு“ என்பது அல்ல. “எல்லோருக்குமான அழகு“ என்பதுதான். உண்மையில், பிறருக்காகத்தான் நாம் நம்மை அழகாக்கிக்கொள்கிறோம்அக்கால மக்கள் தமது உணவுத் தேவைக்குப் பின்னர் உடைத்தேவையிலும் அலங்காரத் தேவையிலும் கவனம் செலுத்தினர். ஆம்,மனிதன் உடையிலும் அலங்காரத்திலும்தான் புறவயமாக விலங்கிலிருந்து வேறுபடுகின்றான்.

ஆடைகள் ஆயிரம்

தொல்தமிழர்கள் தழைகளையும் பூக்களையும் மரல்நாராலும் நறைநாராலும் கோத்து ஆடையாக அணிந்து வந்தனர். விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் கம்பளி ஆடைகளையும் அணிந்தனர். பஞ்சையும் பட்டு நூலையும் கொண்டு நெய்து துணிகளை உருவாக்கினர். மலை எலியின் முடியினையும் சிறு விலங்குகளின் முடிகளையும் துணிகளை உருவாக்கப் பயன்படுத்தினர். அத்துணிகள் புகையைப்போல, பால் ஆவியைப் போல, பாம்புச் சட்டையைப் போல, மூங்கிலின் உரியைப் போல மிக மெல்லியதாக இருந்தன.

இடையன் ஒருவன் பசுமையான இழைகளால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் மாசுபடிந்த ஆடையையும் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 54ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள், மரப் பட்டைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் தழைகளால் செய்யப்பட்ட ஆடைகளையும் அணிந்திருந்ததாகத் திருமுருகாற்றுப்படையின் 201 முதல் 204 வரையிலான அடிகளும் முழுவதும் பூவால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்ததாகப் புறநானூற்றின் 116ஆவது செய்யுளும் தலைவியும் அவளது தோழியும் 99 வகையான பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்து, அவற்றின் புறவிதழ்களை நீக்கித் தழையாடை செய்து அணிந்ததாகக் குறிஞ்சிப்பாட்டும் தெரிவித்துள்ளன.

பனையோலைகளையும் தென்னை ஓலைகளையும் பனையகணி, நறைநார், மரல்நார் ஆகியவற்றைக் கொண்டு வலை, பெட்டி, வட்டி, பிழா, கடகம், பேழை போன்றவற்றை உருவாக்கிப் பயன்படுத்திய பழந்தமிழர்கள், நார்களை விடுத்து நூலுக்கு மாறியது காலக்கொடைதான்.

காலப்போக்கில் பருத்தியின் பயன்பாட்டினைப் புரிந்துகொண்ட தமிழர்கள் அவற்றைக் கொண்டு நூல் உருவாக்கவும் அவற்றை நெய்து ஆடை செய்யவும் கற்றுக்கொண்டனர்.

காருகம்“ என்பது, துணியைக் குறிக்கும் சொல். “காருகர்“ என்பது, நெசவாளரைக் குறித்தது. “துகில்“ என்ற சொல், பெரும்பான்மையாகப் பருத்தித்துணியையே குறித்தது.

சங்க காலத்தில் பருத்தி பயிரிடப்பட்ட செய்தியைப் புறநானூற்றின் 299ஆவது மற்றும் 324ஆவது செய்யுள்களும் அகநானூற்றின் 129ஆவது செய்யுளும் எடுத்துக்கூறியுள்ளன.

பழந்தமிழர்கள் பருத்தியை மூட்டை மூட்டையாக விளைவித்த செய்தியினைப் புறநானூற்றின் 393ஆம் செய்யுளும் வில்லால் அடித்து, நுரைபோன்ற தூய்மையான பஞ்சினை உருவாக்கிய செய்தியினை நற்றிணையின் 247ஆவது மற்றும் 299ஆவது செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளன.

பருத்தியை நூலாக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டனர். நூல் நூற்கும் பெண்கள் வைத்துள்ள கோது நீக்கப்பட்ட பஞ்சு பற்றிப் புறநானூற்றின் 125ஆவது செய்யுளும் நூல் நூற்கும் பெண்கள் ஒளிக்காக ஏற்றியுள்ள விளக்கொளி பற்றிப் புறநானூற்றின் 326ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளன. விடியவிடிய இப்பணியினை அவர்கள் செய்ததாகப் புறநானூற்றின் 326ஆம் செய்யுளும் நற்றிணையின் 353ஆவது செய்யுளும் கூறியுள்ளன. இதனால் அவர்களின் வீட்டைச் சுற்றிப் பஞ்சுத் தூசி படர்ந்திருந்தமையைப் புறநானூற்றின் 116ஆவது செய்யுள் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடைகளுக்குப் பூவேலைப்பாடுகள் செய்து அழகுப்படுத்தினர். துணிகளுக்கு நறுமணமூட்டினர். பூந்துகில் வகையிலான துணிகள் மிகவும் வழவழப்பாக இருந்தன. அவ் ஆடைகள் நுண்மையும் மென்மையும் வாய்ந்தவையாக இருந்தன. அவை, “அகன்ற பகன்றை மலர்“ போன்று இருந்ததாகப் புறநானூற்றின் 390ஆவது செய்யுளும் “நீலநிறமுடைய பூந்தொழில் செய்யப்பட்ட ஆடை“ என்று புறநானூற்றின் 274ஆவது செய்யுளும் “சிவந்த நிறமுடைய பூந்தொழிலுடைய துகில்“ என்று திருமுருகாற்றுப்படையின் 15ஆவது அடியும் “புகையை நுகர்தால் போல மாசடையாத ஆடை“ என்று திருமுருகாற்றுப்படையின் 138ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளன.

மெல்லிய துணிகளால் ஆடைகள் மட்டுமன்றி அரசருக்குரிய குடைகளும், கொடிகளும், பதாகைகளும் உருவாக்கப்பட்டன.

தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் அழுக்கான ஆடைகளை நீக்கிப் புத்தாடைகள் அணியுமாறு கூறிய மன்னர், அவர்களுக்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடைய பட்டாடைகளைக் கொடையாக வழங்கினார் என்றும் பூவேலைப்பாடுகளையுடைய ஆடைகளை வழங்கினார் என்றும் புறநானூற்றின் 398ஆவது செய்யுள் தெரிவித்துள்ளது.

பட்டாடைகள் பல வகைப்பட்டிருந்தன. அவை, இறஞ்சி,  இரட்டு, கவற்றுமடி, கத்தூலம், கரியல், குருதி, குஞ்சரி, கோங்கலா, கோசிகம், சில்லிகை, சித்திரக்கம்மி, சுண்ணம், செம்பொத்தி, தத்தியம், திருக்கு, துரியம், தேவாங்கு, தேவகிரி, பஞ்சு, பச்சிலை, பரியட்டக்காசு, பணிப்பொத்தி, பங்கம், பாடகம், பீதகம், புங்கர்க்காழகம், பேடகம், நுண்டுகில், வடகம், வண்ணடை, வெண்பொத்தி, வேதங்கம் என வழங்கப்பட்டன.1 

ஆடைகளைத் தூய்மைப்படுத்த காழியர்கள் (வண்ணார்) உவர்மண்ணைத் துணிகளில் தோய்த்துத் துவைத்ததாக அகநானூறின் 89ஆவது செய்யுள் சுட்டியுள்ளது. ஆறுகளில் வண்ணார் துணிகளைத் துவைக்கும் துறைக்கு (இடத்துக்கு) “துறைபோகு“ என்று பெயர்.

நல்ல ஆடைகளை எப்போதும் புதிதாகவே இருக்குமாறு புலத்தியர்கள் (துணியைத் துவைப்பவர்கள்) அவ் ஆடைகளுக்குப் பசைதோய்த்து (கஞ்சி), கல்லில் அடைத்து, முறுக்கி நீர் உலர்த்தித் துவைத்துக்கொடுத்த செய்தியைக் குறுந்தொகையின் 330ஆவது செய்யுளும் மதுரைக்காஞ்சியின் 721ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளன. அவ் ஆடைகள் நறுமணத்தோடு இருக்க அவற்றுக்கு அகிற்புகையூட்டிய செய்தியை மதுரைக்காஞ்சியின் 554ஆவது அடியும் புலத்தியர் இரவும் பகலும் இப்பணியில் ஈடுபட்டனர் என்ற செய்தியை நற்றிணையின் 90ஆவது செய்யுளும் தெரிவித்துள்ளன.

அக்காலத் தமிழர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துகிலினையும் துக்கத்தை வெளிப்படுத்த கலிங்கத்தையும் உடுத்தினர். கணவனைப் பிரிந்த பெண்கள் மாசேறிய கலிங்கத்தையும் கணவனைக் கூடிய பெண்கள் பூவேலைப்பாடுகளை உடைய துகிலையும் உடுத்தியதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

நுண்வினை“ என்று குறிப்பிடப்படும் சாயத்தொழிலும் அக்காலத்தில் இருந்துள்ளது. அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழந்தமிழர்களின் “சாயத்தொட்டிகள்“ கண்டெறியப்பட்டன. அவை நான்கு மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் அகலமும் உடையனவாக இருந்தன. சுடுமண்ணால் செய்யப்பட்ட நூல் நூற்கும் “தக்களி“யும் அவ் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.2அவுரி முதலான பல செடிகள் சாய நிறங்களை உருவாக்கப் பயன்பட்டன. கொன்றை மரப் பட்டைகளிலில் வேதிப்பொருட்களைச் சேர்த்துக் கருமை நிறத்தைக் கண்டுபிடித்தனர். கடுக்காயையும் கொன்றையையும் கலந்து வேறொரு நிறத்தைக் கண்டுபிடித்தனர். சாயவேரையும் காசுக்கட்டியையும் இணைத்து அடர்சிவப்பு நிறத்தைக் கண்டுபிடித்தனர். இந்நிறங்களைத் துணிகளில் ஏற்றும் சாயத்தொழில்நுட்பத்தில் அவர்கள் தேர்ந்திருந்தனர். நீல ஆடைகளை உருவாக்கியமை பற்றிக் கலித்தொகையின் 7, 11, 15, ஆகிய செய்யுள்களும் கருமை நிற ஆடைகளை உருவாக்கியமை பற்றி மதுரைக்காஞ்சியின் 638ஆவது அடியும் தெரிவித்துள்ளன.

பணக்காரப் பெண்கள் பகலில் பட்டாடையையும் இரவில் மெல்லிய துகிலையும் உடுத்தினர். அரசமாதேவியர் தம் மார்பில் “வம்பு“ எனும் கச்சினைக் கட்டியிருந்தனர். இரவுக்காவலர்கள் நீலநிறக் கச்சினையும் படம் எனும் சட்டையையும் அணிந்திருந்தனர். இறைவழிபாடு செய்வோர் நீராடியபின்னர் தங்களின் கீழாடையாகக் “காழகம்“ என்பதனை அணிந்தனர். “அறுவை“ என்ற தூய்மையான ஆடையினை அரசர்கள் புலவர்களுக்கு வழங்கினர்.

பெண்கள் வண்ணப் புடைவை (புட்டகம் அல்லது முருங்காக் கலிங்கம்) அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 12ஆவது பாடலும் நீராடுவதற்குரிய ஆடையினை அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 6ஆவது மற்றும் 7ஆவது பாடல்களும் சுட்டியுள்ளன.

கச்சு“ என்ற ஆடை மார்பில் அணியப்படுவது என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 71ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றது. அது இடுப்புவரையில் அணியத்தக்க ஆடை என்று அகநானூற்றின் 376ஆவது செய்யுளிலிருந்து உணரமுடிகின்றது. பூவேலைப்பாடுகள் மிக்க கச்சு என்ற செய்தியினைக் குறிஞ்சிப் பாட்டின் 125ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றது. போர் வீரர்களும் கடவுளர்களும் மகளிரும் கச்சி அணிந்திருந்தனர் என்ற செய்திகளை நற்றிணையின் 21ஆவது செய்யுளும் சிறுபாணாற்றுப்படையின் 238, 239ஆகிய அடிகளும் முல்லைப்பாட்டின் 46, 47ஆகிய அடிகளும் உணர்த்துகின்றன.

மனிதர்கள் மிகுதியாகக் கூடும் கூட்டத்துக்குச் செல்லும்போது சில பெண்கள் தன் உடலை முழுவதும் மறைத்துக்கொள்வதற்காக மெய்யுறை அணிந்ததாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இதனை “மெய்யாப்பு“ என்றும் குறிப்பிடுவர். “முழுஉடல்உடை“ என்று கூறலாம். இஸ்லாமியப் பெண்கள் “பர்தா“ அணிவதைப்போல.

அழகுக்கு அழகூட்டுதல்

பொன்“ தமிழ்நாட்டில் விளைவதல்ல. அது பிற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான். பழம்பாடல்கள் இரும்பு போன்ற பிற அனைத்து உலோகங்களையும் “பொன்“ என்றே சுட்டியுள்ளன. அச்சொல் இடம்பெரும் சூழலைப் பொருத்துதான் அது தங்கத்தைக் குறிக்கின்றதா என்று அறிந்துகொள்ளமுடியும். தங்கத்தைப் “பொன்“ என்றும் “பொலம்“ என்றும் தமிழர்கள் குறிப்பிட்டனர். பொன் என்பது, “சாதரூபம்“, “கிளிச்சிறை“, “ஆடகம்“, “சாம்பூநதம்“ என நான்கு வகைப்படும். இந்நான்கு சொற்கள் குறித்துப் புறநானூற்றின் 377ஆம் செய்யுளிலும் மதுரைக்காஞ்சியின் 410ஆவது அடியிலும் திருமுருகாற்றுப்படையின் 18ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

பொன் நகை செய்ய அப்பொன்னுடன் செம்பினைக் கலப்பர். செம்பின் அளவுக்கு ஏற்ப பொன்னின் மாற்று கூடும் அல்லது குறையும். பொன்னின் மாற்றினைக் காண உரைகல் பயன்படும். அதனைப் பழந்தமிழர்கள் கட்டளைக்கல் என்று அழைத்தனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 220ஆம் செய்யுளிலும் அகநானூற்றின் 178ஆவது செய்யுளிலும் நற்றிணையின் 3, 25 ஆகிய செய்யுள்களிலும் குறுந்தொகையின் 192ஆவது செய்யுளிலும் காணமுடிகின்றது.

பொன் நகையில் பலவித மணிகளைப் பதித்துப் பல்வேறுபட்ட வடிவங்களில் நகைகளைச் செய்த “கம்மியர்கள்“ அக்காலத்தில் இருந்தனர்.

நகைகளில் மகளிர் அணிவன, ஆடவர் அணிவன என இரண்டு பொதுவகைகள் காணப்பட்டன. மகளிர் அணிந்த நகைவகைகள் குறித்துச் சிலப்பதிகாரத்தில் விரிவான பட்டியல் இருக்கிறது. முத்து, மாணிக்கம் அல்லது பிற கற்களைப் பரல்களாக உள்ளடக்கிய சிலம்பு (நூபுரம்), கால்விரல் மோதிரம், பரியகம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன் வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளைமீனைப் போன்று செய்யப்பட்ட மாணிக்க மோதிரம், மோசை என்னும் மரகதக் கடைசெறி, கழுத்திலணியும் வீரச் சங்கிலி, நேர்ச் சங்கிலி, பொன் ஞாண், அரிநெல்லிக்காய் மணிமாலை, முகப்பில் கட்டின இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணி, சீதேவியார், பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி, தொடி, அரையணி, இரத்தினம் கட்டின அடுக்காழி, கழுத்தணி, கலாபம், காஞ்சி, காதணி, காலணி, கால் விரலணி, கால் மோதிரம், குறங்கு செறி, கொக்குலாய், கையணி, கைவிரலணி, சரப்பளி, சங்குவளை, சிலம்புதண்டை, சூடகம், தலையணி, தாறாருவி, தொடையணி, தோடு, தோளணி, பருமம், பாதசாலம், பிடர் அணி, பீலி, புல்லகம், பூரம்பாளை, பொன்வளை, பொன்னரிமாலை, நவரத்தினவளை, நீலக்குதம்பை, நுண் ஞாண் சாவடி, நுழைவினை, நேர்சங்கிலி, மகரக்குழை, மகரப் பகுவாய், மகரவாய் மோதிரம், மாணிக்க வளை, மேகலை, முத்தாரம், முஞ்சகம், முத்துவளை, வல்லிகை, வாளைப்பகுவாய், மோதிரம், விரிசிகை, வீரசங்கிலி,இடையில் அணிந்த பட்டிகையான மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐவகை அணிகள், காதில் அணியும் குதம்பை, வளர்ந்த காதில் அணியும் கடிப்பிணை, பலவகையான பூத்தொழில் குயிற்றப்பட்ட கைவளைகள், முத்தால் இழைக்கப்பட்ட கைவளைகள் எனப் பற்பல நகைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.3

இவற்றையெல்லாம் அணிந்திருந்த பழந்தமிழச்சி பொற்தேவதைதானே! அந்தப் பொற்தேவதைகளுள் ஒன்று புதுமணலில் நடந்துவந்த செய்தியினைப் புறநானூற்றின் 253ஆம் பாடல் தெரிவித்துள்ளது. “புதுமணல்“ என்பது மங்கல நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பரப்பப்படுவது. ஆதலால், இந்தத் தேவதை மணமகளாகவும் இருக்கக்கூடும்.

பல வகையான ஆபரணங்களை அணிந்த இளம்பெண் பந்தாடிய செய்தியையும் பொற்கழங்காடிய செய்தியையும் பெரும்பாணாற்றுப்படையின் 327 முதல் 335வரையுள்ள அடிகள் தெரிவித்துள்ளன.

வறுமையில் வாடும் விவசாயப் பெண்கள் (வெறுந்தேவதைகள்) வயலில் களைச்செடிகளாக விளைந்த குவளை, ஆம்பல், வள்ளி போன்ற பூச்செடிகளின் தண்டுகளை வளைத்துத் தமக்கு வளையல்கள் செய்து அணிந்ததாகப் புறநானூற்றின் 352ஆம் செய்யுள் தெரிவித்துள்ளது.

மகளிருக்கான அடைமொழிகளை அவர்கள் அணிந்திருந்த நகைகளை மையப்படுத்தியும் உருவாக்கியுள்ளனர். சான்றாக, “செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு - 36), “ஒண்டொடி மகளிர்“ (புறநானூறு - 24), “வாலிழை மங்கையர்“ (புறநானூறு - 11) இத்தொடர்களைக் காட்டலாம்.

குழந்தைகள் தெய்வமல்லவா! அவர்களுக்கான அலங்காரம் தனிப்பட்டதாகவே இருந்தது. குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும் பிறையும், மூவடம் கோத்த பொன் சங்கிலி, கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியும், கை விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள், மணிகள் உள்ளிட்ட சதங்கைகள், கால்களுக்குப் பொன் இரட்டைச் சரிகள், மணியும் பவழமும் கோத்த அரைஞாண், வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்ட வாய்ப்பூட்டுடைய சதங்கைகள், கிண்கிணி எனப் பலவும் அணிவிக்கப்பட்டன. குழந்தைக்காகச் செய்யப்பட்ட இரு வடங்களினாலான காற்சரி என்ற பாதசரம், பொடி வைத்து இணைக்கப்பட்டமை வெளியில் தெரியாதவாறு மீண்டும் நெருப்பிலிட்டு ஒளியூட்டப்பட்ட செய்தியினைக் கலித்தொகையின் 85ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆடவர்கள் அணிந்த நகைகள் மிகக் குறைவுதான். மதாணி, முத்துமாலை, வெள்ளிக் கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளைகள் (காப்பு போன்றன) ஆகியன மட்டுமே அணிந்திருந்தனர். விலைமதிப்பற்ற பல மணிகள் கோர்க்கப்பட்ட பாம்புபோல வளைந்த ஆரத்தையும் சேரமான் வஞ்சன் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 398ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பொற்றொழில்

யானையின் முன் மண்டையிலிருந்து துதிக்கை வரை அணியப்படும் பொன்னகைக்கு அணிஓடை, பொற்பட்டம், முகபடாம் என்று பெயர்கள் உண்டு. ஓடைப் பொன் சிறந்த பொன்னாகக் கருதப்பட்டது. பொன்னால் செய்யப்பட்டு, வெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட தாமரைப் பூவைச் (பொற்றாமரை) சிறந்த குரல்வளமுடைய பாணருக்குப் பரிசிலாக வழங்கியுள்ளனர். பொன்னை உருக்கிக் கட்டியாக்கிப் பின்னர் அதனை அடித்து கடகம், கங்கணம், காப்பு என விதவித அணிகலன்களை செய்துள்ளனர்.

பொற்தகடுகளால் ஆன கூண்டுகள் அரங்கு ஆகியவற்றைப் பதித்து அதன் மேல் இரத்தினங்களையும் பதிக்கும் செயலுக்குக் குந்தனவேலைப்பாடுகள் என்று பெயர். கெட்டிப் பொன்னில் பலவிதக் கற்களைப் பதித்தலுக்குக் கட்டடவேலை என்று பெயர். பொற்தகடுகளில் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கடையலங்காரம், சடைபில்லை, அட்டிகை, பொத்தான் ஆகியவற்றைச் செய்தவற்கு நகாசுவேலை என்று பெயர். குந்தன வேலைப்பாடுகளுக்குரிய அச்சுகளில் இரத்தினப் பொடிகள், பலநிறக் கண்ணாடிகள் ஆகியவற்றைப் பதிக்கும் வேலைக்கு மின்னக் காய்ச்சு வேலை என்று பெயர். பொன்னாலான ஒட்டியாணம் செய்வதற்குப் பிடிப்போகரை என்று பெயர். அக்காலப் பொற்கொல்லர்கள் பொற்தொழிலில் கைதேர்ந்திருந்தனர்.

கார்கூந்தல் பெண்ணழகு

கறுத்து, நீண்டு, நெளிந்த கூந்தல் உடைய பெண் அழகு மிக்கவளாகக் கருதப்பட்டாள். பெண்கள் கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர். மகளிரின் கூந்தலுக்கு “ஓதி“ என்ற பெயர் உண்டு. கூந்தலுக்கு “ஐம்பால்“ என்ற ஒரு பெயரும் உண்டு. அதாவது, குழல், அகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை (குறுந்தொகை - 229) என ஐந்துவகையாகக் கூந்தலை அழகுபடுத்துவதால் அதற்கு அப்பெயர் வந்தது.

பெண்கள் தங்களின் கூந்தலை ஆற்றில் நீராடியும் துவர்ப்பொருள் கொண்டு தோய்த்தும் தூய்மைப்படுத்தினர் என்றும் கூந்தலில் படிந்துவிட்ட மாசுக்களையும் எண்ணெப் பசையையும் நீக்க இழைதுகள்களைப் பயன்படுத்தினர் என்றும் பரிபாடலின் 10ஆவது பாடலின் 89 முதல் மற்றும் 91 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

நீராடிய பெண்கள் தங்களின் கூந்தலின் ஈரத்தை நீக்குவதற்காக வெயிலில் உலர்த்தி, எண்ணெய் தடவி, “தகரம்“ என்ற மரத்தின் சாந்து பூசி, அகிற்புகையூட்டியதாகக் குறுந்தொகையின் 107 முதல் 110 வரையிலான செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளன. கூந்தல் மணக்கவேண்டும் என்பதற்காக மானின் கஸ்தூரிக் குழம்பினைத் தடவியதாகச் சிலப்பதிகாரம் 29 மற்றும் 30ஆவது அடிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அக்கருவிகொண்டு அழகுபடுத்தப்பட்ட கூந்தல் கார்மேகத்தைப் போல சீராக இருந்ததாகக் கலித்தொகையின் பாலைக்கலி 31 மற்றும் 35ஆவது பாடல்கள் வருணித்துள்ளன.

கூந்தலைச் சீர்படுத்த கழல்மணிக்கொடியின் கனியைப் பயன்படுத்தினர் என்ற செய்தியைப் புறநானூற்றின் 97ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

சீர்படுத்தப்பட்ட கூந்தலினைக் கதுப்பு, கொண்டை, அளகம், குழல், பின்னல் எனப் பலவாறு அமைத்துக்கொண்டனர். அக்கூந்தல் மேகம் கால் இறங்கியதுபோல இருந்தது என்று அகநானூற்றின் 323ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் தங்களின் கூந்தல் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்களைப் பயன்படுத்தினர். மகரவாய், வகிர் போன்ற தலையணிகளை அணிந்தனர். மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்கள் அணிந்தனர். மலர் அணியப்படாத கூந்தலுடைய பெண்ணை இழிவாகக் கருதினர். கூந்தலுக்குக் களிமணைத் தோய்த்து தூய்மைப்படுத்தும் வழக்கம் இருந்தது. கூந்தலுக்கு வாசனையூட்ட அகிற்புகையைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினர்.

கண்ணுக்கு மையழகு

முக அலங்காரத்திற்காக மெய்க்கலவையைப் பயன்படுத்தினர். இக்கலவை மணம்மிக்கது. இதனை முகத்துக்கும் கை, கால்களுக்கும் தடவினர். பெரும்பாலும் அக்கால மகளிர் தம் மார்புகளுக்குச் சந்தனக்குழம்பு பூசுவது உண்டு. அச்சந்தனச் சாந்தினைவிட மணம்மிக்க அகிற்புகையின் மனம்மிக்க சந்தனச் சாந்தினைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் தன் மார்பில் தடவியதாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

மகளிர் தம் கண்களுக்குக் கருமையிட்டனர். மைதீட்டும் குச்சியினைக் “கோல்“ என்று அழைத்தனர். பெண்களின் மையிட்ட கண்கள் பற்றிய வர்ணனை பல செய்யுள்களில் இடம்பெற்றுள்ளது. சான்றாக நற்றிணை – 252, கலித்தொகை பாலைக்கலி – 26, பரிபாடல் -7, 18 ஆகிய பாடல்களைக் காட்டலாம்.

நெற்றியில் திலகமிடுதலை மகளிர் தவறாது கைக்கொண்டனர். மகளிர் தமக்குத் திலகமிட்டுக் கொண்டதனை நற்றிணையின் 62ஆம் செய்யுளும் கலித்தொகையின் 92ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளன.

தன்னை முழுவதுமாக அலங்கரித்துக்கொண்ட பெண் தன்னழகைத் தாம் பார்த்து மகிழ்வதற்காகக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒளி ஊடுறுவும் கண்ணாடியை “பாண்டில்“, “வயங்கல்“, “வயங்குமணி“ என்று குறிப்பிட்டனர். “வயங்குமணி“ என்பது பளிங்குக் கல்லையும் குறிக்கும். ஒளியை எதிரொளிக்கும் கண்ணாடியை “ஆடி“, “மண்டிலம்“ என்று குறிப்பிட்டனர். அதில் தெரியும் பிம்பத்தை, நிழலுருவைப் “பாவை“ என்றனர். இக்கண்ணாடிகள் கையடக்கமாகச் சிறியதாகவும் ஆளுயரத்தில் பெரியதாகவும் இருந்துள்ளன. இதனைப் பரிபாடலின் 12ஆவது பாடலும் குறுந்தொகையின் 8 ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

இவ்வாறாகத் தன்னை அழகுபடுத்திக்கொண்ட பெண்கள், தம் வாய் மணக்கும் வகையில் வாசனைப் பொருள் கலந்த பாக்கினை வாயில் அடக்கிக்கொண்டனர். நெடிய தொலைவுவரைக்கும் மணக்கும் வாசனைப் பொருள்களைத் தன்மீது தடவிக்கொண்டனர்இச்செய்திகளைப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆண்களின் அலங்காரம்

ஆடரின் முடிக்கு “ஓரி“ என்ற பெயர் உண்டு. ஆடவர் தம் தலைமுடியினைக் குடுமியாக முடிந்தனர். முன் மண்டையில் (நெற்றிக்குமேல்) முடிகளைக் களைந்திருந்தனர். அது சாத்திரத்துக்காக அல்ல; முன்மண்டையில் வெயில் படவேண்டும் என்பதற்காக. ஆண்களும் தலையில் பூச்சூட்டிக்கொண்டனர். அதற்கு கண்ணி என்று பெயர். பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ள சேரமன்னருக்குக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர். புறத்திணையில் போருக்குச் செல்லும் வீரர்கள் தலையில் அடையாளப் பூக்களைச் (வெட்சிப்பூ, கரந்தைப்பூ, நொச்சிப்பூ, வகைப்பூ போன்றன) சூடினர். பிற ஆண்கள் பூமாலை அணிவதும் உண்டு.

உணவு உயிர்வாழத் தேவையானது. “அழகு“ வாழ்க்கையை வாழத் தேவையானது. அக்காலம் முதல் இக்காலம் வரை ஒப்பனைகள் சார்ந்த பொருட்கள், கருவிகள் இன்னபிற மாறி வந்தாலும் மனிதர்களின் மனத்தில் உள்ள, “தன்னை அழகாக்கிக்கொள்ளுதல்“ என்ற அழகுணர்ச்சி மட்டும் மாறவேயில்லை. மானுடம் வாழ்ந்திருக்க அதுவே பெரிய உந்து சக்தி.

அடிக்குறிப்புகள்

  1. http://tamilacademy.org

  2. சாமிநாதன், ., சங்க காலத் தொழில்நுட்பம், . 30.

  3. http://www.keetru.com

- – -

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!