Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

காலனியத்தின் புதிர்கள்

$
0
0

அத்தியாயம் 2
article-1298569-02F49E4C0000044D-94_468x286

ஐரோப்பாவில் முதலாளித்துவம் வளர்ச்சி கண்டதற்கும் தொழில்மயமாக்கல் துரிதமடைந்ததற்கும் காலனியம் பேருதவி புரிந்தது. ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பிறப்பிப்பதற்கு காலனியம் ஒரு மருத்துவச்சியாகப் பங்காற்றியது என்றுகூடச் சொல்லலாம் என்கிறார் அனியா லூம்பா. ஐரோப்பிய காலனயாதிக்கத்துக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை 19ம் நூற்றாண்டு மற்றும் 20ம் நூற்றாண்டு பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய அறிவை நீட்டிப்பதன்மூலம் இந்தியத் துணைகண்டத்தை முன்னேற்றலாம் என்று 1854ம் ஆண்டு கல்வித் துறை சார்ந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆங்கிலக் கல்வி இந்தியாவை வளர்த்தெடுக்கும் என்று பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகள் மட்டுமல்ல பல இந்தியர்களும்கூட நம்பினர். இந்தியாவின் பரந்து விரிந்த இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் திறன் ஆங்கிலக் கல்விமூலம் இந்தியர்களுக்குக் கைக்கூடும் என்பது அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி. கவர்னர் ஜெனரல் லார்ட் ஆம்ஹெர்ஸ்ட் என்பவருக்கு ராஜா ராம்மாகன் ராய் எழுதுகிறார். சமஸ்கிருதம் மற்றும் அரபி பெர்ஷியன் கல்விக்கு அரசு ஆதரவு அளித்தால் அது ’இந்தியாவை இருளில்தான் வைத்திருக்கும்’.

கார்ல் மார்க்ஸ் காலனியத்தை மனிதச் சாரத்தைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவமாகக் கண்டார். பணத்துக்கும் பண்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முதலாளித்துவம் மனிதர்களையும் ஒரு பண்டமாகவே பார்க்கிறது. காலனியம் மனிதர்களைச் சுரண்டுவதோடு நின்றுவிடாமல் மனிதப் பண்புகளையும் அழித்துவிடுகிறது. இவ்வாறு செய்யும்போது அது காலனியவாதிகளையும் சேர்த்தே தரம் தாழ்த்துகிறது.   Discourse on Colonialism என்னும் நூலில் Aimé Césaire  இதனை எளிமையாக்கித் தருகிறார். ‘காலனியாதிக்கம் என்பது அனைத்தையும் பண்டமாக்கும் முறை’.

காலனியத்தின் மிக முக்கியமான அதே சமயம் மிக விநோதமாகத் தோற்றமளிக்கக்கூடிய சில பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். காலனியம் சில சமயம் காலனி நாட்டுக்கு சில நன்மைகளை அல்லது அவ்வாறு தோற்றமளிக்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறது. காலனி நாட்டில் உள்ள உயர் வர்க்கத்தினருக்கு எதிராகச் சில சட்டத்திட்டங்களை அது ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைச் சட்டம், குத்தகை மற்றும் கந்து வட்டிக்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றை அது கொண்டுவருகிறது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. காலனி நாட்டில் நிலவும் சில பிற்போக்குக் கூறுகளுக்கு எதிராகச் சில சீர்திருத்தங்களை முன்மொழிந்து செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறது. இந்த முரண்பாட்டை பிபன் சந்திரா ஆராய்கிறார். தான் அடிமைப்படுத்த விரும்பும் ஒரு நாட்டில் உள்ள சில முறைகேடுகளைக் களையவேண்டும் என்று ஏன் ஒரு காலனி நாடு பிரயத்தனப்படுகிறது? இந்தியாவில் உள்ள வளங்களைச் சுரண்டுவதுதான் பிரிட்டிஷ் காலனியத்தின் நோக்கம். அது எதற்கான இங்குள்ள சிறுபான்மையினர்மீது அக்கறை கொள்கிறது? எதற்காக இங்குள்ள செல்வந்தர்களின் அதிகாரத்தைக் கலைக்கப் பார்க்கிறது? இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் அமைப்பு ஏதேனும் குரல் கொடுக்கலாம். ஒரு காலனிய அரசு ஏன் அதைச் செய்யவேண்டும்? இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து லண்டன் தொழிலதிபர்கள் வருத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? யூத, அரேபிய இன எதிர்ப்பாளர்கள் இந்தியச் சிறுபான்மையினர் நலன் குறித்து அக்கறையுடன் சிந்திக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? இன வேறுபாட்டைக் களையமுடியாத ஓர் வெள்ளை அரசு இந்தியா சாதி வாரியாகப் பிரிந்திருப்பதைப் பற்றி மட்டும் கவலைக்கொள்கிறது என்று எடுத்துக்கொள்ளமுடியுமா?

பிபன் சந்திரா இந்த விசித்திரத்தை விளக்குகிறார். ‘சில குறிப்பிட்ட காலத்துக்கு, சில குறிப்பிட்ட நிலைமைகளில் காலனிய அரசு நிலப்பிரபுக்கள் மற்றும் குத்தகை விவசாயிகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், உயர் சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோரை எதிரெதிராக நிறுத்தவு இது வழிவகுக்கின்றது. அனைத்து வகையான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தவும் இது வழிவகுக்கின்றது.’

இதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியை இங்குள்ள செல்வந்தர்களும் நிலப்பிரபுக்களும்கூட எதிர்க்கத் தொடங்கினர். அதாவது காலனி அரசின் ஆளும் வர்க்கத்துக்கும் காலனி நாட்டின் ஆளும் வர்க்கத்துக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. பிபன் சந்திரா எழுதுகிறார். ‘போலந்து அல்லது எகிப்தைப் போல, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு பெரும் நிலப்பிரபுக்கள்கூட தலைமை தாங்கமுடியும்.’ இந்தப் போராட்டத்தை மேலும் நுணுக்கமாக ஆராயும் பிபின் சந்திரா ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கிறார். ஒடுக்க வந்த ஆளும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் அல்லது போட்டி தேசியவாதம் என்னும் கருத்தாக்கத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் வர்க்கத்தவருக்கு இடையில் அதிகாரத்துக்காக நடக்கும் போராட்டத்தின் விளைவே தேசியவாதம் எனும் கோட்பாடு.’
train-e1366715162410

காலனிய அரசு என்பது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ அரசு என்பதையும் பிபன் சந்திரா நிறுவுகிறார். ‘ஒரு காலனிய அரசு முதலாளித்துவச் சட்டங்களையும், சட்ட அமைப்புகளையும், முதலாளித்துவச் சொத்துறவுகளையும், சட்டத்தின் ஆட்சியையும், அதிகார வர்க்க நிர்வாகத்தையும் பல்வேறு கட்டங்களில் புகுத்துகின்றது. ஆதலால் காலனியாதிக்க முதலாளித்துவ நாட்டுக்கு ஏற்ப அது எதேச்சதிகார அரசாகவோ அல்லது ஆப்பிரிக்காவிலுள்ள பல காலனிகளைப்போல் பாசிச அரசாகவோ அல்லது இந்தியா போல் அரை எதேச்சதிகார மற்றும் அரை ஜனநாயக அரசாகவோ இருக்கலாம். அது எப்போதும் முழுமையான ஜனநாயக அரசாக இருக்கமுடியாது.’

ஒரு காலனி அரசு இப்படித்தான் தனது காலனி நாட்டிடம் நடந்துகொள்ளும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. காலனி நாட்டின் பண்பு, கலாசாரம், வரலாறு, பொருளாதார முறை ஆகியவற்றின் அடிப்படையில் காலனி அரசு தன் ஆட்சியையும் நிர்வாக முறையையும் வடிவமைத்துக்கொள்கிறது. வன்முறை அவசியம் என்றால் அதனைப் பிரயோகிக்கத் தயங்குவதில்லை. காலனி சமூகத்தில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று ஒரு காலனி அரசு கருதினால் அதனை மேற்கொள்ளவும் அது தயங்குவதில்லை.

தொடக்கத்திலிருந்தே காலனியம் உள் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கட்டமைப்பாகவே திகழ்ந்தது. இந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து புரிந்துகொள்வதன்மூலமே காலனியத்தையும் அதன் பல்வேறு கட்டங்களையும் புரிந்துகொள்ளமுடியும். 1840கள் மற்றும் 1850களில் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாடுகள் யதார்த்த வாழ்வில் தோன்றியபோது கார்ல் மார்க்ஸ் அறிவியல் ரீதியாக முதலாளித்துவத்தை ஆராயத் தொடங்கினார் என்கிறார் பிபன் சந்திரா.  இந்தியாவிலும் அத்தகைய உள் முரண்பாடுகளை காலனியம் சந்தித்தது. அவற்றில் சிலவற்றை பிபன் சந்திரா பட்டியலிடுகிறார்.

1) வளமும் சுரண்டலும்

வளங்களைச் சுரண்டுவது என்பது காலனியாதிக்கத்தின் முக்கிய அம்சம். அதே சமயம் கிடைக்கும் அனைத்தையும் சுரண்டிவிட்டு ஓடிவிடுவது என்பது ஒரு காலனி அரசின் நோக்கமாக இருக்கமுடியாது. லாபம் ஈட்டவேண்டுமானால் உற்பத்தி பெருகவேண்டும். அப்போதுதான் உபரியும் பெருகும். எனவே பொன் முட்டை இடும் வாத்தை அறுப்பதற்கு பிரிட்டன் தயாராகயில்லை. எனவே தவிர்க்கவியலாதபடிக்கு காலனி நாட்டின் பொருளாதாரத்தை மறு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டது. பிரிட்டன் வங்கத்தைச் சுரண்டிய அதே சமயம், அதன் உற்பத்தியையும் பெருக்கியது இந்தக் காரணத்துக்காகத்தான்.

2) நலன்கள், ஆதாயங்கள்

கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் தங்கள் நலனைப் பெருக்கிக்கொள்வதில் தீராத ஆர்வம் கொண்டு ஆதாயங்களைத் தேடிக்கொண்டனர். இது அவர்களுடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியது. இந்த இரண்டு நலன்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது. சுரண்டலோடு சேர்ந்து உற்பத்திப் பெருக்கமும் நிகழும் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வகையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் இந்தியப் பொருளாதாரத்தின் நலன்களுக்காகவும்கூட காலனியத் தொழில் முயற்சிகள் உதவின. இந்தக் காரணங்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது.

3) நவீனமயமாக்கல்

காலனியம் அதன் அடுத்தகட்ட வளர்ச்சியைச் சந்தித்தபோது, இந்தியாவை நவீனமயமாக்கவேண்டிய தேவை எழுந்தது. மேலும் ஆற்றல் கொண்டதாக, விரிவாக்கப்பட்டதாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றவேண்டுமானால் அடிப்படை அம்சங்களை நவீனமயமாக்கவேண்டியது அவசியம் என்பதை பிரிட்டன் உணர்ந்திருந்தது. ‘இந்தியாவை வளர்ப்பது ஏகாதிபத்திய பிரிட்டனின் தேவையாக இருந்தது. நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்தத் தேவை எழுந்தது.’ இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைந்திருந்தால் குறைவான பலன்களே காலனிய அரசுக்குக் கிடைக்கும். தேவைப்படும் வரிகளை விவசாயிகள் மற்றும் இதர பிரிவினர்மீது விதிக்கமுடியாது. ஏற்கெனவே பொருளாதாரம் சுணக்கமடைந்திருக்கும் நிலையில் வரிச்சுமையையும் சுமத்தினால் அவர்கள் அதிருப்தி தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இது காலனிய அரசின் அடித்தளத்தேயே பாதிக்கும்.  அதற்காக வரி விதிக்காமல் இருக்கவும் முடியாது. கிடைக்கும் பலன்களே போதும் என்று நினைக்கவும் முடியாது. சிவில், ராணுவச் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் வருவாய் அவசியம். ஆக மொத்தகம் இந்தியாவைக் கட்டுப்படுத்தவேண்டும். அதே சமயம் இந்தியாவை வளர்க்கவும் வேண்டும்.

4) விவசாய வளர்ச்சி

தொழில்துறையைப்போலவே விவசாயத்தை வளர்க்கவேண்டிய தேவை பிரிட்டனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை பிபன் சந்திரா விவரிக்கிறார். ‘விவசாயிகளை பிரிட்டிஷ் பொருள்களை வாங்கக் கூடியவர்களாகவும், விவசாயத்தில் முதலீடு செய்பவர்களாகவும், தேவையான கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களாகவும் மற்றும் பொதுவாக விரிவாக்கப்பட்ட அளவில் விவசாயத்தை மேற்கொள்பவர்களாகவும் ஆக்குவதற்காக அவர்கள் சேமிப்பதற்கு உதவவேண்டும். பேரரசின் பாதுகாப்புக்கும், விரிவாக்கத்துக்கும், அதன் நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் விவசாயியை வரி கொடுக்கும்படிச் செய்யவேண்டும் என்கிற எதிர்த் தேவையும் இருந்தது. மற்றும் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான சமூக உபரியை விவசாயி வழங்கவேண்டியும் இருந்தது.’ இந்நிலை ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது. அதைச் சமாளிக்க விவசாயத்தை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? ‘முதலாளித்துவ அடிப்படையில் விவசாயத்தை வளர்ப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் விவசாயத்தில் ஜமீன்தாரி முறையைப் புகுத்துவதில் போய் முடிந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் எவ்வளவு அதிகமாக லேவாதேவிக்காரர்களைத் தவறாகப் பயன்படுத்தினார்களோ அவ்வளவு அதிகமாக அரசாங்கமும், விவசாயிகளும் வரி வாங்கவும் கொடுக்கவும் அவர்களையே சார்ந்திருக்கவேண்டியதாயிற்று. விவசாயிகள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கே அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.’

5) காலனியும் போராட்டமும்

மறு உற்பத்தி செய்யும் ஒரு காலனியாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரிட்டன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பிரிட்டனுக்கு எதிரான போராட்ட அலைகளை ஏற்படுத்தியதும்கூட ஒரு முரண்பாடுதான். தன்னுடைய ஆதாயத்துக்காகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பிரிட்டன் விரும்பியது. ஆனால் நேர் எதிரான விளைவுகளையே இது ஏற்படுத்தியது. இந்த முரண்பாடு இந்திய பிபன் சந்திரா குறிப்பிடுவதைப்போல் காலனியத்துக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடாக வளர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இது வழி வகுத்தது. ‘இந்தியாவைப் பயனுள்ள ஒரு காலனியாக ஆக்குவதற்குத் தேவையான ஒரு வரம்புக்குட்பட்ட மாறுதலும்கூட காலனியத்தை எதிர்க்கின்ற, அதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துகின்ற சமூக சக்திகள் தோன்றுவதற்கு இட்டுச் சென்றது.’

0

மேற்கொண்டு வாசிக்க :

1) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

3) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!