Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

நெருப்பும் நேரமும்

$
0
0

சங்க காலம் / தேடல் – 13

அறிவொளி

Large_bonfireஉலகின் ஒரு மூலையில் ஒரு காட்டில் மூங்கில்களின் கணுக்கள் மிகுதியான காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசித் தீப்பொறிகளை உருவாக்கின. அவை மூங்கிலின் காய்ந்த இலைகளை எளிதில் பற்றவைத்தன. பற்றிய தீ அணைய சில மணிநேரங்களாகின. அம்மூங்கில் காட்டில் சிக்கிக்கொண்ட விலங்குகள் தீக்கிரையாகின. அவற்றை எடுத்துச் சுவைத்த மனிதன் தீயால் வெந்த விலங்கின் தசைச் சுவையைத் தன் நாவில் ஏற்றிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அச்சுவை அவனுக்குத் தேவைப்பட்டது. காத்திருந்தான் மீண்டும் ஒரு காட்டுத்தீக்காக.

உடனடியாகவா அது நிகழ்ந்துவிடும்? காலம் சென்றன. பின்னர் அவன் சிந்தித்தான். காற்று, மூங்கில், உரசல், தீ என இந்நான்கின் இணைப்பையும் கூர்ந்து நோக்கி, அவற்றைச் சிறிய அளவில் கூட்டிணைப்புச் செய்து, தீப்பொறிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டான். தீயை உருவாக்கவும் அதனைப் பெருக்கவும் அவற்றை அணைக்கவும் மீண்டும் தீயை உருவாக்கவும் கைதேர்ந்தான். தீயின் ஒளியால் அறிவொளிபெற்றான்.

உலக அளவில் மனிதன் இவ்வாறுதான் தீயினை அறிந்தான். தொல்தமிழரும் அவ்வாறே தீயினைத் தம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினர்.

காட்டுத் தீயும் வீட்டுத் தீயும்

அகநானூற்றின் 39ஆவது பாடலில், நெடுந்தொலைவில், முற்றிய மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, தீப்பொறிகளை உருவாக்கின. அத்தீப்பொறிகள் மூங்கிற் சருகுகளைப் பற்றிக்கொண்டன. பின்னர் உலர்ந்த ஊகம் புற்களைப் பற்றி எரித்தன. பின்னர் காற்றடிக்கும் திசையெல்லாம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு காட்டையே தீக்கிரையாக்கின என்று இடம்பெற்றுள்ள ஒரு வர்ணனை காட்டுத் தீயை நம் மனக்கண்முன் கொண்டுவந்துள்ளது.

இக்காட்டுத் தீயின் பிறப்பினை அறிந்த தமிழர் அதனைத் தன் முயற்சியால் தன் வீட்டளவில் உருவாக்க மரக்கட்டையைக் கையாண்டனர். கல்லின் மீது அம் மரக்கட்டையைக் கடைந்து, (மத்துகொண்டு தயிர் கடைவதைப் போல) அதன் அருகில் எளிதில் தீப்பிடிக்கும் சருகுகளை வைத்துத் தீப்பொறியை உருவாக்கினர். இம் மரக்கட்டைக்குத் “தீக்கடைக்கோல்“ என்று பெயர். இதனை “ஞெலிகோல்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சான்றுகள் – ஐங்குறுநூறு 307, புறநானூறு 331.

மாடுமேய்க்கும் இடைச்சிறுவன் தன்கைகளால் முயன்று தீக்கடைக்கோலினால் தீ மூட்டிய தகவலைப் பெரும்பாணாற்றுப்படையின் 179வது அடி தெரிவித்துள்ளது.

இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அளிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினைப் புறநானூற்றின் 315ஆவது செய்யுளில், நெடுமான் அஞ்சியின் வீரத்துக்கு உவமையாகத் தீக்கடைக்கோலினைக் காட்டியுள்ள புலவரால், “இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அழிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினை அறியமுடிகின்றது.

உப்பு விற்கும் வணிகர்கள் தீக்கடைக்கோலினைப் பயன்படுத்திய செய்தியினை அகநானூற்றின் 169ஆவது செய்யுளில் காணமுடிகின்றது. புலி கொன்று தின்று ஒதுக்கிய யானையின் உடற்பகுதியின் ஒரு பகுதியைப் பாலை நிலத்தின் கள்வர்கள் எடுத்துச்சென்றனர். மீதமுள்ள பகுதியை உப்பு வணிகர்கள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயில் வதக்கி, நீரில் உலை கூட்டி ஊன்சோறு சமைத்தனர் என்று அச்செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

அகநானூற்றின் 274ஆவது செய்யுளில் செம்மறியாட்டுக் கூட்டத்தையும் பசுக்கூட்டத்தையும் மேய்க்கும் இடையன், தன் கைப்பொருள்களுள் ஒன்றாகத் தீக்கடைக்கோலினை வைத்திருந்ததாக ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

நற்றிணையின் 142ஆவது செய்யுளில் பால் விற்கும் இடையன் தன்னிடம் ஞெலிகோல் வைத்திருந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

இடையர்கள் தன் மேய்ச்சல் விலங்குகளைப் பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்கவைக்கும் இயல்பினர். அவர்கள் மாலைப்பொழுதில் இரவில் வெளியிடங்களில் தங்குவது என்பது இயல்பானதொன்று. அப்போது அவர்கள் தங்களுக்கான ஒளியினை உருவாக்க தீக்கடைக்கோலினைத் தன்னோடு ஒரு தீப்பெட்டியைப் போல (வத்திப்பெட்டி), இன்றைய டார்ச்சு லைட்டைப் போலக் கொண்டுசென்றுள்ளனர்.

அந்தத் தீக்கடைக்கோல் மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்காகவும் குளிரில் ஈரப்பதமாகிவிடாமல் இருப்பதற்காகவும்அதனைத் தேற்பையில் கலப்பை அதள் போட்டுச் சுருக்கிக்கொண்டனர் என்ற செய்தியினை நற்றிணையின் 142ஆவது செய்யுள் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

இடையர்களிடம் மூங்கிலால் உருவாக்கப்பட்ட புல்லாங்குழலும் இருந்தது என்பதனை நாம் நினைவில்கொள்ளவேண்டும். அப்புல்லாங்குழலில் இடப்பட்ட துளைகள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயினால் உருவாக்கப்பட்டவை என்ற செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 177 முதல் 179 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

காத்தலும் அழித்தலும்

புறநானூற்றின் 247ஆவது செய்யுளில், யானை கொண்டுவந்த உலர்ந்த மரத்தின் விறகை ஞெலிகோலின் உதவியால் கானவர் தீயிட்டுக் கொளுத்தினர் என்றும் அத்தீயொளியால் உறங்கிக்கொண்டிருந்த மான் கூட்டம் விழித்துக்கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. காடுகளில் பரணமைத்து இரவில் தங்கும் கானவர்கள் தம்மைக் காட்டு விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள இவ்வாறு பெருந்தீயினை உருவாக்கியுள்ளனர். தீப்பந்தத்தைப் பரணில் ஏற்றிவைத்தும் விலங்குகளை அச்சுறுத்தியுள்ளனர்.

அத் தீப்பந்தத்திற்கு (கொள்ளிக்கட்டை) “ஞெகிழி“ என்று பழந்தமிழர் பெயரிட்டிருந்தனர். “ஞெலி“ என்ற சொல், தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். “ஞெகிழ்“ என்ற சொல் தீயைக் குறித்தது. சான்று - கலித்தொகையின் 101ஆம் பாடல். ஞெலிகோலால் உண்டாக்கப்பட்ட தீயைக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்ளிக்கட்டைக்கு அல்லது தீப்பந்தத்துக்கு “ஞெகிலி“ என்று பெயரிட்டது மிகச் சரியே! இந்த “ஞெகிலி“ என்ற சொல் குறுந்தொகையின் 357ஆவது செய்யுளில் இடம்பெற்றுள்ளது. “விலங்குகள் நெருப்பை நெருங்காது“ என்பதனைத் தொல் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

தொல் தமிழர் நெருப்பினை ஆக்கத்துக்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படுத்தினர். தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட சிறுதீயினைக்கொண்டு உணவு சமைத்தனர். அத்தீயினைப் பெருக்கிப் பகைவரின் விளைநிலத்தையும் ஊரையும் அழித்தனர்இதற்குப் புறநானூற்றின் 57ஆவது செய்யுளும் பதிற்றுப்பத்தின் 71ஆவது செய்யுளும் சான்றாகவுள்ளன.

நெருப்பின்றி அமையாது உலகு

காட்டுத் தீயினைக் கண்டு அஞ்சிய தொல்தமிழன் அதனைத் தெய்வமாக வணங்கினான். பின்னர் அத்தெய்வத்திடம் ஒரு பூசாரியைப்போல நெருங்கினான். அத்தெய்வத்தை எழுப்பும் வித்தையைக் கண்டான். பின்னர் அவனே ஒரு தெய்வமாகிவிட்டான். ஆம்! தாமே நெருப்பினை உருவாக்க கண்டறிந்த அந்த ஆதிமனிதன் என்னளவில் ஒரு தெய்வம்தான். நீரின்றி மட்டுமல்ல, நெருப்பின்றியும் அமையாது உலகு.

நிகழ்காலம் அறிதல்

தொல் தமிழர்கள் நேரங்காலம் பாராமல் உழைத்தனர். சூரிய உதயத்தில் விழித்து, உழைக்கத் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் ஓய்வுகொண்டனர். உதயம் பகற்பொழுதினையும் அஸ்தமனம் மாலைப் பொழுதினையும் அவர்களுக்கு உணர்த்தியது. மற்ற பொழுதுகள் அவர்களால் கணிக்க முடியாத அளவுக்குப் போக்குக்காட்டின. இரவில் கேட்கவே வேண்டாம். நள்ளிரவில் நேரங்காலமா தெரியப்போகிறது?

பகற்பொழுதின் காலத்தினைச் சூரிய நகர்வைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர். தன் உடல் நிழலின் நீளத்தைத் தன் காலடியால் அளந்தும் கணித்தனர். இரவுப்பொழுதில் சந்திரனின் நகர்வைப் பார்த்தும் ஒருவகையில் காலத்தைக் கணித்தனர். சூரியன் வலதுபுறமாக இருக்குமாறு நின்றுகொண்டு கைவிரல்களில் சுட்டுவிரலை உயர்த்தி அதன் நிழல் மடக்கப்பட்ட எவ்விரலில் விழுகிறதோ அதனை வைத்துக் காலத்தைக் கணித்தனர். பீர்க்கு, நெருஞ்சி, இருள்நீக்கி முதலிய செடிகளில் மொக்கு மலர்வதை வைத்தும் காலத்தைக் கணித்தனர். மலர உள்ள மொக்கின் முனைப்பு நிலையைப் “போது“ என்பர். ஒரு நாளின் தொடக்கப் பொழுதினை (காலத்தினை) உணர்த்தியதால் அதற்குப் “போது“ என்று பெயரிட்டனர். இவற்றின் வழியாக ஒரு குத்துமதிப்பாகத்தான் காலத்தினை அவர்களால் கணிக்க முடிந்தது. எல்லாக் காலநிலைகளிலும் சரியான நேரத்தைக் கணக்கிடுவது என்பது தமிழருக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது.

காலக் கூறுகள்

தமிழர்கள் காலத்தினைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இருவகையாகப் பகுத்தனர். “பெரும்பொழுது“ என்பது, ஓர் ஆண்டின் ஆறு கூறுகள். அதாவது தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஒவ்வொன்றுக்கும் இணையான மாதங்களைச் சேர்ந்தது ஒரு பெரும்பொழுது என்றனர். அவை கார் (மழை) – ஆவணியும் புரட்டாசியும், கூதிர் (குளிர்) – ஐப்பசியும் கார்த்திகையும், முன்பனி – மார்கழியும் தையும், பின்பனி – மாசியும் பங்குனியும், இளவேனில் – சித்திரையும் வைகாசியும், முதுவேனில் – ஆணியும் ஆடியும் என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகக் கூதிரும் முன்பனிக்காலமும் கருதப்பட்டன. முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுதாகக் கார்காலம் மட்டும் கருதப்பட்டது. பாலை நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகப் பின்பனி, இளவேனில் முதுவேனில் ஆகியன கருதப்பட்டன. மருதத்திணைக்கும் நெய்தல் திணைக்கும் ஆறு பெரும்பொழுதுகளும் உரியவையாகக் கருதப்பட்டன.

சிறுபொழுது“ என்பது ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு கூறுகளாக்குவது. அதாவது ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணிநேரத்தை உள்ளடக்கியது. அவை நள்ளிரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை “வைகறை“, காலை 6 மணிமுதல் 10 மணிவரை “காலை“ (விடியல்), முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை “நண்பகல்“, பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை “எற்பாடு“, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை “மாலை“, இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை “யாமம்“ என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய சிறுபொழுதாக யாமமும் முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுதாக மாலையும் பாலை நிலத்துக்குரிய சிறுபொழுதாக நண்பகலும் கருதப்பட்டன. வைகறையும் எற்பாடும் ஐந்நிலத்துக்கும் பொதுவான சிறுபொழுதுகளாகக் கருதப்பட்டன.

தமிழர்கள் சிறுபொழுதுகளை மணிக்கணக்கில் பிரிக்காமல் நாழிகைக் கணக்கில் பிரித்தனர்.

நாழிகை“ என்பதுபழங்காலக் காலக்கணக்கீட்டின் ஓர் அலகு.  24 நிமிடங்கள் ஒரு நாழிகை. ஒரு மணிநேரம் என்பது இரண்டரை நாழிகைகள். பகல் என்பது 30 நாழிகைகள். இரவு என்பது 30 நாழிகைகள். ஒருநாள் என்பது 60 நாழிகைகள். அதாவது 24 மணிநேரம்.

ஒருநாளின் பகுதிகளைச் சிறுபொழுதுகளாகப் பிரித்திருந்தனர் என்றனர். சிறுபொழுதுகள் மொத்தம் ஆறு. அவை ஒவ்வொன்றும் 10 நாழிகைகளை உள்ளடக்கியிருந்தன. அதாவது, நான்குமணிநேரங்களை.

இந்த நாழிகையைக் கணக்கிட ஒரு கருவியினைக் கண்டறிந்தனர். வட்டில் ஒன்றில் நீர் நிரப்பி, ஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டு, எஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் விதத்தில் ஒரு கருவியினை உருவாக்கினர். அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கண்டறிய முடிந்தது. இக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயரிட்டனர். இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.

இக் கருவிகொண்டு நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர்கள் மன்னனைத் தொழுது, வாழ்த்தி கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே! உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இத்துணை என்று அறிவித்த செய்தியினை முல்லைப்பாட்டின் 55 முதல் 58 வரையிலான அடிகள் வெளிப்படுத்தியுள்ளன.

உலகம் அஞ்சுமாறு, மேகமூட்டத்துடன் பெருமழை பெய்தலின் நிலமும் வானும் ஒன்றாகப் பொருந்தினாற் போன்று தோன்றும் கார் காலத்தே, கதிரவனைக் கொண்டு காலமறிய இயலா நிலையில் குறுநீர்க் கன்னலைக் கொண்டு பொழுதறிவிக்கும் கணக்கரையே நம்பி மக்கள் இருந்த செய்தியினை அகநானூற்றின் 43ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளன.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!