கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக அமர்த்தியா சென்னைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஹாலில் (எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், கவிஞர் என்று தினம் ஒரு பிரமுகர் கலந்துகொண்டு உரையாடும் பெரிய அரங்கம் அது) முதல் நாள் அமர்த்தியா சென், நடிகர் ஷர்மிளா தாகூர் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். இருக்கையில் இடமில்லாததால் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அரங்கத்தின் ஓரங்களில் வரிசையாக இன்னொரு கூட்டம். முண்டியடித்து செல்ஃபோனில் படம் பிடிக்க மற்றொரு தனிக்கூட்டம். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
பங்களாதேஷை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசினார் அமர்த்தியா சென். அடிப்படை சுகாதார வசதிகளில் இந்தியாவைவிட பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சாலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளே செய்துதரப்படவில்லை. இடது, வலது பேதமின்றி அரசியல் கட்சிகள் மக்கள் நலனை உதாசீனம் செய்கின்றன. இந்தியாவில் இன்னமும் பெரும்பலானானோருக்குக் கழிப்பிட வசதியே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வருந்தினார். பங்களாதேஷ் இதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
அமர்த்தியா சென் இடதுசாரி அல்ல. அவர் உலகமயமாக்கலையும் சந்தைப் பொருளாதாரத்தையும் நிராகரிப்பவர் அல்லர். ஆனால் வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படவில்லை என்னும் ஆதங்கத்தை சுமந்து நிற்கும் ஒரு பொருளாதார நிபுணர். பசி குறித்தும் பஞ்சம் குறித்தும் ஆய்வு செய்தவர் என்னும் அடிப்படையில் இந்தியாவில் பசி இன்னமும் தீராத நோயாக இருப்பதையும் சந்தைப் பொருளாதாரம் பெரும்பாலான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பதையும் அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது அமர்த்தியா சென் இரு காரணங்களுக்காக விவாதத்தில் இருக்கிறார். ஒன்று, ஜகதிஷ் பகவதி விவகாரம். இதைப் பற்றி எளிமையான அறிமுகம் கிடைக்க இந்தக் கட்டுரையை வாசியுங்கள். இரண்டாவது, மோடி பற்றி அவர் உதிர்த்த கருத்து. மோடி பிரதமராவதை தான் விரும்பவில்லை என்று சொன்னதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா விருதைப் பறிக்கவேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து எழுந்துள்ள கண்டனத்துக்குரிய ஒரு குரல்.
சமீபத்தில் படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ஜோசப் ஸ்டிக்ளிட்டிஸ் (Joseph Stiglitz) அரசின் பெயில் அவுட் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த காரணத்தால் பராக் ஒபாமா அவரை ஒரு கட்டத்தில் கழற்றிவிட்டுவிட்டார்.
அமர்த்தியா சென்னைப் போலவே ஸ்டிக்ளிட்ஸும் நோபல் பரிசு பெற்றவர். சென்னைப் போலவே அவரும் இடதுசாரி அல்லர். மோடி பிடிக்கவில்லை என்று சொன்னால் அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவையும், முடிந்தால் நோபலையும் பறிக்கவேண்டும். ஒபாமா நிர்வாகத்தைக் குறை கூறினால் ஸ்டிக்ளிட்ஸ் விலகவேண்டும்.
தனக்குப் பிடித்த செய்திகளை, தனக்குப் பிடிக்கும் தொனியில் சொல்பவர்களை மட்டுமே அதிகாரம் விரும்புகிறது.
0