ஏற்கெனவே ஏழாம் உலகம் என்ற ஜெயமோகனின் நாவலை நான்கடவுள் என்ற பெயரில் கந்தரகோலமாக்கிய பாலா, இந்தமுறை எரியும் பனிக்காட்டை வெட்டிச் சீரழித்திருக்கிறார்.
ஏழாம் உலகம் குறைப்பிறவிகளான, முடமான, பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களையும் விவரிக்கும் நாவல். நாம் நாகரிகம் என்று நம்பக்கூடிய இருபதாயிரம் வருட வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிக் கதறியபடியே ஓடும் நாவல். மானுடம் என்ற சொல்லின் மகத்தான நிழல் (நன்றி: சு.வேணுகோபால்). ஆனால், அந்த நாவலை அகோரிகளுடன் பிணைத்து ஒரு கதாநாயக சாகசத்தை படு செயற்கையாக திணித்து வீணடித்திருந்தார் பாலா. இப்போது டேனியல் எழுதிய ரெட் டீ.
பாலா முழுவதுமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் டேனியலின் நாவல்தான் பரதேசியின் அஸ்திவாரம். நாவல், பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டிராத தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டது. அந்த வாழ்க்கை பலருக்கும் தெரியாது என்பதால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் நாவலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நாவலாசிரியர் கலைபீடத்தில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து சில காரியங்கள் செய்திருப்பார். கதாபாத்திரங்கள் தமக்குள் மட்டும் பேசிக்கொள்ளாமல் வாசகர்களைப் பார்த்தபடி நின்று பேசுவது போன்ற குறைகள் நாவலின் கலையம்சத்தை சிறிது பாதிக்கிறது என்றாலும் அந்த வாழ்க்கையின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால், நாவலின் தரத்தை அது அவ்வளவாகப் பாதிக்கவில்லை.
அப்படியாக, டேனியல் தேயிலைத் தோட்ட வாழ்க்கையின் சாற்றை வடித்து நாவல் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்திருக்க, பாலாவோ, சாறைக் கொட்டிவிட்டு சக்கையை நம் முன் கொண்டுவந்து குவித்திருக்கிறார். தங்கச் சுரங்கத்துக்குச் சென்றவர் மண்கட்டிகளை எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் காட்டியிருக்கிறார். இந்த மண்கட்டிகளிலும் சில தங்கத் துகள்கள் மின்னுவதைவைத்து தமிழ் திரைச் சமூகம் புளகாங்கிதப்பட்டுக் கொள்கிறது. இதில் எளிய பார்வையாளனின் பிரமிப்பை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், இலக்கிய பரிச்சயமும் உலக சினிமா பரிச்சயமும் கொண்ட கூட்டமும், எப்போது வேண்டுமானாலும் மன்னர் கூப்பிட்டு அனுப்பலாம் என்ற நப்பாசையில் காத்திருக்கும் அந்தப்புர மகளிரைப்போல், தங்களின் தயார்நிலையை அறிவிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும்போதுதான் கோபம் வருகிறது.
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன் நாவலை நான் முழுவதுமாகப் படித்திருக்கவில்லை. எனவே, படம் குறித்த என் மனப்பதிவு படத்தின் அளவிலேயே உருவானதுதான். நாவலைப் படித்த பிறகு அந்த விமர்சனம் மேலும் வலுப்பட்டிருக்கிறது.
நாவல் வேறு… சினிமா வேறு என்பது உண்மைதான். ஆனால், நாவலை சினிமாவாக ஆக்கும்போது எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்… எதையெல்லாம் புதிதாகச் சேர்க்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதுதான் உங்கள் செயலை நியாயப்படுத்த முடியும். வெறுமனே திரைப்படத்தில் செய்திருப்பவை எல்லாம் காட்சி ஊடகத்துக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்லிக்கொள்வது சரியல்ல.
நில உடமையாளர்களான நாயக்கர்களாலும் தேவர்களாலும் ஒடுக்கப்படும் தலித்கள்தான் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். ஹோட்டல்களின் முன்னால் இருக்கும் இருக்கையில் தலித்களுக்கு உட்கார அனுமதி கிடையாது என்பதில் ஆரம்பித்து அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து யதார்த்த அம்சங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.
நாவலில் கங்காணி ஒவ்வொரு ஊரிலும் ஆள் பிடிக்கும் முறை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும்தான் அவன் அழைத்துச் செல்வான். அதுதான் சாத்தியம். ஏனென்றால், அப்போதுதான் அடுத்த தடவை அந்த ஊரில் வந்து வேறு யாராவது இரண்டு அப்பாவிக் குடும்பத்தை அழைத்துச் செல்லமுடியும். ஒரே கிராமத்தில் இருந்தே ஐம்பது அறுபது பேரை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தினால், அடுத்தமுறை அந்த ஊர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் போய்விடும்.
அதோடு, ஒவ்வொருகிராமத்தில் இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும் தனிமைப்படுத்தி அழைத்துச் செல்வதில் இன்னொரு தந்திரமும் அடங்கியிருக்கிறது. அப்படி தனியாக இருப்பவர்கள்தான் அடக்குமுறையை எதிர்த்துப் போராடப் பயப்படுவார்கள். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் அழைத்துச் சென்றால் அவர்களிடையே வலுவான ஒற்றுமை இருக்கும். எந்தவொரு அடக்குமுறையையும் அவர்கள் எளிதில் எதிர்த்துவிடுவார்கள். எனவே, கங்காணிகள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஓரிரு குடும்பங்களை மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.
பாலாவோ தன் படத்தில் ஒரே கிராமத்தில் இருந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் காட்டியிருக்கிறார். அதாவது, நாவலில் இருந்து இவர் வித்தியாசமாகச் சிந்திக்கிறாராம். அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் பலவீனமான நாவலை எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அது உங்கள் திறமைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றால் பலமான நாவலை எடுத்துக் கொண்டுவிட்டு பேசாமல் அதன் காலடியில் உங்களை ஒப்புக்கொடுத்துவிடவேண்டும், நடிகர்கள் இயக்குநர்களிடம் ஒப்புக்கொடுக்கிறார்களே அதுபோல். நான் ஓர் இயக்குநன். என் பங்களிப்பு தேவை என்ற பெயரில் ஏதேனும் செய்ய முற்பட்டால் இப்படித்தான் ஆகும். கல்லைச் சிலையாக்குபவனுக்குத்தான் சிற்பி என்று பெயர். சிலையைப் படிக்கல்லாகச் சிதைப்பவனுக்கு வேறு பெயர்.
அடுத்ததாக, நாவலில் நாயகனும் நாயகியும் தங்கள் சொந்த ஊரை விட்டுச் செல்வதற்கான காரணம் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த ஊரின் வறுமை வெகு நுட்பமாக, படு யதார்த்தமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். நாயகியின் கொலுசை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து நாலைந்து நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள். அதுவும் கேப்பை மாவு கஞ்சியும் சுட்ட மிளகாய்களும்தான் உணவு. அதுகூடக் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். உள்ளூரில் வேலை எதுவும் இல்லாமல் போய்விட்டிருக்கவே, பக்கத்து டவுனுக்குப் போய் வேலை தேடுவான் நாயகன் கருப்பன்.
இன்னிக்கு வேலை இல்லை நாளைக்கு வா என்று ஒரு ஹோட்டலில் சொல்வார்கள். உங்க அடிமை சாமி… அடிமையோட பொஞ்சாதி, அம்மா யாருமே நேத்திலிருந்து எதுவுமே சாப்பிடலை. நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்னிக்கே செய்யறேன் என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுவார் நாயகன் (ஆங்கில மூலத்தில் அடிமை – ஸ்லேவ் என்ற நேரடியான வார்த்தையை டேனியல் எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை. முற்போக்கு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது). இப்படியான நிலையில்தான் கங்காணியின் கழுகுப் பார்வையில் சிக்குவார். திரைப்படத்திலோ இது மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, வேறு ஊருக்குச் செல்லும் நாயகன் நேராக அங்கிருக்கும் ஒரு ஹோட்டலின் முன்னால் போட்டிருக்கும் பெஞ்சில் போய் ஏறி உட்கார்ந்துவிடுகிறார். உடனே அந்த ஹோட்டல்காரர் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறார். அதில் தலித்கள் உட்காரக்கூடாது என்பது நாயகனுக்குத் தெரியாதாம். அதாவது, அவருடைய ஊரில் அப்படியான எந்த வழக்கமும் கிடையாதாம்.
அதன் பிறகும்கூட கங்காணி சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே புறப்பட்டுவிடமாட்டான் நாவலின் நாயகன். மனைவி, அம்மா, மாமனார் என அவனுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராகக் கேட்பான். எல்லாருக்குமே பயமாகத்தான் இருக்கும். கடைசியில் ஒரு பல்லி கூரையில் இருந்து கத்தும். அதை நல்ல சகுனமாகக் கருதி புறப்பட ஆயத்தமாவார்கள். நாவலை முழுவதும் படித்து முடித்த பிறகு எங்கு பல்லி சத்தம் கேட்டாலும் நமக்கு ஒருமுறை தூக்கிவாரிப்போடும். அந்த அளவுக்கு அது எளிய மக்களின் அப்பாவித்தனத்தின் மீது வலி மிகுந்த இரக்கத்தை உருவாக்கும்.
நாவலில் நாயகன் தன் அம்மாவை விட்டு விட்டுச் செல்லத் தீர்மானிப்பான். முப்பது நாற்பது வருடங்கள் கூடவே இருந்த தாயை விட்டுப் பிரியும் சோகம் ஒருபுறம்… சுற்றிச் சுற்றி வாட்டும் நிகழ்காலம் ஒரு புறம். நிச்சயமில்லாத எதிர்காலம் இன்னொருபுறம் என அவனுடைய வேதனையானது நாவலில் அணையில் சேகரமாகும் நீர்த்துளி போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டே வரும். இவற்றில் எதுவுமே படத்தில் இடம்பெறவில்லை.
முக்கியமாகப் படத்தில் காட்டப்படும் பூர்விக கிராமம் அப்படி ஒன்றும் பஞ்சம் பிழைக்க வேறு இடத்துக்குத் துரத்தும் ஒன்றாக இல்லை. ஊரில் திருமணம் தடபுடலாக நடக்கிறது. கூடை கூடையாகப் பணியாரம், அண்டா அண்டாவாக நெல்லுச் சோறு. இந்த நேரத்தில் ஊர்ப் பெரியவர் ஒருவர் (முழுநேரக் கவிஞர் அண்ணாச்சி விக்கிரமாதித்யன்) இறந்துவிடுகிறார். அந்தச் செய்தி தெரியவந்தால் என்ன செய்வார்கள். எந்தக் கிராமத்திலாவது திருமணத்தை நிறுத்தி வடித்த சோற்றையெல்லாம் வீணாக்குவார்களா? ஒருவேளை திருமணத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பாக இறந்திருந்தால் வேண்டுமென்றால் திருமண நாளைத் தள்ளிவைக்கலாம். திருமணத்தின் அதே நாளில் தாலி கட்டுவதற்கு சிறிது முன்பாக ஒருவர் இறந்தால் யார்தான் என்னதான் செய்யமுடியும்? இது கூட நமக்குப் பெரிய பிரச்னையில்லை. ஒரு கிராமத்தின் வறுமையைக் காட்ட இந்தக் காட்சியா கிடைத்தது.
நாவலில் பூர்விக கிராமத்தில் இருந்து தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் மேற்கொள்ளும் பயணம் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். போகும் வழியில் ஒவ்வொரு ஊரில் தங்கிக் கொள்வது, உணவுக்கு செய்திருக்கும் ஏற்பாடுகள், வழியில் தென்படும் தெளிந்த நீரோடையில் குளிப்பது இவை எல்லாவற்றையும்விட ரயிலை முதல் முறையாகப் பார்க்கும் கிராமத்தினரின் அனுபவங்கள் நாவலில் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். பெரும் சத்தத்துடன் புகையைக் கக்கியபடி நுழையும் ரயிலைப் பார்த்து மிரண்டு அதில் ஏற பயப்படும் பெண்களில் ஆரம்பித்து ஆரம்பகட்ட உற்சாகம் வடிந்து ரயில் பெட்டியின் வெம்மை தகிக்க ஆரம்பிப்பதுவரை ஒவ்வொன்றையும் துல்லியமாக விவரித்திருப்பார் நாவலாசிரியர்.
பாலா அந்தப் பயணத்தை முற்றாக வெட்டி எறிந்துவிட்டிருக்கிறார். வேறொருவர் தயாரிப்பாளராகக் கிடைத்திருந்தால் அந்தக் கால ரயில், அந்தக் கால தண்டவாளம், அந்தக் கால ரயில்வே ஸ்டேஷன், அந்தக் கால நட்டு போல்டுகள் என மஞ்சக் குளித்திருக்கலாம். சொந்தக் காசாயிற்றே… எனவே, நாவலின் ஆதார ஸ்ருதி பிசகுகிறதே என்ற கவலை சிறிதும் இல்லாமல் ரயில் போர்ஷனை படத்தில் இடம்பெறச் செய்யாமல் விட்டிருக்கிறார். அப்படியாக சாதிப் பாசத்தால் சில சமரசங்கள்… பணப்பாசத்தால் மேலும் சில சமரசங்கள் (என்ன செய்ய… இதையெல்லாம் மீறித்தானே யதார்த்தக் கலையைப் படைக்க வேண்டியிருக்கிறது!)
நாவலில் மூன்று நாட்கள் பஸ்ஸிலும் ரயிலிலும் பயணம் செய்து அடைந்த தேயிலை எஸ்டேட்டை திரைப்படத்தில் 48 நாட்கள் நடந்தே சென்றடைகிறார்கள். இந்தப் பயணத்தை ஆப்ரிக்காவில் இருந்து கறுப்பர்களை வெள்ளையர்கள் பிடித்து இழுத்துச் சென்றார்களே அதற்கு இணையான ஒன்றாகச் சித்திரிக்கிறார் இயக்குநர். போகும்வழியில் நூற்றுக்கணக்கில் இறந்தது, இறந்தவர்களைக் கடலிலும் காடுகளிலும் அப்படியே போட்டுவிட்டுப் போனது என உலகின் மிகப் பெரிய சோகத்தை சற்றே தொலைவில் உள்ள எஸ்டேட்டுக்குப் போகும் வழியில் நடப்பதாகக் காட்டுகிறார். அதிலும் ஒரே கிராமத்தில் இருந்து செல்பவர்கள், வழியில் தங்கள் கிராமத்து நபர் ஒருவர் உடல் தளர்ந்து விழுந்துவிடவே அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள். இத்தனைக்கும் தேயிலைத் தோட்டச் சிறைக்குள் அவர்கள் போய் மாட்டிக்கொள்ளவே இல்லை. இந்த நிமிடத்தில்கூட கங்காணியின் உண்மை சொரூபம் தெரிந்து பூர்விக கிராமத்துக்கே அவர்கள் திரும்பியிருக்க முடியும். நாவலில் தேயிலைத் தோட்டத்துக்குப் போய்ச் சேரும் வரை கங்காணியின் முழு கொடூர முகம் தெரியவராது.
இரண்டாம் பாகத்தின் ஆரம்ப காட்சிகளில் பெருமளவுக்கு நாவலை ஆரத் தழுவி இருப்பதால் படத்தின் அருமையான நிமிடங்களாக அவை தேறிவருகின்றன. இருந்தும் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் ஒருக்கும் ஒரு இளம் பெண்ணுடன் பருவ வயதினனான நாயகனை ஒரே வீட்டில் தங்க வைப்பது போன்ற பாலாவின் அசட்டுத்தனங்கள் அந்தப் பகுதியிலும் ஆங்காங்கே இடம்பெறவே செய்கின்றன.
நாவலில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஊர் திரும்ப வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல் நலம் குன்றியதாலும் செட்டியாரால் கூடுதல் கடன் பொய்யாக எழுதப்பட்டதாலும் எதிர்பார்த்த பணம் கையில் சேர்ந்திருக்காது. எனவே, எஸ்டேட்டிலேயே மேலும் ஓரிரு வருடங்கள் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்று தீர்மானிப்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது, எப்படியாவது தப்பித்துப் போய்விடுங்கள்… இங்கே தங்காதீர்கள் என்று நம் மனது கிடந்து துடிக்கும். ஆனால், அவர்களோ கூண்டைத் திறந்துவிட்டாலும் வெளியில் வந்து சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கூண்டுக்குள் மீண்டும் நுழைந்து கதவை மூடிக்கொள்ளும் அப்பாவிக் கிளிகளைப் போல் அங்கேயே தங்க முடிவெடுத்துவிடுவார்கள். படத்தில் அப்படியான காட்சி இடம்பெறவில்லை.
அதோடு, ஆங்கிலேய துரைகள் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும்போதும் கூலிப் பெண்களிடம் லேசாக சில்மிஷம் செய்வது உண்டு என்றாலும் படுக்கைக்கு அழைப்பது என்பது மிகவும் நுட்பமாகவே செய்யப்படும். ஏற்கெனவே துரையின் வழிக்கு வந்திருக்கும் பெண் மூலம் புதிய பெண்ணுக்கு வலைவிரிக்கப்படும். துரையின் வீட்டைப் பெருக்கி சுத்த்ம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று புதியவளை அழைத்துச் செல்வாள். அங்கு போன பிறகு, இரவு உணவையும் சமைத்துவைத்துவிட்டு வா, நான் போகிறேன் என்று சொல்வாள். இன்னொரு ஆணுக்கு சமைத்துப் போடு என்ற ஒற்றை வாக்கியம் ஆழமான பொருள் பொதிந்தது. நுட்பமான வெளிப்பாடு, நாசூக்கு என்பதெல்லாம் எளிய மக்களுக்கு அந்நியமான ஒன்றல்ல. அவர்களுடைய வாழ்க்கையிலும் அது ஏராளம் உண்டு. இப்படியானவையெல்லாம் எளிய பார்வையாளருக்குப் புரியாது என்று சொல்லும் ஒரு படைப்பாளியின் ரசனை உணர்வைத்தான் நாம் இங்கு சந்தேகிக்க வேண்டும். இவை எல்லாம் நாவலில் அற்புதமாக இடம்பெற்றிருக்க படமோ தட்டையாகத் திரையில் விரிகிறது.
வெள்ளைக்கார துரைமார் கூலிப் பெண்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோலவே, துரையம்மாக்களும் வாட்ட சாட்டமான சிவந்த நிற கூலித் தொழிலாளர்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கணவன் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கும்போது கணவனின் தம்பியை உடலுறவுக்கு அழைக்கிறாள் ஒருத்தி. தன் மனைவியை துரைக்கு விருந்தாக்கி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் இடைநிலைப் பணியாளர்கள் என வாழ்வின் பல்வேறு பக்கங்கள் நாவலில் போகிற போக்கில் விரிகின்றன.
தங்கள் குதிரைகளுக்கான லாயத்துக்கு சிமெண்ட் தரை போட்டு அருமையாகக் கட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்களை படு மோசமான சூழலில் வாழ வைக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கு முன்பாக இந்தியர்கள் யாரும் செருப்பு போடக்கூடாது, குடை பிடிக்கக்கூடாது என்ற கெடுபிடிகள். பணி நேரத்தில் இழைக்கப்படும் கொடுமைகள்… உடல் நலம் மோசமாக இருந்தாலும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத அவலம், பாதி குணமான உடம்புடன் பணி செய்ய வேண்டிய கொடூரம் என நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வேதனைகளை முகத்தில் அறைந்தாற்போல் சித்திரித்திருக்கிறது.
மழைக்காலத்தில் வெள்ளம் வருகிறது. ஆற்றுக்குக் கரையோரமாக இருக்கும் லைன் வீடுகளில் இருப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவர்கள் எல்லாம் கரையில் தவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவனும் சிறுமியும் அடித்துச் செல்லப்படுவதும் அவருடைய அம்மா கதறி அழுவதும் மற்றவர் அவரைத் தடுத்துப் பிடிப்பதும் நாவலில் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். படத்தில் இவை எதுவுமே கிடையாது.
இவையெல்லாவற்றையும்விட படத்தை ஒரேயடியாகக் காலி செய்வது தலித் கிறிஸ்தவ டாக்டரும் (டாக்டர் பரிசுத்தம்) அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாபாத்திரமும்தான். கிறிஸ்தவ மத மாற்றச் செயல்பாடுகள் என்பது இரண்டு வடிவங்களைக் கொண்டது. ஒரு சில பாதிரியார்கள் ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையுடன் கைகளில் சிலுவையைச் சுமந்தபடி உலகெங்கும் பயணித்தார்கள். சக மனிதர்பால் அவர்கள் கொண்ட அன்பே அவர்களை அப்படிச் செயல்பட வைத்தது. அவர்களுடைய சேவை என்பது புல் நுனியில் சேகரமாகும் பனித்துளியைப் போன்றது. ஆனால், கிறிஸ்தவ நீரோடை என்பது அத்தகைய பனித்துளிகளால் மட்டுமே நிரம்பியது அல்ல. அது, பல்வேறு அரசியல், பொருளாதாரத் தந்திரங்களின் கழிவுநீரும் கலந்தது. இந்த இரண்டு அம்சங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே சித்திரிப்பது பெரும் தவறு. அந்த ஏதோ ஒன்றையும் படு கேவலமாகச் சித்திரிப்பது மிகப் பெரிய தவறு. இந்தப் படத்தில் அதைத்தான் பாலா செய்திருக்கிறார்.
மலேரியா நோயினால் தோட்டத் தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக இறந்து விழுந்துகொண்டிருக்க, அந்த மருத்துவ தம்பதியோ மதம் மாற்றுவதற்குக் கிடைத்த நல் வாய்ப்பாக அதைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்தக் காட்சிகளின் செயற்கைத்தன்மை படத்தின் ஒட்டுமொத்த உணர்வை கீழிறக்கிவிடுகின்றன.
அதோடு, நிஜத்தில் இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு மூல காரணமாக நாவலை எழுதிய டேனியலின் சாயலில் அந்தக் கேவலமான மருத்துவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1925-ல் மக்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாவலில் விவரித்திருந்த டேனியல் உண்மையில் 1940-ல்தான் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருப்பார். எனவே, படத்தில் 1940-ல் வரும் மருத்துவராகக் காட்டப்பட்டிருப்பவர் டேனியலின் சாயலில் படைக்கப்பட்டவர்தான் என்று நம்பமுகாந்தரமிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாவலில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களில் சிலவற்றை அப்படியே திரைப்பட மருத்துவரும் பேசுகிறார். இது கிட்டத்தட்ட டேனியல்தான் அந்த மருத்துவர் என்று உறுதிப்படுத்தும்விதமாகவே இது இடம்பெற்றிருகிறது. அதிலும் அந்த டாக்டர் பரிசுத்தத்துக்கு அம்பேத்கர் போன்ற உடை அணிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
உண்மையில் டேனியல் இந்த உருக்கமான நாவலை எழுதியதோடு நிற்காமல், தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றை அமைத்து நினைத்தே பார்த்திராத பல உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் சாயலில் படைக்கப்பட்ட கதாபாத்திரம் மத மாற்றத்துக்காக நாக்கைத் தொங்கப் போட்டபடி அலைந்ததாகக் காட்டியிருப்பது மிகவும் தவறு. ஒரு கலைஞனாக இருந்திருந்தால் பாலா நிச்சயமாக இப்படிச் செய்திருக்கமாட்டார். அதனால்தான், நான் கடவுளிலும் பிதாமகனிலும் வைத்திருந்த கதாநாயக சாகச க்ளைமாக்ஸை இந்தப் படத்தில் வைக்காமல் இருந்ததற்காக பாலாவை பாராட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது.
இந்த இடத்தில் பாலாவுக்கு என்ன சிக்கல் வந்திருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நாவலில் ஒரு மருத்துவர் கதாபாத்திரம் வருகிறது. அவர் தோட்டத்தொழிலாளிகளின் வேதனையைப் பார்த்து மனம் வருந்தி சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறார். நாவலில் வரும் டாக்டர் பெரும் புரட்சியாளராகவோ பெரும் மீட்பராகவோ எல்லாம் சித்திரிக்கப்படவில்லை. நிஜத்தில் டேனியல் அப்படியான செயலைச் செய்திருக்கிறார் என்றாலும் நாவலில் வரும் டாக்டர் சில அடிப்படை சீர்திருத்தங்களை மட்டுமே செய்கிறார். ஒருவகையில் அந்த மருத்துவர் வந்த சிறிது காலத்துக்குள்ளேயே நாவல் முடிவடைந்துவிடுகிறது. எனவே, அவர் தான் செய்த சாதனைகளை நாவலில் விரிவாக இடம்பெறவைக்கவில்லை.
படத்தைப் பொறுத்தவரையில் பாலா நாவலுக்கு இணையான வேறொரு அழுத்தமான க்ளைமாக்ஸை எழுதிவைத்திருக்கிறார். கதாநாயகன் தோட்டச் சிறையில் இருந்து தப்பிக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க பூர்விக கிராமத்தில் இருக்கும் நாயகி அவனைத் தேடி அங்கு வந்து சேர்வதாக கதையை முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பாலா செய்த உருப்படியான ஒரே விஷயம் அதுமட்டுமே. நரகக் குழியில் வந்து விழுந்துவிட்டாயே அங்கம்மா என்ற நாயகனின் அலறல் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிக்கும் காட்சியே. இந்த க்ளைமாக்ஸ் இத்தனை வலுவாக இருக்கவேண்டுமென்றால், மருத்துவ கதாபாத்திரம் எந்த நன்மையையும் செய்ததாகக் காட்டமுடியாது. அப்படிக் காட்டினால், முழுவதும் இருள் நிரம்பிய வாழ்க்கை என்ற சித்திரம் இடம்பெற முடியாமல் போய்விடும். அதே நேரத்தில் அந்த மருத்துவரைக் கொடூரமானவராகவும் காட்ட முடியாது. நிஜத்தில் அவர் செய்த சாதனைகளே அதற்குச் சாட்சி. நல்லவராகவும் காட்ட முடியாது… கெட்டவராகவும் காட்டமுடியாது… இதைவிடச் சிறந்த க்ளைமாக்ஸையும் யோசிக்க முடியாது என்ற இக்கட்டில் சிக்கிய பாலா அந்த மருத்துவர் கதாபாத்திரத்தை கோமாளியாகச் சித்திரித்திருக்கிறார். இது அவருடைய கலைத் திறமையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
உண்மையில் இந்தப் பிரச்னையை அவர் எப்படித் தீர்த்திருக்கவேண்டும்? அந்த நல்ல மருத்துவரை கங்காணியும் துரைகளும் சேர்ந்து வேறு இடத்துக்குத் துரத்திவிடுகிறார்கள் என்று காட்சி அமைத்திருக்கலாம். நாவலிலேயே அதற்கான குறிப்புகள் இருக்கின்றன. வெள்ளைத் துரைகளுக்கு நல்ல மருத்துவரை வைத்து தொழிலாளர்களுக்குச் சிகிச்சை தர ஏற்பாடு செய்வதில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. கங்காணியும் வேறு சில கதாபாத்திரங்களும் புதிய மருத்துவரின் வருகையால் அதிருப்தி அடைந்து அவர் மீது பொய்க் குற்றம் ஏதாவது சுமத்தி அங்கிருந்து விரட்டிவிட திட்டமிடுகிறார்கள். இதையெல்லாம் படத்தில் வலுவாகக் கொண்டுவந்து அந்த மருத்துவரை இடமாற்றம் செய்திருக்கலாம். அப்படியாக, மெள்ளக் கறுத்துக் கொண்டு வரும் மேகக்கூட்டம் கொடுங்காற்றினால் கலைந்து போய்விடுவதுபோல் ஒரு சிறிய ஆசுவாசத்தைத் தந்த மருத்துவரின் வருகை ஏமாற்றத்துடன் முடிவதாகக் காட்டியிருக்கலாம். அவர்கள் ஒரு மருத்துவரின் வருகையை பெரும் விடுதலையாக நினைத்துக் கொண்டிருக்க, அது மேலும் ஒரு படி அவர்களைக் கீழே தள்ளிவிடுவதாக அவர்களுடைய வேதனையை இன்னும் அதிகரித்துக் காட்டவே செய்யும். க்ளைமாக்ஸுக்கு கூடுதல் கனம் கிடைக்கவே செய்யும். ஆனால், பாலா அப்படி சிந்தித்திருக்கவில்லை.
அல்லது மதமாற்றத்தின் மீதான வலுவான விமர்சனத்தை முன்வைக்க விரும்பினால், அந்த மருத்துவரின் சேவை மனப்பான்மைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குறுகிய மனோபாவத்தை கலை அழகுடன் அதாவது இயல்பாகச் சித்திரித்திருக்கவேண்டும். இந்த இரண்டும் செய்யாமல் அந்த மருத்துவரைக் கோமாளியாக்கியதன் மூலம் படத்தை மிகவும் கீழிறக்கிவிட்டிருக்கிறார்.
பரதேசி திரைப்படத்துக்கான டீஸரையும் அதற்கு முன்பாக வெளியான படத்துணுக்குகளையும் பார்த்தபோது மனிதர்களை வைத்து வேலை வாங்குவதில் பாலா கில்லாடி என்பது நன்கு வெளிப்பட்டிருந்தது. பாலாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் மட்டும் கிடைத்தால் ஓர் அருமையான படத்தை அவரால் தந்துவிடமுடியுமே என்ற ஆதங்கமே படத்தைப் பார்த்து முடித்ததும் ஏற்பட்டது.
0