Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பாலா!

$
0
0

balaபரதேசி படம் குறித்து இணையத்தில் பலவிதமான விமரிசனங்கள், விவாதங்கள் வலுத்துவருகின்றன. குறிப்பாக எழுத்தாளர்கள் இப்படம் பற்றிய தனது நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். படம் எப்படியுள்ளது என்று பேசுவதற்கு முன் விமரிசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். பரதேசி படத்துக்கான விமரிசனம் பெரும்பாலும் இரண்டு வகைகளாக இருக்கின்றன.

ஒன்று: இந்தப் படத்தையும் அதன் மூலப் பொருளாகச் சொல்லப்படும் ’எரியும் பனிக்காடு’ புத்தகத்தையும்  ஒப்பிட்டு படத்தின் பலவீனங்களைக் குறிப்பிடுவது.

இரண்டு : இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேதனைகளை உணர்த்துகிறது என்ற ஒற்றை வரிக்காக படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்வது.

இவ்விரண்டு குறிப்புகளையும் மறந்து ஒரு படமாக, ஒரு கலைப் படைப்பாக  பரதேசி படம் எப்படி இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை.

முதல் விஷயத்துக்கு வருவோம். படத்தைவிட நாவல் உண்மைக்கு அருகிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நாவல் படமாகும்போது நாவலை ஒரு அளவுகோளாக (பென்ச்மார்க்) எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒப்பிட்டுக் குறை கூறுவது சரியான பார்வையாக இருக்காது. நாவலைப் படமாக்கிய எத்தனைப் படங்கள் கதையை, கதை நடையை   மாற்றாமல் அமைக்கப்பட்டன? நாவலைப் படமாக்கி வெற்றி பெற்ற எத்தனைப் படங்கள் நாவல் தரும் முழு உணர்வுகளைத் தந்தன? எண்ணிப் பார்த்தால் படத்துக்கு இணையாக நாவலுக்கும் விமரிசனங்கள் இருக்கக் கூடும்.

படத்தை ஒப்பிட்டுப் பார்த்து நாவலைப் புகழ்ந்து பேசும் வழக்கம் இங்கு அதிகமிருக்கிறது. சொல்லப்போனால் படத்தின் குறைகளை மற்றும் லாஜிக்கல் பிழைகளைக் குறிப்பிட்டு நாவலைப் புகழ்பவர்கள் அனைவரும் இந்நாவலை படம் வெளியான பின்னர் தான் படித்திருக்கிறார்கள். இப்படம் வெளியான பின்னர் தான் நாவல் பற்றிய விமரிசனங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. நம் சூழலில் புத்தகங்கள் எவ்வளவு கவனிக்கப்படுகின்றன, பேசப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். நாவல் வேறு, படம் வேறு. படத்தில் உள்ள கதைப் பிழைகள், தர்க்கரீதியான பிழைகள் அனைத்தும் சரியாக இருந்தாலும் இதனை நாவலோடு ஒப்பிட்டுக் குறை கூறுபவர்களின் பார்வை மாறாது, மாறியிருக்காது என்பதே உண்மை.

அடுத்தது படத்தைப் புகழ்பவர்கள் பக்கம் வருவோம். உண்மையில், படத்துக்கு மக்களிடையில் கிடைத்த வரவேற்பு ஆச்சர்யம் அளிக்கிறது.  மக்களுக்கு இவ்வளவு பொறுமை எப்போது வந்தது? பிறகுதான் காரணம் புரிந்தது. மக்களின் விமர்சனம் சில template க்குள் நுழைந்துவிட்டது.  ‘இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்கள் நிறைந்த வாழ்வைச் சொல்லும் உண்மைக் கதை’. இந்த ஒற்றை வாக்கியம் மட்டும்தான் அதைப் புகழ்வதற்குக் காரணம். அதாவது இப்படியொரு வரலாற்றுச் சம்பவமே நடக்கவில்லை என்றாலோ அல்லது தேயிலை தொழிலாளர்கள் யாரும் வேதனைப் படுவதில்லை என்றாலோ இந்தப் படம் படு தோல்வி என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல், ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகன் இந்தப் படத்தை கன்னாபின்னா என்று திட்டியிருப்பான்.

இன்னும் சிலர் படத்தை விமரிசிக்க பயப்படுகிறார்கள். துயரப்படுபவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தை நல்லாயில்லை என்று சொல்லலாமா?

பரதேசிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு இன்னொரு முக்கியக் காரணமும் உள்ளது. மக்களின் ரசனை fact-க்கு அடிமையாகிக் கிடக்கிறது. இரண்டு கதைகளை சொல்லும் படம், அகோரிகளைப் பற்றிச் சொல்லும் ஒரே படம், மலைவாழ் மக்களின் வாழ்வைச் சொல்லும் ஒரே படம், முதன் முதலில் இந்த இசைக் கருவியை உபயோகித்த இசை. முதன் முதலில் இந்த நாட்டில் அமைக்கப்பட்ட இசை. இது போன்ற கவர்ச்சிகரமான வாக்கியங்கள் அவர்களை ஈர்க்க போதுமானதாக இருக்கின்றன. படைப்பைப் பற்றிய கருத்துகளை இவையே முடிவு செய்துவிடுகின்றன.

என்னைப் பொருத்தவரை, உலக அளவில் சிறந்த படங்களாகப் பேசப்படும் Life is Beautiful மற்றும் The Motorcycle Diaries ஆகியவையே இவ்வளவு பாராட்டுகளுக்குத் தகுதியானவை. இவை இரண்டுமே சாதாரணப் படங்கள்தான். ஆனால் உலக அளவில் இவ்வளவு புகழ்ந்து பேசப்படுவதற்கான ஒரே காரணம் இப்படங்களின் கதை வரலாற்று உண்மைகளைச் சார்ந்து உள்ளன. உலகளவில்  ரசிகர்களுக்கு இப்படியொரு பார்வை இருக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

உண்மைக் குறிப்புகளைப் பற்றியும் தர்க்கப் பிழைகள் பற்றியும் அனைவரும் பேசிவிட்டதால் நான் அவற்றைப் பேசப் போவதில்லை. இது போன்ற குறிப்புகளை விடுத்து ஒரு படமாக பரதேசி எப்படியுள்ளது என்று பார்ப்போம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் மகிழ்ச்சியான கிராமத்துக் காட்சிகள் அனைத்தும் மற்ற எந்த படங்களிலும் வரும் சாதாரண நகைச்சுவைக் காட்சிகளை ஒத்தவைதான். அவை தனித்துவம் மிகுந்தவை என்று நினைக்க வைப்பதற்கு தமிழ் சினிமாவின்  monotonous போக்குதான் காரணம். மற்றபடி படத்தின் முதல் அரை மணி நேரத்தில் பாராட்டும்படியாக எதுவுமில்லை.

அதற்கு பிறகு இன்னும் மோசம்.  சோகம் நிறைந்த உண்மைக் கதையைச் சொல்லும் படம் என்பது சரி தான். அதற்காக படம் தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோகமோ மகிழ்ச்சியோ இல்லை வேறு எந்த வகையோ படத்தை எதாவது ஒன்று நகர்த்திச் செல்ல வேண்டும். அது பரதேசியில் இல்லை. சோகத்தைச் சொல்லும் படங்கள் எவ்வளவோ உள்ளன. அவை எல்லாம் சுவாரஸ்யமற்ற படங்கள் ஆகிவிடவில்லை. சுவாரஸ்யம் என்றால் கதைக்கு தேவையில்லாமல் தனியே திணிக்கப்படும்  கமர்ஷியல் அம்சங்கள் அல்ல.

Apocalypto, Schindler’s List போன்ற படங்கள் முழுக்க முழுக்க சோகம் மற்றும் கொடுமைப் படுத்துதல் சார்ந்த படங்கள் தான். ஆனால் அவற்றில் நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்லக் கூடிய திரைக்கதை இருந்தன. பரதேசியில் அப்படி எதுவுமில்லாமல் சோகம் என்ற ஒன்று மட்டுமே தட்டையாக வெளிப்படுகிறது.

ஒரு ஆசிரியரிடம் அடி வாங்கி வேதனைப்படும் சிறுவனைப் பற்றிய ஒரு படம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாள் மாணவன் வருகிறான். ஆசிரியர் அவனை நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். இரண்டாம் நாள் வருகிறான். அதே நடக்கிறது. மூன்றாவது நாளும் அதே. இப்படியே ஒரு மாதம் முழுவதும் நடப்பது போல் காட்டுகிறார்கள். அதோடு படம் முடிந்துவிடுகிறது. எப்படி இருக்கும்? கடைசியில் இது உண்மையில் ஒரு புகழ் பெற்ற சுதந்தரப் போராட்டத் தியாகியின் வாழ்வில் நடந்த கதை என்று  சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அது தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படம் ஆகிவிடுமா? அவ்வளவு வேண்டாம் ஒரு நல்ல படம் ஆகிவிடுமா? அப்படித் தான் இருக்கிறது பரதேசி மீது பொழியும் பாராட்டு மழைகள்.

கதைக்கரு எந்த உணர்வைக் கொண்டுள்ளதோ அவ்வுணர்வைப் பார்வையாளனுக்கு அளிக்கும் பங்கு படத்தின் திரைக்கதைக்கு உள்ளது. சோகத்தை அதுவும் இது போன்ற ஒரு வரலாற்றுச் சோகத்தை வடிவமைக்கும்போது அதில் நேர்த்தி இருக்க வேண்டும். கதைக்குள் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வலிமை படைப்பில் இருக்க வேண்டும். கதையின் ஓட்டமும் படத்தின் முடிவும் மனதுக்குள் உறுதியான விளைவுகள் ஏற்படுத்த தவறிவிட்டன என்பதே யதார்த்த உண்மை .

‘அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் சினிமா பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டிருக்கும். படம் இக்கேள்விக்கான பதிலை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது கேள்வியை மறக்க வைக்க வேண்டும். ‘அடுத்தது எதுவும் இல்லை’ என்கிற பதிலோடு ஒரு மணி நேரம் படம் நகர்வது தப்பே இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் ரசிகன் அந்த ஒரு மணி நேரமும் இந்தக் கேள்வியை மறந்திருக்க வைப்பது படத்தின் பொறுப்பு. பரதேசி அதில் பெரிதும் தடுமாறியது.

ஒரு கலைப் படைப்பாக இப்படத்தில் பாலா பெரிதும் தடுமாறியிருக்கிறார் அல்லது தோற்றிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால், இப்படத்தின்மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களையும் சேர்த்தே அடுத்த படத்திலிருந்து அவர் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே கடினமான உண்மை.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!