Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

சொல்வதெல்லாம் உண்மை – ஒரு திருடன் போலிஸ் கதை

$
0
0

burglar
அன்று எனது அலுவலகத்தில் மிகுந்த பணிச்சுமையோடு அல்லாடிக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் அவர். நடு வயதினர். தன்னை ஒரு வழக்கறிஞரின் வாகன ஓட்டுனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். வாகன ஓட்டுனருக்கான தோற்றம் அவரிடத்தில் இருந்தது (இங்கு விதண்டாவாதமாக ‘வாகன ஓட்டுனருக்கு அப்படியென்ன தனித் தோற்றம்?’ என்று வினவினால் என்னிடம் விடை இல்லை). தமது முதலாளியின் கணினி பழுதடைந்து விட்டது என்றும், என்னை வந்து பழுது நீக்கித் தர முடியுமா என்றும் வினவினார். என்னால் வரமுடியும், ஆனால் அன்று வர முடியாது மறுநாள் தான் முடியும் என்று கூறி, அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அனுப்பி வைத்தேன். அடுத்தடுத்த பணியினால், அவர் வந்து சென்றதை அறவே மறந்து விட்டேன்.

மூன்றாம் நாள், முதல் நாள் வந்த அதே நேரத்துக்கு மீண்டும் வந்தார். அவரைக் கண்டவுடன் தான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஒரு வாடிக்கையாளரிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத குற்றவுணர்ச்சியுடன், உடனே வருகிறேன் என்று கூறி அவருடன் கிளம்பினேன். எனது அலுவலகம் ஒரு வணிகக் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்தது. கீழே வந்தவுடன் அவர் தனது (அதாவது வழக்கறிஞரின்) வாகனத்தைக் காண்பித்து, அதில் போக்குவரத்து நெரிசலில் செல்வதை விட, எனது இரு சக்கர வாகனத்தில் செல்வது இலகுவாக இருக்கும் என்று சொன்னார். எனக்கும் அது சரியென்றே பட்டது. மேலும் அவரது இடம் எனது அலுவலகத்திலிருந்து ஒரு இரண்டு கி.மீ தொலைவு மட்டுமே இருந்தது. எனவே இருவரும் எனது இ.ச வாகனத்தில் கிளம்பினோம்.

சற்று நேரத்துக்குள் நாங்கள் அடைய வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அலுவலகம் பூட்டியிருந்தது. நகரின் சற்று நெருக்கடியான இடம். வணிகமயமாக்கலில் வெகு சில வீடுகளே அங்கு எஞ்சியிருந்தன. அந்தத் தெரு முழுவதும் கடைகள். வாகனம் நிறுத்த இடமில்லை.என்னை அழைத்து வந்தவர், “சார்; என் போன்ல சார்ஜ் இல்ல, உங்க போன குடுங்க, சார்ட்ட பேசணும்” என்று எனது கைபேசியை வாங்கி தனது முதலாளியிடம் நாங்கள் வந்திருக்கும் விபரத்தையும், அலுவலகம் பூட்டியிருப்பதையும் கூறினார். பின்னர்  சற்று நிறுத்தி விட்டு, “வீட்ல சாவி குடுத்துருக்காறாம், நான் போய் சாவி வாங்கீட்டு வந்துர்ரேன். அங்கிட்டு அந்த முக்குப் பக்கம் கொஞ்சம் இடமிருக்கும் பாருங்க. நிப்பாட்டிட்டு வந்துருங்க” என்று பக்கத்து சந்துக்குள் சென்றார். நானும் வண்டியை நிறுத்தி விட்டு அலுவலக வாசலுக்கு வந்தேன். 5..10..15 நிமிடங்கள் சென்றன. இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆள் கம்பி நீட்டி விட்டான். வெகு அன்மையில்தான் `மிகுந்த` பொருட்செலவில் வாங்கியிருந்தேன் அந்தக் கைப்பேசியை.

அவன் நுழைந்த சந்துக்குள் நுழைந்தேன். சற்று தொலைவில் ஒரு அம்மா அமர்ந்திருந்தார்கள். அவரிடம், ஆள் அடையாளத்தைக் கூறி, பார்த்தாரா, அங்கு எதுவும் வழக்கறிஞர் வீடு உள்ளதா என்று வினவினேன். உடனே அவர் என்னிடம் “செல் போன் எதுவும் குடுத்தீங்களா?” என்று திரும்ப வினவினார். ஆமாம் என்றதும், “இப்பத்தான்யா  இங்கிட்டு ஓடுனான். இதுவரைக்கும் ரெண்டு பேர இந்த மாதிரி ஏமாத்திட்டான்” என்றார்.

சில நிமிடங்களுக்கு திக்கு திசை தெரியவில்லை. சற்று சுதாரித்துக் கொண்டு, எனது நண்பரைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னை அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி விட்டு, சற்று நேரத்தில், ஒரு வழக்கறிஞருடன் வந்தார்.

உள்ளே நுழைந்து தென்பட்ட காவலரிடம், கைபேசி திருடு கொடுத்துவிட்டதாகக் கூறியவுடன், அவர், “ஒரு நாளைக்கு 10,20 போன் காணா போகுது; இதுக்கெல்லாம் கம்ப்ளெயிண்டா? ச்சும்மா விடுப்பா” என்று மிகவும் அசிரத்தையாகக் கூறினார். அளவில் சிறியது, விலை குறைந்தது என்றால் அதனை யார் வேண்டுமானாலும் திருடிக் கொள்ளலாமா? அவர் கூறியது போலவே குறைந்தது 10 என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், ஒருநாளைக்கு திருடு போகும் கைபேசிகளின் மதிப்பு மட்டும் என்ன? இதே போன்று மற்ற மலிவுத் திருட்டுகள் எவ்வளவு? இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், காவலரின் வேலை தான் என்ன? மேலும் ஒரு பொருளின் பண மதிப்பு மட்டும் தான் மதிப்பா?

ஒரு தனி மனிதன் தனக்கான தொடர்புகள் அனைத்தையும், இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் இது போன்ற பொருட்களில் தானே வைத்திருப்பான்? அவையனைத்தையும் இழந்தால் அவற்றை அவன் திரும்ப எப்படிப் பெறுவான்? குறிப்பாக என்னைப் போன்ற சுயதொழில் செய்வோருக்கு அந்தத் தொடர்புகளின் மதிப்பு இன்னும் பன்மடங்கல்லவா? இவ்வினாக்களையெல்லாம்,  நடைமுறையில், ஒரு காவலரிடம் நாம் வினவிடத் தான் முடியுமா?

எனது கைப்பேசியின் மதிப்பு சற்று அதிகம் தான். எனது தொழில் கணினி என்பதால், எனது வேலைக்கு உதவுமென்பதால், அது ஒரு கைபேசி மட்டுமல்லாமல் ஒரு கையடக்கக் கணினியாகவும் இருந்தது. பணமதிப்பைக் கூறியவுடன், சரி ஒரு வெள்ளை பேப்பர்ல எழுதிக் குடு என்றார். கொடுத்தவுடன், அதனை அப்படியே எழுத்தரிடம் கொடுத்தார். புகாருக்கு ஒப்புகை (receipt/acknowledgement) கேட்டேன். ஏண்டா அற்பப் பதரே என்ற தொனியில் ஒரு பார்வையை என் மீது வீசி, அப்பிடியெல்லாம் குடுக்க முடியாது, நீ அப்பப்ப வந்து கேட்டுக்க என்று எங்களை அனுப்பி வைத்து விட்டார். வழக்கறிஞர் வந்து ஒரு பயனும் இல்லை.

பின்னர் திருடு கொடுத்த இடத்துக்கு, நானும் எனது நண்பரும் மட்டும் வந்தோம். அங்கு அவருக்கு சில கடைகாரர்களைத் தெரிந்திருந்தது. அவர்களிடம், மீண்டும் விசாரித்தோம். ஒரு பயனும் இல்லை. அங்கு மீண்டும் இது போல ஏதாவது சம்பவம் நடந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டு திரும்பினோம்.

அவ்வப்போது காவல் நிலையத்துக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். அங்கு கைபேசி திருடு கொடுத்த இன்னொரு அப்பாவியையும் சந்திக்க நேர்ந்தது. அவரிடமும் என்னிடம் திருடிய அதே நபர் அதே முறையில் திருடியிருக்கிறான். இந்த முறையில், இதே நபரிடம் திருடு கொடுத்த நான்காவது நபர் நான். என்னைப் போலல்லாமல், அவருடைய கை பேசி, விலையில் மிகக் குறைவு. நான் மேற்கூறிய காரணங்கள் போக, அது அவருக்கு மிகவும் பிடித்தமான மற்றும் ராசியான கைபேசியாம். அவர் சற்று அப்பாவியானதால், தங்களது அனைத்து சிறு செலவுகளுக்கும் (தின்பண்டங்கள், வெள்ளைத் தாள், பேனா, பென்சில் …) அவரை ஏவிவிடுவார்கள் (ஆசைப்படக்கூடாது என்று ஞானியர் கூறி வந்ததின் பொருள் அன்று புரிந்தது). இந்தச் சங்கடங்களுக்காக நான் அங்கு செல்வதைக் குறைத்துக் கொண்டேன். அவ்வபோது தொலைபேசியில் அழைத்து நிலவரங்களை விசாரித்துக் கொள்வேன்; பெரிதாகப் பலன் இல்லையென்றாலும்.

என்றாலும், வேறு உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பருக்கு, கைபேசியின் IMEI எண்ணை வைத்து அது எங்கு பயன்படுத்தப்படுகிறது என்று கண்டடையலாம் என்று யாரோ ஆலோசனை கூற, என்னையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றார். வழக்கமான அசிரத்தையான பதில்களுக்குப் பின் அந்த ஆலோசனையை என் நண்பர் நிலைய ஆய்வாளரிடம் கூறியவுடன் ஆய்வாளருக்கு மிகுந்த ஆத்திரம் வந்து விட்டது. “ஓ ஒனக்கு எல்லாம் தெரியுமோ? எனக்கே யோசனை சொல்றியா? அப்பிடீன்னா நீயே கண்டுபுடிக்க வேண்டியது தானே? இங்கே எதுக்குய்யா வர்ர?” என்று கடுமையாகப் பேச ஆரம்பித்தார். நிலைமையை உணர்ந்து, நண்பரைச் சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்து விட்டேன்.

ஓரிரு நாட்களில் மற்றொரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்நேரம் எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போது, எனது கைபேசியை அவர் கவனித்து விட்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன் எனது பழைய கைப்பேசி பற்றி வினவினார். நடந்ததைக் கூறியவுடன், தனது மாமனார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் (AC) உதவியாளராக பணியாற்றுவதாகவும், து.க விடம் முறையிட்டால் எதுவும் பலன் கிட்டலாம் என்றும் கூறி என்னைப் பற்றி தனது மாமனாரிடம் பரிந்துரைத்தார். அவரும் ஓரிரு நாட்களில் து.க வைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்தார்.

து.கவைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல், அங்கு எனது வேறொரு நண்பரைக் காண நேர்ந்தது. அவர் ஒரு அரசியல் பலம் மிக்க முன்னணி நாளிதழில் தலைமை நிருபராகப் பணியாற்றுபவர். விவரம் கேள்விப்பட்டவுடன், தானும் து.க வைச் சந்திக்கப் போவதாகவும், என்னைத் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றார். நண்பர், து.க விடம் தனது வேலை முடிந்தவுடன், எனது இக்கட்டை எடுத்துக் கூறினார். து.க மிகவும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டார் (நிருபருக்குண்டான மதிப்பு எனக்கும் பொசிந்தது). கைப்பேசியின் விலையைக் கேட்டவுடன், அவருக்கு என்னுடைய தீவிரம் முழுமையாகப் புரிந்தது. புகாருக்கு எதுவும் ஒப்புகை கொடுத்தனரா எனக் கேட்டு இல்லையென்பதை அறிந்து கொண்டார். உடனே அந்த நிலைய ஆய்வாளரை தொலைபேசியில் அழைக்கச் செய்து, எனது புகார் நிலவரங்களைக் கேட்டறிந்தார். அவரிடம் பேசி முடித்தவுடன், என்னிடம், அந்த ஆய்வாளரே அழைப்பார் என்றார்.

வழக்கமாக நான் அழைத்தால் அசிரத்தையாகவும், எரிச்சலாகவும் பேசும் ஆய்வாளர், அன்று மாலை என்னை அழைத்தார். மிகவும் பண்பாகப் பேசினார். ஏன் என்னை பத்திரிக்கைத் துறை தொடர்புடையவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார். அன்று மாலை நிலையத்துக்கு வரச் சொன்னார். அங்கு சென்ற போது அதுவரை போலல்லாமல் எனக்கு தனி மரியாதை கிட்டியது. தனியாக ஒரு புதிய புகாரை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். புகார் கொடுத்தவுடன், உடனே அதற்கு ஒரு ஒப்புகையும் கொடுத்தார். அப்போதிலிருந்து காவல் நிலையத்துக்கு எப்பொழுது சென்றாலும், எனக்கு தேநீர், தின்பண்டங்கள் என்று விருந்தோம்பல் பலமாக இருக்கும். ஆனால் பொருள் தான் கிட்டியபாடில்லை.

ஒருநாள் எனக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அழைத்தது, நான் திருடு கொடுத்த இடத்துக்கு அருகேயுள்ள கடைக்காரர். அதாவது, என்னை முதன் முதலில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நண்பருக்குத் தெரிந்தவர். கைப்பேசித் திருடன் பிடிபட்டுவிட்டதாகவும் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறினார். உடனே அங்கு விரைந்தேன். அங்கு சென்றவுடன், திருடன் பிடிபட்டுவிட்டான் என்பதை விட அது எனக்கு எப்படித் தெரியும் என்பது ஆய்வாளருக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அது பற்றி அவர் தீவிரமாக விசாரித்தும் நான் சமாளித்தேன். திருடனிடம் அழைத்துச் சென்றனர். அவனேதான். என்னைக் காட்டி என்னுடைய கைபேசியைத் திருடினானாவென்று வினவ அவனும் ஒத்துக் கொண்டான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று ஒரு படம் பார்த்திருந்தீர்கள் என்றால், அதில் நாசருடைய படக் கருவியைத் (camera) திருடும் பாத்திரத்திலே நடித்திருப்பாரே, ஒருவர்? அதே தோற்றம் தான்.

திருடன் கிடைத்து விட்டான், திருடு கொடுத்த பொருள் கிடைத்து விட்டது. கதைதான் முடிஞ்சு போச்சே என்று எண்ணுகிறீர்களா? கொஞ்சம் பொறுமை காக்கவும்.

முதலாம் நாள் காவல் நிலையத்தில் திருடனுக்கு தரும அடி. திருடப்பட்டது பத்துக்கும் மேற்பட்ட கைப்பேசிகள். வந்தது நான்கோ ஐந்தோ புகார்கள். கைப்பேசிகள் அனைத்தும் கண்டறியப்பட்டன. குறிப்பாக என்னுடையது உள்ளூர் கடையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு, எந்தத் தாமதமுமில்லாமல், உடனடியாக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மென்பொருளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. யாரந்த கடைகாரர், அவருக்கு இது தான் தொழிலா, வேறு மேல் விபரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. முறையிடாதோர் கைப்பேசிகளெல்லாம் அங்கேயே  பங்குபோட்டுக் கொள்ளப்பட்டன.

இரண்டாம் நாளிலிருந்து திருடன், பெயருக்குத்தான் திருடன். அவனும் நிலையத்தார்களில் ஒருவனாகி விட்டிருந்தான் (பங்காளிகளாகி விட்டனரே!). வேளாவேளைக்கு சாப்பாடும், தேநீர், தின்பண்டங்களும் – அனைத்தும் திருடு கொடுத்தவர் ஒருவரின் செலவிலேயே. என்னிடம் நொந்து கொண்டார் – “நம்மள்ட்ட திருடுனவனுக்கு நம்மளே பணிவிடை செய்ய வேண்டியுருக்கு”.

பொருட்கள் அனைத்தையும் நீதிமன்றத்திலே கண்பித்து, அங்கு `சம்பிரதாயங்கள்` முடிந்தவுடன்தான் மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைப்பார்களாம். ஏட்டு தினமும் கைப்பேசியில் அழைத்து விடுவார். நாம் அங்கு சென்று வந்திருக்கும் காவலர் அனைவருக்கும், தேநீர் மற்றும் சில்லரை செலவுகளுக்கு மொய் வைக்க வேண்டும். ஆனால் அன்று நமது வழக்கே விசாரணைக்கு வராது. என்னவென்று கேட்டால், தான் வரும்போது, நிலையத்திலிருக்கும் அனைத்து வழக்கு விபரங்களையும் கொண்டுவந்து விடுவாராம். வழக்கு தொடர்புடைய அனைவரும் (வேலை வெட்டியை விட்டு விட்டு) வந்து விட வேண்டுமாம். திடீரென்று வழக்கு விசாரணைக்கு வந்து விட்டால், அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமாம். இவ்வாறாக ஒரு மூன்று வாரம் நொங்கெடுத்தார்கள்.

ஒரு நட்பு வேளையிலே ஏட்டு அவர்கள், “உங்களோட போன் அதிக விலை. அதனால ஒரு வக்கீல் வச்சுக்குங்க; அப்பத்தான் வேலை நடக்கும்” என்றார். மூவாயிரத்துக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டேன். கைப்பேசி புகார் கொடுத்திருந்தவர்களனைவரும் ஒன்று சுயதொழில் செய்பவர்கள் அல்லது வெட்டியாக இருப்பவர்கள். அலுவலகம் செல்லும் ஒருவர் இவ்வாறான புகார் ஓன்றைக் கொடுத்தால் அவருடைய நிலை? எனவேதான் எவரும் `போலீஸ், கோர்ட்` என்று போவதற்கே அஞ்சுகின்றனர் போல்.

வழக்கறிஞர் வைத்துக் கொண்ட பின்னர், எனது வழக்கறிஞர், என்னை வரவேண்டாமென்றும், தான் அழைக்கும் போது வந்தால் போதும் என்றும் சொல்லி விட்டார். பின்னர் எனது வழக்கறிஞர் அழைத்து ஒரே ஒருமுறை மட்டும் நீதிமன்றம் சென்றேன். நீபதியம்மாக்கு முன், திருடனுக்கு எதிரே, கூண்டில் நிறுத்தப்பட்டேன். அரசு வழக்கறிஞர், புகார் விபரங்களை முழுதும் வாசித்தார். இறுதியில், “இவர்தான் திருடினாரா?” என்ற ஒற்றை வினாவுக்கு, “ஆம்” என்ற ஒற்றை விடையுடன் வழக்கு முடிவுக்கு வந்தது. திருடன் பிடிபட்டபின் ஒன்றரை மாதம் சென்று சற்று செய்கூலி,சேதாரத்துடன் எனது கைபேசி என்னிடம் வந்தடைந்தது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், திருடு கொடுத்த நாங்கள் வீடு – கா.நி – நீ.ம என்று ஒன்றரை மாதம் அலைக்கழிக்கப்பட்டோம். திருடன், ஒரே ஒரு முறை மட்டும் நீ.ம அழைத்து வரப்பட்டான்.

எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லவில்லையே? திருடன் எப்படிப் பிடிபட்டான்? நடந்தது என்ன?

அன்று, திருடன் பிடிபட்ட முதல் நாள், என்னை, திருடனைக் காட்ட அழைத்துச் சென்றபோது, கிடைத்த இடைவெளியில் அவனிடம் கேட்டேன் “எப்பிடிய்யா எங்கிட்ட திருடனும்னு உனக்கு தோணிச்சு?”. அவனுடைய பதில்  “இப்பிடியே நடந்து போகும்போது பாத்துட்டே போவேன் சார். ஏதாவது கம்பீட்டர் இல்ல எல்ட்ரானிஸ் கம்பேனி போ(ர்)டு தென்பட்டுச்சுன்னா உள்ள போய் பேச்சு குடுத்துட்டே பாப்பேன் சார். ஏன்னா இந்த மாதிரி கம்பீட்ட்ர் எல்ட்ரானிஸ் கம்பேனி வச்சுருக்குருவங்க/அதுல வேல பாக்குறவங்க போன்லாம் நல்லா வச்சுருப்பாஙக.”

இவ்வாறாக திருடப்பட்டதில் பெரும்பாலானோர், ஒரே துறையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் (துரதிஷ்டவசமாக – அல்லது அதிஷ்டவசமாக – என்னுடன் தொடர்புடைய யாரும் இவனிடம் மாட்டவில்லை). என்னைப் போல் திருடு கொடுத்த ஒருவர் (இவரும் கா.நி வந்து, மற்ற பாதிக்கப்பட்டவர்களிடம் அனுபவத்தைப் பகிர்ந்து, அனைவரும் ஒரே முறையில் ஒரே இடத்தில் வைத்து, ஒரே நேரத்தில் திருடு கொடுத்தவர்கள் என்ற விவரத்தை அறிந்தவர்) தான்  திருடு  கொடுத்ததை தனது நண்பரிடம் புலம்ப, திருடனின் மிகக் கெட்ட நேரம், மறுநாளே அந்த இரண்டாவது நபரை அதே முறையில் அணுக, இந்த இரண்டாம் நபர் சுதாரித்துக் கொண்டு மறுநாள் திருடனை வரச்சொல்லிவிட்டு, எப்போதும் அவன் வழக்கமாக அழைத்துச் செல்லும் இடத்தில் ஆட்களை ஏற்பாடு செய்து விட்டார். இதையறியாத திருடன் அதே இடத்தில், தனது அதே அணுகுமுறையைக் காட்ட, பிடிபட்டு அந்த இடத்திலேயே ‘செமத்தியாக கவனிக்கப்பட்டு’ காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், முதல் 2,3 திருட்டுக்களிலேயே திருடனைப் பிடித்திருந்திருக்கலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். அனைத்தும் ஒரே நபரால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே முறையில் திருடப்பட்டிருக்கிறது. திருடனைப் பிடிக்க எந்த ஜேம்ஸ்பான்ட் வேலையும் தேவையில்லை. இன்னும் கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், திருடு போனது பத்தோ மேற்கொண்டோ கைபேசிகள். வந்தது ஐந்தோ ஆறோ புகார்கள். புகார் வராத மற்ற கைபேசிகள் என்னவாயின? இந்தத் திருட்டுப் பொருளை வாங்கிய உள்ளூர் ‘வணிகர்’ சென்னை ‘வணிகர்’ என்று எவரும் கண்டு கொள்ளப்படவில்லை. எதுவும் விளங்கிற்றா?

இது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தால், அது எப்படி ஒரு திருடன் எல்லாரையும் அதே இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் அதே மாதிரி, அதுவும் அதே நேரத்தில் திருடுவான்? இவ்வளவு தூரம் plan பண்றவன் இதக் கூட யோசிக்க மாட்டானா?” என்று `logic’ கேள்விகள் கேட்கப்பட்டு கண்டவாறாக விமரிசிக்கப்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது நமது அன்றாட வாழ்வில் நடப்பவை சில திரையில் கூட காண முடியாத சுவாரசியம் கொண்டவையாக, நம்பமுடியாதவையாக அமைந்து விடுகின்றனவே?

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!