Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

ஆணாதிக்கமும் பெண்ணுரிமையும்

$
0
0

8185828679மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 25

‘ஆணாதிக்கக் கருத்துகளும் வர்ண (சாதி) ஆதிக்கக் கருத்துகளும் கொண்டது’ என்பதுதான் மனு ஸ்மிருதி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க மனோபாவமும் சாதி அல்லது வர்க்கம் சார்ந்த ஏற்றத்தாழ்வும் எல்லா சமூகங்களிலும் இயல்பாக இருந்த ஒன்றுதான். பழங்குடி சமூகங்கள் மொழி, தேசம், இனம், மதம் என எந்த அடையாளத்தின் கீழ் அணிவகுத்த போதிலும் இந்த உணர்வுகளே எல்லா சமூகங்களிலும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. இந்து சாதிய வாழ்க்கையைப் பார்த்த மேற்கத்தியர்கள் இங்கு நிலவும் ஆணாதிக்க, சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பிற இடங்களில் நிலவும் அத்தகைய மனோபாவத்தோடு பொருத்திப் பார்த்து ‘மனித இயல்பு இப்படியாகத்தான் இருக்கிறது. நவீன உலகுக்குள் நுழையும்போது இவற்றில் பெரும்பாலானவை காலத்துக்கு ஏற்ப மாறும்’ என்ற புரிதலுடன் அணுகியிருந்தால் இந்து சாதிய வாழ்க்கைபற்றிய அவர்களுடைய மதிப்பீடுகள் வேறாக இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் இந்தியாவில் இருந்து தோன்றிய அரசியல், சமூக சிந்தனையாளர்களாவது இந்து சாதிய வாழ்க்கையை மனித குலத்தின் பிற சமூக வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நியாயமான முடிவை எடுத்திருந்தால் இந்து சாதிய வாழ்க்கை இந்த அளவுக்கு இழிவானதாக அவர்களுக்குத் தோன்றியிருக்காது. ஆனால், துரதிஷ்டவசமாக சாதிய வாழ்க்கை குறித்த அப்படியான ஒரு மதிப்பீடு உருவாகியிருக்கவில்லை.

மேற்கத்தியர்கள் இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க, சாதிய உணர்வுகளை இந்து உயர் வர்க்கத்தினரின் சதியாகக் காட்ட விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு ‘வேத புத்தகம்’ தேவையாக இருந்தது. அப்படியான ஒன்றாக மனு ஸ்மிருதியை உருவாக்கி எடுத்தார்கள். மனு ஸ்மிருதி மூலம் கிடைத்த மத (?) அங்கீகாரமே பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட அனைத்து தீங்குகளுக்கும் தார்மிக வலுவைத் தந்ததாக அவர்கள் புதிய கண்டுபிடிப்பை முன்வைத்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை அவர்கள் பார்த்திருந்ததால், இந்தியாவிலும் அப்படியான ஒரு பெரிய மத அமைப்பு இருந்திருக்கவேண்டும்; அதுதான் இவை அனைத்தையும் செய்திருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினார்கள். அப்படியாக, இந்து மதம் என்று ஒற்றைப்படையான மதத்தையும் மனு ஸ்மிருதியை அதன் மூல நூலாகவும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டார்கள். அதை வழிமொழிந்தபடி நம் தேசத்தில் பலர் முளைத்தெழுந்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் அம்பேத்கர். அவரைப் பொறுத்தவரை இந்திய வரலாறென்பது பெருமளவுக்கு பவுத்த – பிராமணப் போராட்டமே. இஸ்லாமியர்களால் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டதைவிட அதிக அழிவு பவுத்த இந்தியாவுக்கு பிராமணர்களால் வந்தது என்று கூறுகிறார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் பவுத்தம் அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் இருவரையும் பிராமண மதம், மனு ஸ்மிருதியை உருவாக்கிக் கட்டம் கட்டித் தாக்கியதாகச் சொல்கிறார் (மது, மாமிசத்தை அறவே விலக்கச் சொன்ன பவுத்தம் சூத்திரர்களுக்கு எந்த அளவுக்கு உவப்பாக இருந்திருக்கும் என்பதும், துறவை லட்சியமாக வைத்த பவுத்தம் பெண்களுக்கு என்ன விடுதலையைத் த்ந்திருக்கும் என்பதும் அம்பேத்காருக்கு மட்டுமே தெரிந்த உண்மை).

அப்படியாக உலகின் பிற இடங்களில் இயல்பாக இருந்த ஒரு விஷயம் இந்தியாவில் இருந்ததற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவின் சதிதான் காரணம் என்ற புதிய கோட்பாடு வெகு உற்சாகமாக உருவாக்கப்பட்டது. இது உண்மையாக இருந்திருக்குமென்றால், பெண்களும் சூத்திரர்களும் கைகோத்திருந்தால் இருவருமே ‘விடுதலை’ அடைந்திருக்க முடியும். எண்ணிக்கையில் அவர்களே மிகவும் அதிகம். ஆனால், அப்படியான ஒன்று நடக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தம்முடைய நிலையை நம் இன்றைய முற்போக்காளர்கள் சொல்வதுபோல் வேதனை நிறைந்ததாக நினைத்திருக்கவில்லை. சிறையில் இருந்தால்தானே விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.

சொத்துரிமை இல்லை; விரும்பிய வேலையைச் செய்யும் சுதந்தரம் இல்லை; சமையல், குழந்தை பராமரிப்பு என வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்ந்துவிட்டது; விரும்பிய ஆணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை; கணவன் இறந்தால் மறுமணம் செய்துகொள்ள வழியில்லை… என பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பல விஷயங்களை மனு ஸ்மிருதியைக் காரணம் காட்டிப் பட்டியலிடுவார்கள். இவை எந்த அளவுக்கு உண்மை என்பதையும் மனு ஸ்மிருதி எப்படியான தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் பார்ப்போம்.

முதலாவதாக, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான ஒடுக்குமுறைகள் இரு பிறப்பாளர்களுக்கு அதாவது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டவையே. சூத்திரர் பிரிவில் வரும் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்தரமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதாவது, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பவற்றுக்கு உட்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விவாகரத்து, பல புருஷ விவாகம் போன்றவற்றில் ஆரம்பித்து சதி கொடுமையில் ஈடுபடுத்தப்படாததுவரை சூத்திர ஜாதிப் பெண்கள் மேலான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொழில் சார்ந்து வெளியில் செல்வது சகஜமாக இருந்திருக்கிறது. விவசாயத்தில் ஆரம்பித்து சலவைத் தொழில், மண் பாண்டங்கள் செய்தல் எனப் பெரும்பாலான தொழில்களில் சூத்திர ஜாதிப் பெண்கள் ஆணுக்கு சமமாகப் பங்கெடுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுமணம் செய்துவைக்கவில்லை என்பது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது பிராமண ஜாதியில் மட்டுமே அதிகமாக இருந்திருக்கிறது. அவர்களிலும் திருமணம் செய்து கொண்டவர்களில் இளம் வயதில் கணவனை இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து பத்து சதவிகிதம் இருக்கலாம். பிராமணர்களின் எண்ணிக்கையே ஒட்டு மொத்த பெண்களின் விகிதத்தில் மூன்றுக்கு அதிகம் இருக்காது. அந்த மூன்று சதவிகிதத்தில் வெறும் பத்து சதவிகிதம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் விகிதத்தை எடுத்துப் பார்க்கும்போது மிக மிகக் குறைவாகவே இருக்கும். மறுமண மறுப்பு மிகவும் கொடூரமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், புறக்கணிக்கத் தகுந்த அளவிலான பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒன்றாக பூதாகரமாக்கியதில் எந்த நியாயமும் இல்லை.

மேலும், இளம் பெண்ணுடைய கணவன் இறந்துவிடுவதால் ஒரு பிராமணக் குடும்பத்தில் மறுமணமே செய்துவைக்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் சூத்திர ஜாதியைச் சேர்ந்த ஒருவரிடம் நீங்கள் என்னை மணந்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தால் வைதவ்ய சோகத்தில் இருந்து அவர் எளிதில் வெளியேறியிருக்க முடியும். சூத்திரர் குலமும் அடைக்கலம் கேட்டு வந்த பெண்ணைத் தன் தலைக்கு மேல் வைத்து தாங்கியிருக்கும். பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூத்திரரும் தன்னம்பிக்கை அதிகம் பெற்று சுய மரியாதை மிகுந்தவராக வெகு எளிதில் மேல் நிலை அடைந்திருக்க முடியும். பிராமண எதிர்ப்பெல்லாம் சூத்திரர்களின் வலிமைக்கு முன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே, இங்கும் சிறையின் சாவி அடைபட்டுக் கிடந்தவரின் இடுப்பில்தான் இருந்திருக்கிறது.

பெண்களுக்கு இறை வழிபாட்டுச் சடங்குகளில் கணிசமான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. வேதம், காயத்ரி மந்திரம் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பிற வழிபாடு சார்ந்த ஸ்லோகங்கள், பாடல்கள் கற்றுக்கொள்ள பிராமணப் பெண்களுக்கு எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. தாய்த்தெய்வ வழிபாட்டில் முளைப்பாரி எடுப்பதில் ஆரம்பித்து, பால் குடம், தீ மிதித்தல் என அனைத்திலும் பெண்களுக்கு சிறப்பான இடம் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதோடு இல்லறத்தில் இருக்கும் எந்தவொரு ஆணும் தன் மனைவி இல்லாமல் எந்தவொரு சடங்கையும் செய்ய அனுமதி கிடையாது. மனு ஸ்மிருதி பெண்களை எதிலும் ஒதுக்கவில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது திருமணச் செலவுகளோடு, வரதட்சணை, சீர் வரிசை என கணிசமான தொகை பெண்ணுக்குத் தந்து அனுப்பப்படும். அது கணவன் கைக்குத்தான் போகிறது என்றாலும் தந்தையைப் பொறுத்தவரையில் அவர் தன் மகளுக்கு சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து அனுப்பத்தான் செய்கிறார். நகையாகத் தரப்படுவதை அந்தப் பெண்தான் அணிந்துகொள்கிறாள். நிலமாகவோ பணமாகவோ பிற வழிகளில் வந்து சேர்வதையும் அவள் அனுபவிக்கத்தான் செய்கிறாள். எனவே, சொத்தில் உரிமையே இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது.

இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை உரிமைகள் என நவீன உலகைச் சேர்ந்த நாமாக ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்வதைவிட மனித இனம் தனது இயல்பான நகர்வில் எதைக் கண்டடைந்திருக்கிறதோ அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். நடந்து செல்லும்போது வழியில் ஒரு மேடு இருந்தால் அதில் ஏறிக் கடப்பது ஒருவகை. அதைச் சுற்றி வளைந்து செல்வது இன்னொருவகை. இரண்டில் எது சரி என்பது ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த இயல்பு சார்ந்தது. முதலாவதுதான் சரி… இரண்டாவது தவறு என்று சொல்வது எப்போதும் சரியாக இருப்பதில்லை. இயற்கையில் ஒருவித சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக, சில உயிரினங்கள் தாவர உண்ணிகளாகவும் சில மாமிச உண்ணிகளாகவும் இருப்பதுபோல் சமூகச் செயல்பாடுகளில் ஆண்கள் வீட்டுக்கு வெளியிலான வேலைகளையும் பெண்கள் வீட்டுக்குள்ளான வேலைகளையும் பிரித்துக்கொண்டு செய்து வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் எளிதான வேலையே தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் அது அவர்களுக்குக் கிடைத்த வரம்தான்.

அடிப்படையில் சமையல் தொழிலும் ஒருவகையான கலையே. அதிலும் சுவையான உணவின் மூலம் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தரமுடியக்கூடிய சந்தோஷமானது வேறு எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் மன நிறைவுக்கும் பெருமிதத்துக்கும் சற்றும் குறையாததுதான். எனவே, சமையல், குடும்பப் பராமரிப்பு போன்ற பணிகள் பெண் மீது திணிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியானவையே. எந்தவொரு செயலையும் செய்வதா… வேண்டாமா என்று தேர்ந்தெடுப்பதற்கான சுதந்தரம் ஒருவருக்கு இருக்கவேண்டுமென்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், சுதந்தரம் இல்லை என்பதனாலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று நமக்குப் பெரும் சுமையாகிவிடுவதுமில்லை.

நமது உடல் நம்முடைய விருப்பத்தைக் கேட்டுத் தரப்பட்ட ஒன்றல்ல. நம்மில் சிலருக்குச் சிறகுகள் வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு நீரில் மூழ்கி வாழ ஆசை இருக்கலாம். மனித உடலில் கூட உயரமாக இருக்கவேண்டும். அழகாக இருக்கவேண்டும். ஆரிய நிறமாக, திராவிட நிறமாக இருக்கவேண்டும் என்று பல ஆசைகள் இருக்கக்கூடும். ஆனால், மனித உடலானது நம் விருப்பத்தின்படித் தேர்ந்தெடுக்க முடிந்த ஒன்றல்ல. அப்படியிருந்தும் நம்மீது திணிக்கப்படும் உடலை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லையா? இயற்கை நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடத்தைப் பயன்படுத்தி சமூக விதிமுறைகளையும் ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அவருக்கு வேதனை நிரம்பியதாகத்தான் இருந்தாகவேண்டுமா என்ன? இருப்பதை வைத்து வாழத் தெரிந்தவருக்கு இல்லாதது குறித்த ஏக்கம் இருக்காது.
மனு ஸ்மிருதியின் தாக்கம் பற்றிப் பேசும்போது இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பெண் சிசு கொலை என்ற கொடூரச் செயல் நடைபெற்றுவந்திருக்கிறது.

பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே கொன்றுவிடவேண்டுமென்று மனு ஸ்மிருதியில் எந்த இடத்திலும் சொல்லியிருக்கவில்லை. மனு ஸ்மிருதியில் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தியிருப்பதால்தான் தமிழகக் கிராமப்புறங்களில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் ஊற்றியும் நெல் மணியைக் கொடுத்தும் கொன்றதெல்லாம் ஒரு பெண்தான். பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்களிடமிருந்து குழந்தை இல்லாத தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்திருந்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்ந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் சாதியினரில் குறிப்பாக பிராமணர்களில் இது இல்லை என்பதால், பிரிட்டிஷ் மற்றும் அவர்களுடைய தாக்கத்தால் முற்போக்கு வாசகங்களை முழங்கியவர்களுடைய கடைக்கண் பார்வை இந்தத் தீய செயலின் மீது விழவே இல்லை.

பெண் குழந்தையைப் பிறந்த உடன் கொல்லும் ஒரு சமூக வழக்கமும் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஒரு புத்தகமும் நம்முன் இருக்கிறது. பெண்களின் பரிதாபமான நிலைதான் நமது விமர்சனத்தின் அடிப்படைக் காரணம் என்றால், நிச்சயம் பெண் சிசு கொலைதான் அதிதீவிரத்துடன் எதிர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தியப் பொதுபுத்தியில் அது தொடர்பான எந்தவொரு பெரிய சலனத்தையும் பிரிட்டிஷ் காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் நாம் பார்க்கவே முடிவதில்லை. ஆனால், மனு ஸ்மிருதியை எரிக்க இந்தியாவில் எந்த மூலைக்குப் போனாலும் ஒரு ரெடிமேட் கும்பல் தயாராகவே இருக்கிறது. பிராமண ஜாதி தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு செழுமை அடையப் பாடுபடும் முற்போக்காளர்கள் பிற ஜாதியினரை மேம்படுத்துவதிலும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது.

பெண் குழந்தையைப் பிறந்த உடனே கொல்லும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும் ‘திராவிட’ சமூகம், பெண்களைக் கல்வி கற்க விடாமல் தடுக்க மட்டும் ‘ஆரிய’ ஸ்மிருதி ஒன்றின் அங்கீகாரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்குமா? இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி மனு ஸ்மிருதி ஏன் இங்கு அமலாகவில்லை? (மனு ஸ்மிருதியின் விதிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது மிகையாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுபவர்கள் அதைவிடக் கொடிய ஒரு விஷயத்தை கண்டும் காணாததுபோல் தாண்டிச் செல்வதில் இருக்கும் அரசியலை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை இங்கு குறிப்பிடுகிறேன்).

பெண்களை ஆண்கள் நடத்தும் விதத்தைப்பற்றிச் சொல்லும்போது அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அடிமையை நடத்துவதற்கும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கான முடிவுகளைத் தானே எடுப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அடிமையை நடத்தும் விதத்தில் அடிமைக்கு துன்பம் விளைவிக்கும் தன்மையே அதிகமாக இருக்கும். பெண்களை ஆண்கள் நடத்திய விதத்தில் அப்படியான விளைவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். சர்வாதிகாரத்துக்கும் நல்லெண்ண சர்வாதிகாரத்துக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவைத் தானாகவே எடுக்கும் தந்தை தனது அனுபவத்தின் அடிப்படையிலும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் புரிதல் உள்ளவர் என்ற வகையிலும் பொறுப்பின் அடிப்படையிலும்தான் அதைச் செய்கிறார். இங்கே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், தந்தை மூலம் அமைத்துத் தரப்படும் வாழ்க்கையானது அப்படியொன்றும் வாழ முடியாததாக இருப்பதில்லை.

மணமகனின் பொருளாதார நிலையில் ஆரம்பித்து அவனுடைய குண நலன்களை அலசி ஆராய்ந்துதான் திருமணம் செய்துவைக்கிறார். அவருடைய கணிப்புகள் பொய்யாக வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் நல்லெண்ணத்தில்தான் அதைச் செய்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் வரத்தேவையே இல்லை. எனவேதான் கடந்த காலத்தில் பெண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய பெண்ணிய அளவுகோலைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை அளந்து பார்த்தால், அது நரகம்போல் தோன்றக்கூடும். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அது வேறுவிதமாகத்தான் இருந்திருக்கும்.
மேலும், பெண்ணின் சம்மதத்தைக் கேட்காமல் திருமணம் தீர்மானிக்கப்பட்டதைப்போலவே ஆணின் விருப்பத்தையும் நேற்று யாரும் கேட்டிருக்கவில்லை. குடும்பத்தலைவர் தன் குழந்தைகளுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து செய்து தரத் தெரிந்தவர் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் அனைவருக்கும் இருந்தது. எனவே, ”சுதந்தரம்’ என்பது பெண்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டிருக்கவில்லை.

வீட்டு வேலை தவிர பிற வேலைகளைச் செய்ய அனுமதி கிடைத்திருக்கவில்லை என்பது பெரிய குறையே அல்ல. ஏனென்றால் நேற்றைய உலகில் அனைவருமே தமக்கென நிச்சயிக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். இன்றைப்போல் விதவிதமான வேலைகள் இருந்திராத அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்குமே இருந்திருக்கவில்லை. ஒரு உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்துவருவதுபோல் சமூகத்தின் ஒவ்வொரு வேலைகளை ஒவ்வொரு பிரிவினர் செய்துவந்திருக்கிறார்கள். எனவே, வீடு என்பது சிறையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெளியில் இருந்து பாதுகாப்பு தரும் இடமும்கூட. வீட்டுக்குள் செய்துவரும் வேலைகள் உங்களுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தரும்பட்சத்தில் அல்லது உங்கள் மனத்தை வீட்டு வேலைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முடிந்தபட்சத்தில் ஒருவர் தன் வாழ் நாளின் பெரும்பாலான காலத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் கழித்துவிடுவதில் எந்தப் பெரிய வேதனையும் இருந்திருக்க முடியாது.

பெண்ணுரிமை பேசும் அனைவரும் தமது பாட்டிகள் கொள்ளுபாட்டிகளிடம் ஒரு சில மணி நேரங்களைக் கழித்தால் பல உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். அந்த வாழ்க்கையில் அவர்களுக்கான பல சந்தோஷத் தருணங்கள் இருந்திருக்கின்றன. பெண்கள் தமக்கு இருக்கும் இயல்பான வசீகரம், அன்பு, பொறுமை, தியாக குணம், தாய்மை, சில நேரங்களில் பெண்ணாதிக்கம் இவற்றின் மூலம் குடும்பத்தில் பெற முடிந்த மதிப்பும் மரியாதையும் எந்த ஸ்மிருதியாலும் மறுக்கப்படமுடியாததுதான். மகளாக இருந்தபோது தந்தையாலும், மனைவியாக இருந்தபோது கணவராலும், தாயாக இருக்கும்போது மகனாலும் பாதுகாக்கப்படும் ஒரு பெண் சுதந்தரத்தை இழந்திருக்கக்கூடும். ஆனால், சந்தோஷத்தை இழந்ததாக நிச்சயம் சொல்ல முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்த கால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். இதில் தன்னைப் பாதிக்கப்பட்டவராகச் சொல்வதெல்லாம் மிகவும் அதீதமானது. உண்மையில் அந்த வாழ்க்கைக்கு அவர்கள் எளிதில் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே பறந்து திரிவதற்கான இறகுகள் உண்டு என்றாலும் எல்லாப் பறவைகளுமே கூட்டைச் சுற்றிய பகுதிகளுக்குள்ளாகவே தம்முடைய பறத்தலை நிறுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எந்தப் புற நிர்பந்தமும் இருப்பதுமில்லை.

இன்று இந்து/இந்திய சமூகம் பெண்களுக்கு பல தளங்களில் சம வாய்ப்புகளைத் தந்துவருகிறது. பெரிய போராட்டம் எதுவும் தேவைப்படாமலே இன்று பல கதவுகள் எளிதில் அகலத் திறந்திருக்கின்றன. நேற்றைய பெண்களிடமும் அந்த சமத்துவக் கோரிக்கை இருந்திருக்கவில்லை. எனவே, தட்டாத கதவு திறக்கப்படாததில் பெரிய வலி இருந்திருக்க முடியாது. தன்னைவிட வலிமையானவராகத் தான் கருதும் ஒருவருக்கு அடுத்தபடியில் இருக்க சம்மதிப்பது ஒருவர் மிகவும் இயல்பாகச் செய்யும் செயலே. அங்கு மேலே இருப்பவர் மீது மதிப்பும் மரியாதையும் விசுவாசமும் இருந்தாலே போதும். அடக்குமுறை தேவையே இல்லை. சார்ந்திருக்கும் வாழ்க்கையிலும் சந்தோஷம் உண்டு.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!