முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.
பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.
அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.
0
மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.
உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.
அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.
மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.
இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.
நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.
போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.
ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.
ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.
0
இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்…ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.
0
ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும் ‘சாதி’ என்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால் ‘மாப்பிள்ளை’ என்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.
கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.
13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.
மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.
வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.
0